parvai

ரசியல், பொருளாதாரம், சமூகம், கலை இலக்கியம் அனைத்திலும் நடந்த, நடக்கின்ற, நடக்கவிருக்கின்ற நிகழ்வுகளைத் தனது புலனாய்வுச் செய்திகள் மூலம் மக்களின் கவனத்திற்கு கொண்டுவரும் நக்கீரன், தமிழகத்தின் கட்டியக்காரனாக விளங்குகிறது.

தெருக்கூத்தில் கூத்தை மக்களுக்குப் புரியவைப்பவன் கட்டியக்காரன்தான். அரசனுக்கு வழிகாட்டும் அமைச்சனாக, அரசிக்கு வழிகாட்டும் தோழியாக, துணைப்பாத்திரங்களை மக்களுக்கு அறிமுகம் செய்வோனாக, செயல்படுபவர் கட்டியக்காரனே. அதனால் தமிழக அரசியலின் கட்டியக்காரனாகத் திகழ்பவன் நக்கீரன் என்றேன்.

இந்த முப்பத்தோராண்டு வரலாற்றில், நக்கீரன் சாதனைகளைச் சொல்வதற்கு ஓரிதழ் போதாது... ஆசிரியர் படைத்த "சேலஞ்ச்', "யுத்தம்' நூல்களையும் தாண்டிப் பயணித்துக்கொண்டிருப்பது. ஆண்டுக்கொரு "யுத்தம்' எழுதும் அளவுக்கு சாதனைப் பயணம் செய்யும் வரலாற்றுப் பயணி நக்கீரன்.

Advertisment

2018, ஆகஸ்ட் 22-24 இதழ்:

"சசி பிறந்தநாள் சபதம்' எடப்பாடி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு சிறைக்குள்ளேயே சசி செய்யும் பூஜை செய்தி மூலம், சசி இன்னும் நக்கீரன் புலனாய்வு டீமின் பார்வையில்தான் இருக்கிறார் என்பது தெளிவானது.

"வீணாகும் தண்ணீர், வௌங்காத ஆட்சி -வயிறெரியும் மக்கள்' தலைப்பிலான செய்தி, ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது... ஆனால் காலிக் குடங்களோடு மக்கள் சாலையில் அமர்ந்து குடிநீருக்காக போராடுகிறார்கள்... ஏரிகளும் குளங்களும் வறண்டு கிடக்கின்றன. தமிழக ஆறுகளை, ஓடைகளை, குளக்கால்களை இணைத்தாக வேண்டிய கட்டாயத்தை உணர்த்தும் செய்தி இது. போலி ஐ.பி.எஸ். அதிகாரியாக வலம்வந்த பாலமணிகண்டனை கைது செய்யவைத்த நக்கீரன் பணிக்கு சபாஷ்.

Advertisment

வாசகர் கடிதங்கள்!

பொய்க்காது!

"கலைஞரின் வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்புவார்' எனும் வி.சி.க. தலைவர் திருமாவளவன் நம்பிக்கை எள்ளளவும் பொய்க்காது.

-ஆர்.பி.சுரேஷ்கணபதி, பேளுக்குறிச்சி.

கடுகளவில் தடைக்கற்கள்!

செல்லாத நோட்டுதான், ஆனால் சமூகவிரோத பலசாலிகளின் கைகளில் எப்படியெல்லாம் அது செல்லுபடியாகிறது என்பதை கருத்தாய் சித்தரித்துவிட்டீர்கள். இதில் சாமானியன் முதல் அரசியல்வாதிகள்வரை சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். கண்ணுக்குப் புலனாகாமல் மண்ணுக்கடியில் ஓடும் நீரோட்டம்போல் "செல்லாத நோட்டு வில்லங்க ஆட்டம்' என்கிற நக்கீரனின் விழிப்புணர்வுத் தொடருக்குப் பிறகும் கடுகளவிலும் தடைக்கற்களின்றி வழக்கம்போல அது சடுகுடு ஆடும் என்பது மட்டும் மறுப்பதற்கு இல்லை.

-வி.எஸ்.தேவா, கள்ளக்குறிச்சி.