சமரசமற்ற போர்க்குணம்! ஈரோடு மாவட்ட செயலாளர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு
உலகில் அனைத்து நாடுகளிலுமே தத்தமது நாட்டு மக்களின் வாழ்வியல் அவலங்களை ஆளும் அதிகார வகுப்பினருக்கு தைரியமாக எடுத்துரைக்கும் பத்திரிகைகள் அங்கே ஒன்றாவது இருக்கும். அவ்வழியில் நமது தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் நேர்மையான, துணிச்சலான இதழ் "நக்கீரன்' மட்டுமே!
ஆளுநர் தொடங்கி ஆட்சியாளர்களின் வட்டம், விட்டம் வரை எவ்வளவு அடக்குமுறைகள் வந்தாலும் தன்னுடைய பாதையில் இருந்து விலகாமல் தமிழ்ச் சமூக அவலங்களை உடனுக்குடன் வெளிப்படுத்தும் நக்கீரன், ஆளும் வர்க்கத்திடம் சமரசமற்ற போர்க்குணத்தோடு பயணப்பட்டு வருவதே இவ்விதழை நான் தொடர்ந்து வாங்கிப் படித்து வருவதற்குக் காரணம்.
வீரப்பனைத் தேடி, காட்டில் உயிரைப் பணயம் வைத்து அலைந்தது, அப்பாவி பழங்குடி மக்களை அதிரடிப்படை வேட்டையாடியபோது அவர்களின் கதறலை, கண்ணீர்க் குரலை வெளி உலகுக்கு கொண்டுவந்தது, ஆட்டோ சங்கர் என்ற ரவுடியின் அரசியல்வாதிகள் தொடர்பு, அவர்களின் கிரிமினல் பங்களிப்புகளை வெளிப்படுத்தியது, தற்போது பொள்ளாச்சியில் இளம் பெண்களின் மீதான வக்கிர வெறியர்களை (அரசியல்வாதிகளை) அம்பலப்படுத்தியது என பல்வேறு சாதனைகளை குறிப்பிட்டுக்கொண்டே போகலாம்.
2019, மே 11-14 இதழ்:
மதுரை இராஜாஜி மருத்துவமனையில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்தும் அதில் மருத்துவ நிர்வாகத்தின் அலட்சியத்தை எடுத்துக் காட்டியுள்ளதும், திருவாரூர் மாவட்டம் திருவாவடுதுறையில் ஆதிக்கச் சாதி வெறியர்கள் பட்டியலின கொல்லிமலை என்பவரின் வாயில் மலம்திணித்த வன்கொடுமையை உடனே வெளியிட்டதும், லாட்டரி மார்ட்டினின் சாம்ராஜ்யத்தில் அரசியல் ஆட்டம் போடுபவர்களால் பழனிச்சாமியின் கொலை செய்தி, சமூக செயல்பாட்டாளர் முகிலனை தேர்தல் சமயத்தில் முற்போக்காளர்களே மறந்துவிட்ட சூழலில் இவ்விதழில் அக்கறையோடு கொண்டுவந்திருப்பது, தமிழகத்தின் தலைநகரம் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே தண்ணீருக்கு தத்தளிக்கப் போகிறது என பருவநிலை எச்சரிக்கை விடுப்பது... இப்படி ஒவ்வொரு செய்தியும் ஒவ்வொரு ரகம்.
___________________
வாசகர் கடிதங்கள்!
சங்கம்னா சண்டை!
சங்கம் என்பதே ஏதேனும் ஒன்றின் நோக்கத்திற்காக அமைக்கப்படும் பல உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமைப்புதான். ஆனால் "சங்கச் சண்டையில் சிக்கிய ஸ்டண்ட் மாஸ்டர்' சங்கதியில் அந்த நோக்கமே சிதைக்கப்பட்டு, ஜாகுவார் தங்கத்தின் தலைவர் பதவி பறிப்பு, ஊழல் என சங்கமே இரட்டைப் பிளவுற்றிருக்கிறது.
-அ.மணிமேகலை, புதுக்கோட்டை.
வடிவேலின் வாய்ஸ்!
கடற்படை கப்பல், ராணுவ ஹெலிகாப்டர் ஆகியவை தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் குறித்த "வலை வீச்சு' கமெண்ட், காலம் கடந்தும் வடிவேலின் வாய்ஸில் எகிறி அடிக்கிறது.
-எஸ்.தீனதயாளன், சென்னை-18.