1990-ஆம் ஆண்டு சென்னை கவின் கலைக் கல்லூரியில் நான் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் மதியச்சோறு சாப்பிடாமல்கூட நக்கீரனை தேடி அலைந்து படித்திருக்கிறேன். திராவிடம், தமிழ்த்தேசியம் மற்றும் மதம், சாதி குறித்து நான் அறிந்துகொள்வதற்கு பல புத்தகங்கள் உதவி செய்திருக்கின்றன அவற்றில் நக்கீரனும் ஒன்று.
அரச பயங்கரவாதத்தை எதிர்த்து நக்கீரன் இத்தனை ஆண்டு காலம் கடந்துவந்ததே பெரும் சாதனைதான்.
தமிழ் ஈழத்தின் தலைவர் பிரபாகரன் அவர்கள் இறந்துவிட்டார் என்ற செய்தி உலகம் முழுவதும் உலவியபோது, அந்த இதழை அவரே படிப்பது போன்று அட்டைப்படம் போட்டு ஈழ மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியது, கடவுளின் பெயரால் காமக்களியாட்டம் நடத்திய பிரேமானந்தா, நித்தியானந்தா மற்றும் பொள்ளாச்சி பாலியல் குற்றம் வரை துணிச்சலுடன் வெளியுலகிற்கு கொண்டுவந்தது ஆசிரியர் நக்கீரன்கோபால் அவர்களின் தனிச்சிறப்பு. அவரே நக்கீரனுக்கு அட்டை வடிவமைப்பாளராக இருப்பது மேலும் சிறப்பு.
2019, மே 08-10 இதழ்:
இந்த இதழ்கூட, ஒரு சட்ட சிக்கலுக்கு அடித்தளமிடும் பதவிப்பேராசை பிடித்த அ.தி.மு.க. அரசின் அடாவடித்தனங்களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது.
தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகளை அபகரிக்க இருக்கின்ற வட மாநிலத்தவர்களின் வருகை பற்றிய கட்டுரை, தமிழர்கள் எவ்வளவு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
தந்தை பெரியார் பற்றிய கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படை "கருஞ்சூரியன்' சிறப்புக்குரியது.
__________________
வாசகர் கடிதங்கள்!
நச்!
வாரணாசியில் பிரியங்காகாந்தி போட்டியிடாதது குறித்த மாவலியின் பதில் நச். அரசியலில் காலச் சூழலுக்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்கிற எதார்த்தம் பிரியங்காவுக்கும் தெரிந்ததுதான். எனினும், அவர் பாம்பு பிடித்ததை இக்கருத்தோடு ஒப்பிட முடியாது.
-வெ.பாரதிகுமார், நாகர்கோயில்.
பாடம்!
"சிக்னல்' பகுதியில் பள்ளிக் கல்வியில் வேலூர் திணறுவதற்கான காரணங்களையும், அதிகாரிகள் வழியே அதற்கான தீர்வுகளையும் சுட்டிக்காட்டியிருப்பது, மாணவர்களுக்கான முன்அறிவிப்பு பாடம்.
-எஸ்.பிரகாஷ், திருத்தணி.