பர்மாவை "மியான்மர்' என்று பெயர் மாற்றிய அரசாங்கம், மக்களின் நிலையை மாற்றிடவில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜனநாயக ஆட்சியை 1960-ஆம் ஆண்டு கலைத்தது இராணுவம். அன்று முதல் 2015-வரை 55 ஆண்டுகள் இராணுவ ஆட்சிதான். திறந்தவெளி சிறையாகவே மியான்மர் இருந்தது.
மியான்மரின் தந்தை என அழைக்கப்படுபவர் ஆங் சாங். அவரது மகள் சூகி, தேசிய ஜனநாயக லீக் என்கிற கட்சியை 1988ல் தொடங்கி சர்வாதிகார ஆட்சியாளர்களை எதிர்த்து போராட துவங்கியதும் மக்கள் அவர் பின்னால் திரண்டனர். இதனால் பயந்து போன இராணுவ ஆட்சியாளர்கள் 1989ல் சூகியை வீட்டுச்சிறையில் வைத்தனர். 21 ஆண்டுகள் வீட்டுச்சிறையில் இருந்தபடி போராடினார் சூகி. உலகநாடுகளின் அழுத்ததால் 2015 நவம்பர் மாதம் ஜனநாயக முறையிலான பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் இராணுவத்தின் ஐக்கிய சகோதரத்துவ மேம்பாட்டு கட்சியும், ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயக கட்சியும் போட்டியிட்டது. சூகி கட்சி பெரும் வெற்றி பெற்றது. வெளிநாட்டுக்காரரை மணந்தவர் என்பதால் அவர் அதிபராக சட்டம் இடம்தரவில்லை. இதனால் அரசின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆலோசகர் என்கிற பதவியை உருவாக்கி அதில் சூகி அமர்ந்து ஆட்சி செய்தார்.
இராணுவத்தின் அதிகாரத்தை நாட்டில், நிர்வாகத்தில் படிப்படியாக குறைந்தார். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஐந்து ஆண்டுக்கு பின் 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 396 இடங்களில் சூகியின் கட்சியை வெற்றி பெறவைத்தனர். இராணுவ ஆதரவு கட்சி 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சூகியின் பிரமாண்ட வெற்றியை இராணுவம் ஏற்க வில்லை.
2021 பிப்ரவரி 1-ஆம் தேதி மியான்மர் இராணுவத்தின் ஜெனரல் மின் ஹங் ஹ்லேங், "நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறவில்லை, இதனால் நாட்டில் ஓராண்டுக்கு இராணுவ ஆட்சி அமல்படுத்தப் பட்டுள்ளது. ஓராண்டுக்குபின் சரியான முறையில் தேர்தல் நடத்தப் பட்டு வெற்றி பெறுகிறவர் களிடம் ஆட்சி ஒப்படைக்கப் படும்'' என அறி விக்க, நாட்டின் நிர்வாகத்தை இராணுவம் எடுத் துக்கொண்டது. சூகி, அதிபர் வின் மென்ட், எம்.பிக்கள், அரசியல் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், ஜனநாயகவாதிகள் என 10,600 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 1,303 பேர் போலீஸாரால் கொல்லப்பட்டுள்ளனர் என்கிறது அரசியல் கைதிகள் கண்காணிப்பு குழு.
சூகி மீது மக்களிடம் வெறுப்பை உருவாக்கினால்தான், தங்கள் விருப்பம்போல ஆட்சியில் உட்காரலாம் என இராணுவ அதிகாரிகள் நினைக்கின்றனர். இதற்காக தேர்தல் களத்துக்கு சூகி வரமுடியாத அளவுக்கு அவர் மீது வழக்குகளை போடுகிறது. சூகி ஆட்சியின் ஊழல்கள், நாட்டின் ரகசியங்களை கசியவிடுதல், கொரோனா விதிமுறை மீறல் என 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இராணுவ ஜெனரல் மின் ஹங், தன்னைத்தானே பிரதமராக அறிவித்துக்கொண்டவர். முன்பு நாட்டை நிலைமையை சீர் செய்துவிட்டு, ஓராண்டில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தவர்... இப்போது "2023 ஆகஸ்ட் வரை அவசரகால நிலை நீட்டிக்கப்படும்' என பேசியிருப்பது, நாட்டில் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கைது செய்து பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்து, கும்பல் கும்பலாக எரித்துள்ளது காவல்துறையும், இராணுவமும்.
இந்நிலையில் சூகி, முன்னாள் அதிபர் வின் மைன்ட்க்கு தலா 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்துள்ளது நீதிமன்றம். நெருக்கடி நிலை சட்டம் அமலில் உள்ள நிலையில், நீதிமன்றம் உட்பட அனைத்தும் இராணுவ கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. சூகிக்கு 100 ஆண்டுகள் சிறைத்தண்டனை வாங்கித் தரவேண்டும்மென இராணுவ ஆட்சியாளர்கள் முடிவு செய்துள்ளார்கள் என்கிறார்கள் சூகியின் என்.எல்.டி கட்சியினரும், சூகி வழக்கறிஞர் கின் மங்சாவ்வும். இந்த தீர்ப்பை கண்டித்து சூகி ஆதரவாளர்கள் டிசம்பர் 6-ஆம் தேதி போராட்டம் நடத்தினர். இதில் 11 பேரை சுட்டுக் கொன்றுள்ளது போலீஸ்.
ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரூஸ், மியான்மரில் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டுமென வேண்டுக்கோள் விடுத்துள்ளார். கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி ஐ.நா.வின் பொது அதிகார சபை கூடி, மியான்மர் விவகாரத்தை தீவிரமாக ஆலோசனை நடத்தியுள்ளது. தங்களின் இராணுவ ஆட்சிக்கு ஆதரவளிக்க வேண்டுமென மியான்மர் வெளியுறவுத்துறை அமைச்சரான வூனா மங் லிவின் உலகின் ஒவ்வொரு நாடாக சென்று ஆதரவு திரட்டிவருகிறார்.
ஜனநாயக மலர் மலர முடியாத ராணுவப் பாலைவனமாக மாறியிருக்கிறது மியான்மர்.