parvai

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே எனும் தாரக மந்திரத்தோடு காலடி எடுத்து வைத்த "நக்கீரன்', தன்அறநெறியில் இருந்து சற்றும் பின்வாங்காமல் இன்றுவரை தனது கடமையை செவ்வனே செய்துகொண்டிருக்கிறது. அதற்கு முதலில் செம்மாந்த வணக்கம்.

யார் தவறு செய்தாலும் அது, கவர்னர் மாளிகையாக இருந்தாலும் தவறு தவறுதான் என பொட்டில் அடித்தாற்போல சொல்லிப் பழக்கப்பட்டுவிட்ட "நக்கீரன்' இதழ், அரசியல்வாதிகள் மட்டுமல்ல அதிகாரிகளையும் அது உச்சபட்ச அதிகாரம் படைத்தவர்களாக, இருந்தாலும்கூட அவர்தம் தவறுகளையும் தட்டிக்கேட்கும். தன் பணியிலிருந்து சற்றும் பின் வாங்குவதில்லை.

"நக்கீரன்' ஆசிரியரின் கைது நடவடிக்கைக்குப் பிறகும்கூட அஞ்சிடாமல் நிர்மலாதேவி விஷயத்தில் ஆளுநருக்கு இருக்கிற தொடர்பை அப்பட்டமாக தொடர்ந்து எடுத்து வைக்கும், அதுவும் ஆதாரங்களோடு எடுத்துரைக்கும் பணியை ஒரு தவம்போல மேற்கொண்டு வருகிறது.

Advertisment

2018, அக்.20-23 இதழ்:

இந்த இதழிலும் நிர்மலாதேவி அளித்த வாக்குமூலத்தை மாற்றவும், சாட்சியங்களை அழிக்கவும் கவர்னர் மாளிகை செய்துவரும் அத்தனை கபட வேலைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது "நக்கீரன்'. சிறைக்குள்ளே நிர்மலாதேவி எப்படி இருக்கிறார் என்பதையும் முதன்முதலாக வெளியுலகத்திற்கு படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.

அதேபோல தற்போது "மீ டூ' சர்ச்சைகள் பெரிதாக வெடித்திருக்கும் நிலையில், அது பற்றிய விரிவான தகவல்களுடன் அது திரையுலகில் ஆரம்பகாலத்தில் இருந்துவரும் ஒரு பிரச்சனைதான் என்பதை அன்றையநாளில் ஆரம்பித்து இந்த நாள்வரை உதாரணங்களோடு படம்பிடித்துக் காட்டியிருப்பது சிறப்பு.

Advertisment

சபரிமலை போராட்டம் குறித்த நக்கீரனின் பதிவு, நாமே நேரில் சபரிமலை சென்று பார்த்த உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது; அந்த அளவிற்கு துல்லியமாக கள நிலவரத்தை பதிவு செய்திருக்கிறது. மொத்தத்தில் நக்கீரன்... நக்கீரன்தான்.

____________

வாசகர் கடிதங்கள்!

குப்பையே பலன்!

ஹைலெவல் திட்டங்களில் மக்கள் கருத்துக் கேட்பு விதியை ரத்து செய்ய முயலும் "சோப்பு நுரை' அமைச்சர் கருப்பணனுக்கு எதிராக விவசாயிகள் கொந்தளிக்கிறார்களா? ஆமாம்... இதுவரை நடந்த கூட்டங்களால் என்ன பலனை கண்டோம். நாலாவித கருத்துகளும் மனுக்களாக குப்பைக்கூடைக்குத்தானே போயின.

-எஸ்.சண்முகம், மதுரை.

கமலின் "தடா'!

"சர்கார்' பட விமர்சனம் சர்ர்ர்ர்ர்ர்! "ராஜபார்வை' டைட்டிலுக்கு நோ அப்ஜெக்ஷன் சொன்ன கமல்ஜி, எங்க வரலட்சுமியை சங்கடப்படுத்திட்டீங்களே.

-செ.பத்மாவதி, சங்கரன்கோயில்.