அக்கால நக்கீரன் புராண கால வரலாற்றில் கடவுளின் தவறையே கம்பீரமாக எதிர்த்த முதல் ஆன்மிகப் புரட்சியாளர், தமிழ்ச் சங்கத் தலைமைப் புலவர்.
நமது நக்கீரன் புலனாய்வுச் செய்திகளின் மூலம் பூசனம் பிடித்துக் கிடக்கும், புரையோடிக் கிடக்கும் சமூகத்தின், அரசியலின் பொய்மை முகங்களைக் கிழித்தெறிந்து உள்ளம் அஞ்சாமல், உண்மைகளை உரக்கச் சொல்லுகின்ற ஊடகப் போர்வீரன். ஆசிரியரின் கம்பீரமான மீசையைப் போலவே, நக்கீரன் தரும் செய்திகளும், மீசை முறுக்கி நடை போடுகின்றன. நக்கீரனைத் தொடர்ந்து படிக்கிறேன்.
ஜூலை 07-10 தேதியிலான நக்கீரன் இதழ் மேற்சொன்ன கருத்துகளுக்கு வலிமை சேர்க்கின்றன. கிடுகிடுக்கும் இ.பி.எஸ். ஆட்சி பற்றிய கட்டுரை படிப்போரை கிறுகிறுக்க வைக்கிறது.
"மக்கள் செத்தாலும் ரோட்ட போடு' எட்டு வழிச் சாலையினால் ஏற்படும் விவசாய மக்களின் வேதனையை விவரிக்கிறது.
காலம் காலமாக மாறாத, பாலியல் வக்கிரங்களைச் சாடும், பாதிரியார் முதல் மாமனார் வரை பெண்களின் அவலங்களுக்கு முடிவு கட்டத் துடிக்கிறது.
மாவலியின் பதில்கள், விரிந்து பரந்த பல வினாக்களுக்கு விடையளிக்கிறது.
---------------------
வாசகர் கடிதங்கள்!
ரீ-மார்க்கில் காவல்துறை!
காவலர் தலையில் "மார்க்' போட்ட ரவுடி ஆனந்தனின் என்கவுன்ட்டர் அவசியமானதுதான். இது மற்ற ரவுடிகளுக்கு உயிர்ப் பயத்தை ஏற்படுத்தினாலும் இதில் காவல்துறையின் பலி தீர்க்கும் எண்ணமும் கலந்தே இருக்கிறது. சட்டம்-ஒழுங்கு நேர்மையாக செயல்பட்டால் என்கவுன்ட்டருக்கு வேலையே இல்லைதான்.
-ஆர்.எம்.வீரமணிதாசன், ராம்ஜி நகர், திருச்சி.
ஞாபக வகுப்பு!
மோடி ஆட்சியின் "சொன்னதும் செய்ததும்' என்கிற செய்தித் தொகுப்பு... மக்களுக்கும், திட்டங்களை நிறைவேற்றாத சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் ஒரு நல்ல ஞாபக வகுப்பெடுப்பு.
-வா.அணில்ராணி, சேத்தியாதோப்பு.