எம்.ஆர்.ஐ. ஸ்கேன்! -ச.ஜேம்ஸ்லூர்துராஜ், உதவித் தலைமையாசிரியர் (பணி நிறைவு),செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி,மதுரை-01.
சமூக அக்கறையும், பொதுநல வேட்கையும் கொண்ட நக்கீரனின் பெருமைமிகு வாசகன் நான். தமிழ் புலனாய்வு இதழ்களில் தனி முத்திரை பதித்து, செய்திகளை முந்தித் தருவதில் முன்னோடி. காற்று நுழைய முடியாத இடத்தில்கூட நுழைந்து துணிவுடன் செய்திகளை தருவது நக்கீரனின் தனி பாணி. "ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்' என்கிற திரைப்பட வரிகளுக்கு ஏற்ப, சமூக புல்லுருவிகளின் தோல் உரிப்பதில் நக்கீரனுக்கு இணை நக்கீரன்தான். ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை அலட்சியப்படுத்தி, கிஞ்சிற்றும் பயமின்றி நீதிக்கு மட்டும் தலைவணங்கும் நக்கீரனுக்கு ராயல் சல்யூட்.
ஜெயலலிதாவின் மருத்துவமனை முதல் மரணம் வரையிலான மர்மங்கள், "நீட்' விவகாரம், காவிரி பிரச்சினை எதுவாயினும் அலசி ஆராய்ந்து உண்மைகளை அம்பலப்படுத்துவதில் நக்கீரன் நீதி தராசுதான். உள்ளூர் செய்தி முதல் உலகச் செய்திகள் அனைத்தும் கொண்டு விளங்கும் நக்கீரன், வாசகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ளது.
2018, மே 17-19 இதழ்:
"கூவத்தூர் ஆகும் கர்நாடகா' என்கிற அட்டைப்பட கட்டுரை இன்றைய கர்நாடக நிலவரத்தை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து உண்மையை உணர்த்தியுள்ளது.
கமல்-ரஜினியின் அரசியல் நகர்வுகளை அழகாக அலசியுள்ளது.
திவாகரனின் பேட்டி மன்னார்குடி குடும்பத்தின் குடுமிப்பிடி சண்டையை தெளிவாக விளக்கியுள்ளது.
----------------------------------
வாசகர் கடிதங்கள்!
இன்ஸ்டன்ட் சிக்னல்!
ஆண்டாண்டுகால மரங்களை வதைத்து, "இன்ஸ்டன்ட் மரங்களை' விதைக்க முடியுமா? பிறகு ஏன் கிரிவலப் பாதையோர மரங்கள் மீது தாரை ஊற்றி உயிர்வேரை அறுக்கிற இந்த வேண்டாத வேலை. நூறடி பாதை அல்ல... உள்ள உருத்தோடு ஒருவழிப்பாதையில் வலம் வந்தாலும் கடவுளின் ஆசி பக்தர்களுக்கு உண்டு. "மரத்தை வைத்தவன் யாரோ, எங்கோ? நாம் ஏன் தண்ணீர் ஊற்றணும்'னு அரசாங்கம் ரெட் "சிக்னல்' போட மறுக்கலாமா?
-து.அருண்மொழி, பழனி.
க்ளூ!
"சீட்டிங்' சிராஜுதீனை போலீஸார் "நலம்' விசாரித்தால் கைவிடப்பட்ட ராமஜெயம் கொலை வழக்கில் பல திருப்பங்கள் ஏற்படலாம். அதற்கு நக்கீரன் சுட்டிக்காட்டியுள்ள, "ராமஜெயத்தின் கடைசி ரயில் பயணத்தில் சிராஜுதீன் உடன் சென்றார்' என்பதையே க்ளூவாக எடுத்துக்கொள்ளலாம்.
-ஆர்.ஞானப்பிரகாசம், காங்கேயம்.