புலனாய்வு இதழ்களுக்கு எடுத்துக்காட்டு நக்கீரன். ஒரு செய்தியை யாராவது ஒருவரிடம் பகிர்ந்து கொண்டால், ‘"அப்படியா..? "நக்கீரன்'ல வந்திருக்கிறதா...?' ’என்று கேட்கும் நிலைதான் இன்றும் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் நிலவுகிறது. நக்கீரனின் உண்மைத்தன்மை மக்களின் மனதில் பதிந்துவிட்டதுதான் இதற்கு காரணம்.
ஈழம் குறித்த தகவல்களும், சந்தன வீரப்பன் குறித்த செய்திகளும், மதிப்புமிகு ஆசிரியர் நக்கீரன்கோபால் எழுதிய "சேலஞ்ச்' தொடர் ஆகியவையும் நக்கீரனில் நான் வாசித்து சிலாகித்தவை. சமூகத்தை அறிதல் என்கிற என்னுடைய தேடலுக்கு தீனி போட்டது நக்கீரன். தமிழகத்தின் முக்கியமான அரசியல்- வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூர இன்றளவும் நக்கீரன் இதழ் எனக்கு காலப்பெட்டகமாக பயன்படுகிறது என்பதை பெருமையோடு சொல்வேன்.
தேர்தல் காலங்களில் வெளியிடப்படும் கருத்துக்கணிப்புகள், புள்ளிவிவரங்களை தேர்தல் முடிவுகளுக்கு பின்னால் ஆய்வு செய்து பார்த்தால், நக்கீரன் கணிப்பு பெரும்பாலும் பெருவெற்றி பெற்றிருக்கும். விருப்பு-வெறுப்பற்ற தன்மையும், சிறந்த வடிவமைப்பும், வார்த்தை சிக்கனமும் நக்கீரனுக்கு மகுடம் சூட்டுபவை.
2018 சூன் 06-08 இதழ் :
மாவலி பதில்களில், பண்டித நேரு குறித்த தகவல் அற்புதமானது. தற்போது நாட்டிற்கு தேவையானது. முத்தரையரின் புதுக்கட்சி பின்னணியில், தி.மு.க.வுக்கு சேதாரமிருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருப்பது சிறப்பு.
நடிகர் ராதாரவி எழுதி வரும் "கர்ஜனை' என்கிற வாழ்க்கைத் தொடரில் இந்த வாரம் ஏகப்பட்ட சுவாரசியம். கொஞ்சம்கூட பொய்கலக்காமல் ராதாரவி மனம் திறந்திருப்பது ( கோவா பீச், பிளாக் அண்ட் வொயிட் விஸ்கி) படிப்பதற்கு சுவாரசியத்தை கூட்டியிருக்கிறது.
-பி.என்.எஸ்.பாண்டியன்
எழுத்தாளர்- ஆவணப்பட இயக்குநர்
பொதுச்செயலாளர், புதுச்சேரி வரலாற்று ஆய்வு அறக்கட்டளை
_____________________
வாசகர் கடிதங்கள்!
பாடை கட்டும் மோடி!
அயல்நாட்டுக்காக வயல்காட்டு வழியே கோலோச்சப் போகிற மின்சார கோபுரம், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பொசுக்க வந்த பயங்கரம். புதுப்புது திட்டங்களால் தமிழகத்துக்குப் பாடை கட்டுகிறார் மோடி. எடப்பாடியும் "ஆகட்டும் சாமி'னு மைய அரசின் உத்தரவை உள்வாங்கிக்கொண்டு பல்லக்குத் தூக்குகிறார்.
-கோ.அன்பரசன்,
எடைக்கல்.
"கலையை ரசிக்க வந்தாங்க!'
கூத்தில் உலா வந்த ஆரூர் ஆழித்தேரின் அழகில் மயங்கி உள்ளம் பூரித்திருக்கிறார் கனிமொழி எம்.பி.! விழா அன்பர்கள் அவரை ஆத்திகவாதியாக நினைத்து விடக்கூடாது என்பதற்கான ஒரு முன்னெச்சரிக்கை பதிலும் தொண்டர்கள் மூலம் வெளிப்பட்டிருந்தது.
-வா.சந்திரசேகரன்,
கரூர்.