நக்கீரனை 15 வருடங்களாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். இதுவரை எனக்கு தெரிந்து ஓரிரு இதழ் மட்டும்தான் படிக்காமல் விடுபட்டதுண்டு. அதனையும் மறு வாரத்தில் படித்துவிடுவேன். அந்தளவுக்கு எனக்கும் நக்கீரனுக்கும் தொடர்பு உள்ளது. நக்கீரனின் அரசியல் புலனாய்வுத் தன்மையும், நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நேர்மையும்தான் அதன் வாசகனாக இப்போதும் என்னை வைத்திருக்கிறது. நக்கீரனின் வாசகன் என்பதில் பெருமைப்படுகிறேன்.
2019, பிப்.06-08 இதழ்:
இந்த இதழில் பதிவான அரசியல் செய்திகள் அனைத்தும் செம ஹாட்! ராங்-கால் பகுதியிலுள்ள வாரிசுகளுக்கு எம்.பி.சீட், குட்கா ஊழல் க்ரைம், முன்னாள் மேயர் மீது வழக்குப்போடச் சொல்லி வலியுறுத்தல் போன்ற அரசியல் உள் விவகாரங்கள் மக்களுக்குத் தெரிய வேண்டிய செய்திகள்.
அரசியலில் நடக்கும் உண்மைகளை மக்கள் அறியும்போதுதான் சமூக மாற்றம் நடக்கும். மோடியை மிரளவைத்த மம்தா கட்டுரையை படிக்கும்போது தமிழக தலைமைச் செயலகத்தில் சி.பி.ஐ. நுழைந்து ரெய்டு நடத்திய சம்பவம்தான் நினைவுக்கு வந்தது.
"தினகரனை நம்பினோம்; திண்டாடுகிறோம்' என அ.ம.மு.க. நிர்வாகிகளின் புலம்பல்கள் எதார்த்தமானவை. திடீர் தலைவர்களை நம்பினால் இப்படித்தான்.
இது தேர்தல் நேரம் என்பதால் தேர்தல் தொடர்பான செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும்.
நக்கீரனின் வாசகனாய் நான் தொடர்ந்து இருக்க விரும்புகிறேன். அதிகாரவர்க்கத்தின் முகத்திரைகளை கிழிக்கும் நக்கீரனின் அரசியல், சமூகப் பணிகள் தொடரவேண்டும்!
வாசகர் கடிதங்கள்!
ஏவல்துறையான சி.பி.ஐ.
எதிர்க்கட்சிகளைக் கூட்டி கல்கத்தாவில் பலம் காட்டினார் மம்தா. அதனால் அவருக்கு வேண்டப்பட்ட காவல்துறை தலைவரை பழிவாங்க சி.பி.ஐ.யை பகடையாக்கியிருக்கிறது மத்திய அரசு. "முத்தலாக் சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்ததால் சி.பி.ஐ.யை வைத்து என்னை மிரட்டிப் பார்க்கிறது அதே பா.ஜ.க. அரசு' என்கிறார் தமிழகத்தின் அன்வர்ராஜா எம்.பி. இதில், பழிவாங்கவும், பழிவாங்கப்படுவதாக சொல்லப்படுவதற்குமான ஓர் ஏவல்துறையாகி நிற்கிறது சி.பி.ஐ.
-எம்.வாசுதேவன், கோவில்பட்டி.
துளியளவும் தப்பிப்பதற்கில்லை!
தன் குடிமக்களோடு சேர்வதற்கு முகவரி தேடி நடைபோடுகிறது "சின்னதம்பி' யானை. தான் ஈன்றெடுத்த மகன் பேரறிவாளனை தனது கிட்டப்பார்வைக்குள் கொண்டு வந்துவிட தவிக்கிறார் தாய் அற்புதம்மாள். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் மத்திய-மாநில அரசுகளுக்கு சம்பந்தம் இல்லை என்று துளியளவும் அவை தப்பித்துவிட முடியாது.
-கோ.அன்பரசன், நாகர்கோவில்.