க்களின் குரலாக, அவர்களின் மனசாட்சியாக நின்று, அதிகாரத்தை நோக்கி அஞ்சாமல் குரல் எழுப்புவதே நக்கீரனின் இதழியல் அறம். 34 ஆண்டுகால தொடர் பயணத்தில் எப்போதும் மக்களுக்காக குரல் கொடுத்து வருவதையும், வேறு எவரும் நெருங்க முடியாத இடங்களில் ஊடுருவி உண்மைகளைத் தோலுரித்துக் காட்டுவதையும் நக்கீரன் தன் பணியாக மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிக்கு வாசகர்களும் பொது மக்களும் அளிக்கும் ஆதரவுடன் பல அமைப்புகளும் நக்கீரனின் அர்ப்பணிப்பைப் பாராட்டி விருதுகள் வழங்கியுள்ளன. தமிழ்நாடு அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது நக்கீரனுக்கு வழங்கப்பட்டது. இந்திய அளவிலான விருதுகளும் நக்கீரனுக்கு புகழ் மகுடமாகியிருக்கின்றன.

award

நக்கீரனின் பணியை தாயகத் தமிழர்கள் போலவே வெளிநாடு வாழ் தமிழர்களும் நன்கறிவார் கள். இலங்கை தொடங்கி, பல நாடுகளிலும் வாழும் தமிழர்களின் உரிமைக்குரலாக நக்கீரன் தொடர்ந்து ஒலித்து வரும் நிலையில், இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் சர்வதேச அமைப்பான Universal Peace Federation கவனத்திற்கும் நக்கீரனின் மக்கள் பணி சென்றடைந்துள்ளது.

குறிப்பாக, தமிழ்நாடு-கர்நாடகா ஆகிய இரு மாநில அரசுத் தூதராகக் காட்டுக்கு சென்று சந்தனக் கடத்தல் வீரப்பன் பிடியிலிருந்து நடிகர் ராஜ்குமாரையும் அவரது ஆட்களையும் மீட்ட சாதனை அவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஒரு பத்திரிகையாளரால் தூதுப்பணியை சிறப்பாக மேற்கொள்ள முடியும் என்பதையும் அதன் காரணமாக இரு மாநில மக்களிடம் நிலவிய பதற்றத்தைத் தணித்து அமைதியை ஏற்படுத்த முடியும் என்பதையும் உணர்ந்துகொண்ட அந்த அமைப்பின் சார்பில், கடந்த 23-ஆம் தேதியன்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நக்கீரன் ஆசிரியரான எனக்கு அமைதிக்கான தூதர் Ambassador For Peace விருது அளித்து சிறப்பிக்கப்பட்டது.

இந்தியாவில் நக்கீரன் அளவுக்கு கடுமையான சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்ட பத்திரிகை கிடையாது. பொடா சிறைவாசம், ஏராளமான வழக்குகள், கொடூரத் தாக்குதல்கள், உயிரிழப்புகள் என எல்லா வகையான நெருக்கடிகளையும் எதிர்கொண்டு, துணிவே துணை என மக்கள் பக்கம் நின்று செய்திகளை வழங்கும் நக்கீரனுக்கு கிடைத்த இந்த சர்வதேச அங்கீகாரத்தை ஆசிரியர் என்ற முறையில் நான் ஏற்றுக்கொண்டாலும், இது நக்கீரன் குடும்பத்திற்கான விருது. நக்கீரனின் தொடக்கக்காலம் தொட்டு பணியாற்றியவர்கள், பணியாற்றி வருபவர்கள், முகவர்கள், வாசகர்கள் என்கிற கூட்டு முயற்சிக்கான அங்கீகாரம் என்பதால் இந்தப் பயணத்தில் துணை நின்ற -நிற்கிற அத்தனை பேருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

நக்கீரன் புகழ் மகுடத்தில் சர்வதேச வைரமாக ஒளிரும் இந்த அமைதிக்கான தூதர் விருதை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு காணிக்கை யாக்குகிறேன்.

-ஆசிரியர்