தமிழக சட்டமன்றத்தில் மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கடந்த சனிக்கிழமை பேசிய நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்,’"பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தனிநபர் ஒருவருக்கு 2 லட்சம் ரூபாய் வருடத்துக்கு செலவாகிறது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 50,000 தான் செலவாகிறது. அதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை''’என்று தெரிவித்திருக்கிறார்.
நிதியமைச்சரின் இந்த அறிவிப்பு 10 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. அனைத்து அரசு ஊழியர் சங்கங்களும் கொந்தளித்துக் கிடக்கின்றன.
இந்த நிலையில், நிதியமைச்சரின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் தவறானது என்கின்றன அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள். இது குறித்து நம்மிடம் பேசிய புதிய பென்சன் திட்ட ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ப்ரடெரிக் ஏங்கெல்ஸ்,‘"நிதியமைச்சர் சொல்கிற புள்ளி விவரங்களுக்கு எந்த ஆதாரமும் கிடையாது. எதன் அடிப்படையில் அப்படி சொன்னார் என்பதை அவர் விளக்க வேண்டும். இதுகுறித்து நேருக்கு நேர் விவாதிக்க அவர் தயாரென்றால் அவர் சொன்னது தவறு என்பதையும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசுக்கு பல ஆயிரம் கோடிகள் லாபம் கிடைக்கும் என்பதையும் எங்களால் நிரூபிக்க முடியும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் குறிப்பிட்ட சதவீதம் தொகையை அரசு பிடித்தம் செய்துகொள்ளும். அரசின் பங்களிப்பு எதுவும் இருக்காது. அந்த அரசு ஊழியர் பணி ஓய்வுபெற்று விட்டால் அவரது சர்வீஸ் காலங்களைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட தொகையை பென்சனாக அரசு வழங்கும்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பென்சன் கிடையாது. அதற்கு பதிலாக, ஓய்வு பெறும் நாளில் ஒரு செட்டில்மெண்ட் தொகையைக் கொடுத்து அரசு அனுப்பி வைத்துவிடும். இதுதான் திட்டத்தின் சுருக்கம்.
புதிய பென்சன் திட்டத்தில் ஒரு அரசு ஊழியரிடம் மாதம் தோறும் 10 சதவீதத் தொகையைப் பிடித்தம் செய்கிறது மாநில அரசு. அதே 10 சதவீதத் தொகையை மாநில அரசும் மாதம்தோறும் செலுத்த வேண்டும். அரசும் அதன் ஊழியரும் பங்களிக்கும் இந்த திட்டத்தில் உள்ள அரசின் தொகைக்கு மாநில அரசு 7.1 சதவீத வட்டியும் தர வேண்டும்.
இந்தத் திட்டத்தின்படி இதுவரையில் உள்ள மொத்த தொகை 50,264 கோடி ரூபாய். ஆனால், அரசின் கொள்கைக் குறிப்பில் 53,000 கோடி என சொல்லப்பட்டுள்ளது. இந்த தொகையை டெல்லியில் உள்ள ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு டெபாசிட் செய்திருக்க வேண்டும். அனைத்து மாநில அரசுகளும் அப் படித்தான் டெபாசிட் செய்திருக்கின்றன. தமிழக அரசு மட்டும் டெபாசிட் செய்யவில்லை. மாறாக, தங்களின் பொதுக் கணக்கில் வைத்திருப்பதாகவும், அந்த 53,000 கோடியில் 41,000 கோடியை எல்.ஐ.சி.யிலும், 12,000 கோடியை ரிசர்வ் பேங்கிலும் வைத்திருப்பதாகவும் சொல்கிறது தி.மு.க. அரசு.
அந்த 53,000 கோடியில் தமிழக அரசின் பங்களிப்பு 50 சதவீதம். அதாவது, 26,500 கோடி. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தினால் இந்த 26,500 கோடியை, அரசு எடுத்துக் கொள்ளலாம். எங்களுடைய 26,500 கோடி ஜி.பி.எஃப்.க்கு மாறிவிடும். இதுமட்டுமல்ல, புதிய பென்சன் திட்டத்தில் அரசு செலுத்தியுள்ள வட்டித் தொகை சுமார் 1,800 கோடி ரூபாய்.
மேலும், அரசு செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகை 10 சதவீதத்தை 14 சதவீதமாக உயர்த்திவிட்டது மத்திய அரசு. அதனை மாநில அரசு ஏற்றுக் கொண்டாக வேண்டும். இதன் அரியர்ஸ் தொகை மட்டுமே 6,000 கோடி ரூபாய். இதெல்லாம் புதிய பென்சன் திட்டத்தினால் அரசுக்கு ஏற் பட்டுள்ள நிதிச் சுமை. ஆக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தினால் 34,300 கோடி ரூபாய் (26,500+1,800+6,000) உடனடியாக அரசுக்கு கிடைக்கும். அது லாபம் தானே! இதை வைத்து மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தலாமே!
