"எங்கள் வாயில் கடைசி பாலை ஊற்றப் பார்க்கிறது ஆவின்' என்று மனம் குமுறுகிறார்கள் சேலம் மாவட்ட விவசாயிகள்.
என்ன நடந்தது?
சேலம் அருகே உள்ள தளவாய்ப்பட்டியில் 1984-ஆம் ஆண்டு முதல் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இதற்காக 1979-ஆம் ஆண்டு, சித்தனூர், தளவாய்ப்பட்டி, ரொட்டிக்காரன் வட்டம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 44 விவசாயிகளுக்குச் சொந்தமான 54 ஏக்கர் விவசாய நிலம் கைப்பற்றப்பட்டது.
இந்த நிலங்களுக்கு அன்றைய கைடுலைன் மதிப்பின்படி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட் டது. நிலம் வழங்கியவர்களில் 25 குடும்பத்தினருக்கு மட்டும் வீடு கட்டிக்கொண்டு வசிக்க தலா 3 சென்ட் பரப்பளவில் வீட்டு மனைகளை ஆவின் நிர்வாகம் இலவசமாக வழங்கியது.
ஆனால், 43 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த வீட்டு மனைகளின் அடிநில உரிமை, ஆவின் நிறுவனத்திடமே இருக்கிறது. இலவசமாகப் பட்டாவும், கிரயமும் செய்து தருவதாக உறுதி யளித்த ஆவின், இன்றுவரை அதைச்செய்யாமல் விவசாயிகளை அலைக்கழித்து வருகிறதாம்.
இது தொடர்பாக, ஆவின் பால் பண்ணைக்கு நிலம் வழங்கி பாதிக்கப்பட்டோர் சங்க ஒருங் கிணைப்பாளர் சிவராமன் நம்மிடம்,’"ஆவினின் பால் பவுடர் தொழிற்சாலை தொடங்குவதற்குத் தான் ஆரம்பத்தில் எங்கள் ஊர் மக்களிடம் நிலம் கையகப்படுத்தினார்கள். ஆர்ஜிதம் செய்தபோது, நிலத்தில் யார் யாருக்கு வீடு இருந்ததோ அவர் களுக்கு உடனடியாக வீட்டு மனைகளும் இலவச மாக ஒதுக்கினர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அப்போது இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு இயக்குநர்களுள் ஒருவராக இருந்தார்.
இந்த மனைகளுக்கு ஆவின் நிர்வாகமே இலவச கிரயப் பத்திரம், பட்டா வழங்குவதாகவும், நிலம் வழங்கிய குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்குவதாகவும் அப்போது உறுதிமொழி அளித்தது. நிலம் கொடுத்த 44 விவசாயிகளில் 25 குடும்பத்தினருக்கு மட்டும் மொத்தம் 38 மனைகள் வழங்கப்பட்டன. எஞ்சிய 19 குடும்பத்தினருக்கு ஏன் வீட்டு மனைகள் வழங்கவில்லை என்பது தெரியவில்லை. வீட்டுக்கு பட்டாவோ, கிரயப் பத்திரமோ இல்லாததால் நிலம் கொடுத்த விவசாயிகளால் பிரதமர் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்திலும் வங்கிக் கடனுதவி பெற முடியவில்லை. அதேபோல் வாரிசுகளுக்குச் சொத்தைப் பிரித்துக் கொடுக்க முடியாமலும், வேறிடங்களுக்கு புலம்பெயர்ந்து செல்ல முடியாமலும் பலர் தவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஆவின் சிறப்பு ஆணையருக்கு, சேலம் ஆவின் தரப்பில் இருந்து பல்வேறு கால கட்டங்களில் மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. கடந்த 2-12-2019-ஆம் தேதி, சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தோம். அப்போது ஆவின் பொது மேலாளராக இருந்த விஜய்பாபு, எங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரும் ஆணையருக்கு கடிதம் எழுதுவதாகச் சொன்னார். அதன்பின் என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் எதுவும் மாற வில்லை. கடைசி முயற்சியாக கடந்த 16-5-2022-ஆம் தேதி, முதல்வரின் தனிப்பிரிவு முதல், சேலம் மாவட்ட ஆட்சியர் வரை அனைவருக்கும் கோரிக்கை மனு அளித்திருக்கிறோம். எனவே, சிறப்புத் திட்டத்தின் கீழ் போராடும் மக்களுக்கு பட்டா, கிரயப் பத்திரம் வழங்க தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார் ஆதங்கமாய்.
நிலம் கொடுத்த விவசாயிகளுள் ஒருவரான சரோஜாவோ, "எங்கள் பையனுக்கு பொண்ணு பார்க்கப் போனபோது, பட்டா இல்லாமல் புறம் போக்கு நிலத்தில் வசிக்கும் உங்களுக்கு பொண்ணு தர மாட்டோம் என்றதும் எங்கள் மனது வலித்தது. எங்கள் வீட்டுக்கு புதிய மின் இணைப்பு பெற முயன்றபோது, ஆவின் நிர்வாகத்திடம் இருந்து என்.ஓ.சி. சான்றிதழ் வாங்கி வரும்படி சொல்கின்றனர். ஆவின் எங்கள் வாயில் பாலூற்றப் பார்க்கிறது'' என்றார் கலக்கமாய்.
அலங்காரம்மாள், மயில் வேல், துரைசாமி ஆகியோர் கூறுகையில், "எங்களுக்கு கொடுத்த மனையில் வீடு கட்டியிருந்தாலும் அதுக்கு கரண்டு வாங்க முடியலைங்க. இதுவரை கலெக்டரிடமும், ஜமாபந்தியிலும் பலமுறை மனு கொடுத்துட்டோம். மீண்டும் சாக்குபோக்கு சொல்லி இழுத்தடித்தால், நாங்கள் ஆவினில் குடியேறும் போராட்டத்தை நடத்துவோம்''’ என்றனர் கொதிப்புடன்.
இந்த நிலையில், ஜூன் 7ம் தேதி, சேலம் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி தலைமையில் நிலம் கொடுத்த குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடந்தது. ஆவின் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், அடுத்த 30 நாள்களுக்குள் பட்டா கிடைக்க உரிய ஏற்பாடுகள் செய்வதாக உறுதி அளித்திருக்கிறார்கள். பட்டா வழங்க 43 ஆண்டுகள் தாமதம் ஆனதற்கு வருவாய்த்துறை அலுவலர்களை கோட்டாட்சி யரும் கடிந்து கொண்டார்.
இது தொடர்பாக பேச, சேலம் கோட்டாட் சியர், பால்வளத்துறை ஆணையர் பிரகாஷ் ஆகியோரை செல்போனில் பலமுறை அழைத்தும் அவர்கள் ரெஸ்பான்ஸ் செய்யவில்லை.
சேலம் ஆவின் பொது மேலாளர் ரவிக்குமாரிடம் கேட்டபோது, "ஆவின் நிறு வனத்திற்கு நிலம் வழங்கிய குடும்பத்தினருக்கு இலவச மனைகள் வழங்கியுள்ளோம். அவர்களுக்கு பட்டா, கிரய பத்திரம் வழங்க எதனால் இவ்வளவு காலம் தாமதம் ஆனது என்று தெரியவில்லை. பால்வளத்துறை ஆணையருக்கு கடிதம் எழுதி இருக்கிறோம்'' என்றார்.
நிலம் கொடுத்த விவசாயிகளை பரிதவிக்கவிடலாமா ஆவின்?