வரலாறு சொல்லும் வடுக்கள்! -புதுவை தமிழ்நெஞ்சன், செயலாளர், புதுவை தமிழ் எழுத்தாளர் கழகம்
அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை நக்கீரன் (வேந்தர்க்கு) இயல்பு -382
அறமற்ற தீச்செயலுக்கும், பகைவர்களுக்கும் அச்சப்படாதிருப்பது, நல்லோர்க்கு வேண்டியதைக் கொடுப்பது, வரும் முன் காக்கும் அறிவு, துன்பம் வந்தால் தளராது, மனம் சோராது ஊக்கத்தோடு செயலாற்றுவது இதழாளர்களின் இயல்பாய் இருக்க வேண்டும்.
உண்மை சுமையானது. அதனால்தான் நக்கீரன் போன்றவர்கள் அதனைச் சுமக்க விரும்புகின்றனர். ஒரு பொய்க்காகப் பரிசு பெறுவதைவிட உண்மைக்காகத் துன்பப்படுவதேமேல் என்பதை உணர்ந்து நக்கீரன் பட்ட துன்பத் துயரை விட வேறெந்த இதழாளர்களும் இதுவரை பெற்றதில்லை. அவர்கள் பட்ட காயம் ஆறி இருக்கலாம். அந்த வடுக்கள் என்றும் அவர்களின் வரலாறு சொல்லும்.
நேர்மை எப்போதும் வெற்றி பெறுவதில்லை. ஆனால் வெற்றி எப்போதும் நேர்மையில்தான் இருக்கிறது என்பதை உறுதி செய்து வருகிறது நக்கீரன்.
2018, ஏப்ரல் 11-13 இதழ்:
இந்தியாவில் குப்பைத் தொட்டியாய் தமிழகத்தை தில்லி ஆக்கி வருகிறது. தடை செய்யப்பட்ட, பிற மாநிலத்தவர் எதிர்த்து விரட்டிய தொழிற்சாலைகளை, தமிழகத்தில்தான் திணிக்கிறது. அதற்கு ஆளுகின்றவர்களும் மக்கள் நலன் கருதாமல் பணத்திற்காக மக்களை பலியிட்டு விடுகின்றனர். மீத்தேன், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட், கெய்ல் எரிவளி குழாய் பதிப்பு இப்படி தமிழ்நிலத்தைப் பாலையாக்கும் திட்டத்தைக் கரவாகவும், சூழ்ச்சியாகவும் கொண்டு வந்து தமிழகத்தைச் சுடுகாடாக்குகிறது. முதல் தவறு, இரண்டாம் தவறுக்கு இருக்கை போட்டு வரவேற்கிறது. அதுபோலத்தான் ஸ்டெர்லைட், அணு உலை விரிவாக்கம் என்பதும்.
தீண்டாமைச் சுவர், இரட்டைக் குவளை போன்றவை இன்றும் தொடர்வது இழிவு என்பதை உணர்த்துகிறது. மனத்தில் உள்ள தீண்டாமைச் சுவரை இடிப்பதென்று? சிறையில் நடந்த இராம்குமார் வன்கொலை என்கின்ற உண்மை, மூடி மறைக்கப்பட்ட சதியே என்பதை மிகத் துல்லியமாய் புலனாய்வு செய்திருக்கிறது. எந்தவொரு அறமன்ற தீர்ப்பாக இருந்தாலும் அது நக்கீரன் இதழாய்வின் அடிப்படையில் கூறப்பட்டால் மேல்முறையீட்டிற்கு வழியில்லை என்பது புலனாகும்.
-----------------------------------
வாசகர் கடிதங்கள்!
"டிக்ஷனரி' அரசு!
"காவிரி மேலாண்மை வாரிய அவதூறு வழக்கு மத்திய அரசுக்குப் பொருந்தாது' என்கிறார் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால். அவர் "அவதூறு' என்பதை பழிச்சொல்லாக நினைக்கிறார் போலும். மாறாக, "ஸ்கீம்' என்கிற வார்த்தைக்கு டிக்ஷனரி தேடும்போதே மைய அரசின் மானம் மக்கள் மத்தியில் ஓங்கிப் பறந்ததே அதற்கு என்ன செய்வார்களாம்?
-வெ.அருமைநாதன், காரைக்கால்.
வாழ்த்துகள்!
இந்தியா, காமன்வெல்த் போட்டியில் ஹெல்த் இஸ் வெல்த்தாக இருக்கிறது. அதற்கான சமீபத்திய உதாரணம்தான் பளு தூக்கும் போட்டியில் சதீஷ் சிவலிங்கத்தின் தங்கப்பதக்கம். வாழ்த்துகள் ப்ரோ!
-சி.அரசகுமார், மணப்பாறை.