பழைய ஓய்வூதியத் திட்டத்தில், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் பென்சன் கொடுக்கிற நிலை இருப்பதால் அரசுக்கு கூடுதல் செலவு என ஒரு காரணத்தைச் சொல்வார்கள். ஆனால், ஒரு அரசு ஊழியர் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் பென்சன் வாங்கி னாலே பெரிய விசயம். மொத்த பென்சன் தாரர்களில் 70, 80 வயதை கடந்து பென்சன் வாங்கு வது வெறும் 5 சதவீதம் பேர்தான். ஆனால், புதிய பென்சன் திட் டத்தில் ஒருவர் 25 வயதில் அரசு வேலையில் சேர்ந்தால் அந்த ஊழியரிடம் பிடித்தம் செய்யும் தொகைக்கேற்ப மாதந்தோறும் 14 சதவீத தொகை யை 35 ஆண்டு காலம் அரசு செலுத்தியாக வேண்டும்.
அதற்கு வட்டியும் கொடுக்க வேண் டும். இதையெல் லாம் கூட்டிக் கழித்துப் பார்த் தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை விட புதிய ஓய்வூதிய திட்டத்தில் சுமார் 30 சதவீதம் கூடுதல் செலவாகும். அதனால் பழைய பென்சன் திட்டம் தான் அரசுக்கு லாபம்''’என்கிறார் மிக அழுத்தமாக ஏங்கெல்ஸ்.
பழைய ஓய்வூதியத் திட்டம் தான் அரசுக்கு நல்லது என்பதை புள்ளிவிபரங்களுடன் நிதித்துறைக் கும் மனிதவள மேலாண்மைத் துறைக்கும் அரசு ஊழியர்கள் பலமுறை தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்கு அதிகாரிகள் கொண்டு சென்றதே இல்லை. குறைந்தபட்சம் அரசு ஊழியர் சங்கங்களை அழைத்து விவாதிக்கக் கூட நிதித்துறை அதிகாரிகள் அக்கறை காட்ட வில்லை.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இரு திட்டங்களில் அரசுக்கு எது நல்லது என்பதை ஆராய்ந்து அறிக் கை தருவதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழு எடப்பாடி ஆட்சி யின்போதே தனது ரிப்போர்ட்டை தாக்கல் செய்து விட்டது. ஆனால், இந்த ரிப்போர்ட் டை எடப்பாடி ஆட்சியும், தற் போதைய தி.மு.க. ஆட்சியும் பொதுப் பார்வைக்கு வைக்க தயாராக இல்லை.
பழைய பென் சன் திட்டம்தான் அரசுக்கு லாபம் என்பதை உணர்ந்து இந்த திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வருவ துடன் திட்டத்தில் சேர மறுத்து விட்டார் மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி. அதேபோல, ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநில அரசுகள், புதிய பென்சன் திட்டத்திலிருந்து விலகிவிட்டன. தங்களின் தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, பஞ்சாப் மாநிலத்தில் இதனை கொண்டுவருவதற்கான முயற்சியைத் தொடங்கி விட்டது ஆம் ஆத்மி அரசு.
ஆனால், கடந்த 2006, 2011, 2021 ஆகிய தேர்தல்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என தங்களின் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறது தி.மு.க. அந்த வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் விரும்பினாலும் அதிகாரிகள் தயாராக இல்லை. இதனால் ஏற்பட் டுள்ள அதிருப்திகள் அடுத்து வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என்கிறார்கள் அரசு ஊழியர்கள்.
__________________________
நிதி நெருக்கடியில் சிக்கியதால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-லிருந்து 60 ஆக உயர்த்தியது கடந்த அ.தி.மு.க. அரசு. அதைவிட மிக மோசமான நிதி நெருக்கடியிலும் வருவாய் பற்றாக் குறையிலும் தி.மு.க. அரசு சிக்கியிருப்பதால் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்தலாமா என கோட்டையில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஓய்வு பெற அனுமதிப்பதன் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசுக்கு தேவை 18,000 கோடி. இவர்களெல்லாம் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருப்பதால் அவர்களுக்கு பென்சன் வழங்க சுமார் 300 கோடி தேவை. மேலும் புதிதாக ஆட்களை நியமிக்கும் போது அவர்களுக்கு சம்பளம் கொடுக்க கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் தேவைப்படும். ஆக, சுமார் 19,000 கோடி தேவை. அதனால், ஓய்வு பெற அனுமதிக்காமல் 2 ஆண்டுகளுக்கு வயதை உயர்த்தி விட்டால் வருடத்துக்கு அவர்களுக்கு சம்பளமாக கொடுக்க 600 கோடிதான் தேவைப்படும். அதேசமயம், ஆண்டுக்கு சுமார் 18,400 கோடி என 2 ஆண்டுகளுக்கு 36,800 கோடி ரூபாய் செலவினத்தை தவிர்க்க முடியும். அதனால் ஓய்வுபெறும் வயதை உயர்த்தலாமா என ஆலோசித் திருக்கிறது தி.மு.க. அரசு.