தேசம் 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. ஆனால் ஒன்பது வருடமாகப் பென்ஷன் கேட்டுப் போராடி வருகிறார் சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகள் ஒருவர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டி நகரைச் சேர்ந்தவர் மாடசாமி. இவர் சிங்கப்பூரில் வேலை செய்துகொண்டிருந்த போது நேதாஜி சுபாஷ்சந்திரபோசின் ஐ.என்.ஏ. படையில் இணைந்து சுதந்திரப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

dd

Advertisment

1972-ன்போது அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக மாடசாமிக்குத் தாமிரப் பட்டயம் வழங்கிக் கௌரவித்தார். மாடசாமிக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும், ராமகிருஷ்ண போஸ், ராஜகோபால் என இரு மகன்களும், ராமஜெயம், இந்திரா என்று இரு மகள்களும் உள்ளனர். மற்றவர்கள் திருமணமாகிச் சென்றுவிட 2002-ல் தந்தை மாடசாமி காலமானார். திருமணம் செய்து கொள்ளாததால் இந்திரா, தன் வயதான தாய் வள்ளியம்மாளுடன் வசித் திருக்கிறார்.

இந்த நிலையில் 2013-ல் தாய் வள்ளியம்மாளும் வயது மூப்பு காரணமாக மரணமடைய, ஆதரவற்ற இந்திரா தனி யே வசிக்கிறார். இதையடுத்து, சுதந்திரப் போராட்டத் தியாகியின் வாரிசு என்ற அடிப்படையில் அவரின் வாரிசு வழி பென்ஷனுக்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மூலமாக மத்திய அரசின் தியாகிகள் பென்ஷன் துறைக்கு ஆவணங் களுடன் மனு செய்திருக்கிறார்.

9 ஆண்டாக அவரின் பென்ஷனுக் கான போராட்டம் முடிவின்றித் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதுகுறித்து அவர் சொல்வது, "“சுதந்திரப் போராட்ட தியாகின்ற வகையில் அப்பாவுக்கு மத்திய அரசின் சுதந்திர சைனிக் சம்மன் பென்ஷன் கிடைத்தது. அவரது மறைவுக்குப் பின் அவரது குடும்பத்தில் திருமணமாகாத பெண் இருந்தால் அவருக்கு பென்ஷன் உரிமை உண்டுன்னு விதியிருக்கு. முறைப்படி மத்திய அரசிடம் பென்ஷன் கேட்டு மனு குடுத்தேன். தாலுகா ஆபீஸ், முதல்வர் தனிப் பிரிவுன்னு பென்ஷனுக்கு பல தடவை மனு அனுப்பி னேன். பதில் இல்லை. மதுரை கோர்ட்டிலும் முறையிட்டேன். 2014-ல பென்ஷன் குடுக்கணும்னு தீர்ப்பாச்சு. மத்திய அரசுக்கு பென்சன் கேட்டு கலெக்டர் மூலமாகக் கடிதம் போச்சு. ஆனா அது தமிழ்ல இருக்கு. ஆங்கிலத்தில் கடிதம் அனுப்புங்கன்னு கேட்டப்ப, ஆங்கிலத்திலும் மத்திய பென்ஷன் துறைக்கு கடிதம் போச்சு. அப்புறமா சான்றொப்பம் இல்லைன்னாக அந்த ஆவணங்களும் வாங்கி அனுப்பி னோம். அப் புறமா மொத்தப் பென்ஷன் பேப்பர்களையும் அந்த துறை திருப்பி அனுப்பிடுச்சி. எனக்கு இடி இறங்கின மாதிரி ஆயிடிச்சி.

எனக்கு 51 வயசாவுது. உடம்புல பிரச்சினையிருக்கு. ஆபரேஷன் பண்ணியிருக்கு. வேலை செய்ய முடியல. சாப்பாட்டுக்கே கஷ்டம். ஆதரவில்லாத ஒண்டியான நான், ஹோட்டல்ல பாத்திரம் கழுவி 100 ரூவா கூலி வாங்கி கழிக்கேன். என்னோட கஷ்டத்தப் பாத்து வீட்டு உரிமையாளர் வாடகை கேட்கல. பணம் கெடைச்சாக் குடுன்னு நல்ல மனசோட சொன்னார். மத்த தியாகிகளோட வாரிசுக உதவியிலயும் பக்கத்து வீட்டுக்காரவுக உதவியிலயும் பிழைச்சிருக்கேன்.

ஒவ்வொரு சுதந்திர தின கொடியேற்றத்தன்னைக்கும் தியாகியோட வாரிசுன்ற முறையில் அழைக்கறாங்க. கலெக்டரும் சால்வை போட்டு வாழ்த்துறார். அது சாப்பாட்டுக்கு உதவுமா? அவங்க கேட்ட ரெக்கார்டுல்லாம் குடுத்திட்டேன். பென்ஷன கேட்டு தாசில்தார் ஆபீஸ், கலெக்டர் ஆபீசுன்னு வருஷக் கணக்குல அலைஞ்சே ஓய்ஞ்சு போயிட்டேம்யா. இனிமே என்னய சுதந்திரதினத்திற்குக் கூப்புடாதீக. அரசு மரியாதை வேணாம்னு சொல்லிட்டேன். வாழ முடியல. என்னயக் கருணைக் கொலை பண்ணிடுங்கன்னு ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் மனு அனுப்பிருக்கேன்'' ’என்றார் தொண்டை அடைக்க வேதனை யோடு.

இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் நலச் சங்கத்தின் கோவில்பட்டி தாலுகா செயலாளரான செல்வம், “"அதிகாரிகளின் அலைக்கழிப்பி னால்தான் தகுதியிருந்தும் நூற்றுக்கணக்கான வர்கள் பென்ஷனுக்கு விண்ணப்பிக்கல. முன்னாள் படை வீரர்களுக்கு நல வாரியம் இருப்பது போன்று சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கும் நல வாரியம் அமைக்கப்படணும். திங்கள்கிழமை குறைதீர் கூட்டம் நடத்தப்படுவது போன்று விதி இருந்தும் தியாகிகளின் குறைதீர் கூட்டம் நடத்தப்படல. தியாகிகளின் வாரிசுகளுக்கு பென்ஷன் மற்றும் கல்வி வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை தரப்படணும்''’என்றார்.

தியாகி மாடசாமியின் வாரிசு பென்ஷன் தொடர்பான அனைத்து ஆவணங்களும் அத்துறையினருக்கு அனுப்பப் பட்டுவிட்டது என்று ஆட்சியர் அலுவலக வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

வீட்டுக்கு வீடு கொடியேற்றி, தேசப்பற்றை வெளிக்காட்டச் சொல்லும் அரசு, இந்த தேசத்தின் விடுதலைக்காகப் போராடியவர்களின் துயர் துடைக்கவாவது உரிய அக்கறை காட்டவேண்டாமா?