சேலம் அருகேயுள்ள திருமலைகிரியைச் சேர்ந்தவர் செந்தில். இவருடைய மகன் பிரவீன்குமார் (23). கூலித்தொழிலாளி. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர், கடந்த ஜன. 26-ஆம் தேதி இரவு, உள்ளூரிலுள்ள பெரிய மாரியம்மன் கோயில் கருவறைக்குள் புகுந்து சாமி கும்பிட்டுள்ளார்.
வெளியே வந்த அந்த இளைஞரை மடக்கிய தி.மு.க. பிரமுகர்கள் வெங்கடாசலம், கூழைக்கவுண்டர் இருவரும், "நீ ஏன்டா கோயிலுக்குள் வந்தாய்? உங்களை எல்லாம் உள்ளே வரக்கூடாதுனு சொல்லியிருக்கோம்ல'' என்று கூறி தாக்கப் பாய்ந்தனர்.
மறுநாள் காலை கோயில் திடலுக்கு, சேலம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், திருமலைகிரி பஞ்சாயத்து தலைவருமான மாணிக்கம் சென்றபோது மாணிக்கத்தின் ஆதரவாளர்கள் பிரவீன்குமாரை பிடித்துவந்து அவர் முன்பு ஆஜர்படுத்தினர்.
அவர், எடுத்த எடுப்பிலேயே அந்த இளைஞரைப் பார்த்து வார்த்தைக்கு வார்த்தை "பீப்' சொற்களால் வசைபாடினார். "உன்னை யாருடா கோயிலுக்குள் போகச்சொன்னது? மோளம் அடிக்கிற நாய்ங்க... நீங்கள்லாம் கோயிலுக்குள் வரக்கூடாதுனு எத்தனை முறை சொல்றது? தொலைச்சுடுவேன்'' என்று மிரட்டியதுடன் இளைஞரை நெஞ்சில் தாக்கியுள்ளார்.
சம்பவ இடத்தில் இளைஞரின் தந்தையும் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கூடியிருந்தபோதும் சாதிய வன்மத்தைக் கக்கிக்கொண்டிருந்த மாணிக்கத்தை சமாதானப்படுத்த யாருமே முயற்சிக்கவில்லை.
இந்த சம்பவம் குறித்த காணொலிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. பாதிக்கப்பட்ட இளைஞர் அளித்த புகாரின்பேரில், சேலம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மாணிக்கம், ஆதரவாளர்கள் வெங்கடாசலம், கூழைக் கவுண்டர் உள்ளிட்ட 10 பேர் மீது கொலை மிரட்டல், சாதி வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் இரும்பாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜன. 30-ஆம் தேதி கைது செய்தனர்.
மாணிக்கத்தை சேலம் தெற்கு ஒன்றியச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப் பிலிருந்தும் கட்டம் கட்டியது தி.மு.க. மேலிடம். சாதி வன்கொடுமை வழக்கில் கைதானவர்கள் அவ்வளவு எளிதில் கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுவிட முடி யாது. ஆனால் மாணிக்கமோ, இந்த வழக்கில் கைதான ஏழாவது நாளில் (பிப். 6) ஜாமீனில் வெளியே வந்தார். அரசியல் அழுத்தம் மற்றும் "ப' விட்டமின் காரணமாக அவர் எளிதில் ஜாமீன் பெற்றதாகப் பேசப்பட்டது.
இந்நிலையில், நடந்த செயலுக்கு மாணிக்கம் வருத்தம் தெரிவித்ததால், அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்வதாகவும், மீண்டும் சேலம் தெற்கு ஒ.செ. பதவியில் நியமித்தும் அக். 13-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது அண்ணா அறிவாலயம்.
இதுதொடர்பாக தி.மு.க. மூத்த உடன்பிறப்புகள் சிலர் நம்மிடம் பேசினர்.
"தெற்கு ஒ.செ. பதவியில் மாணிக்கம்தான் கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக இருக்கிறார். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் கோஷ்டிகளை வளர்த்துவிட்டிருக்கிறார். பணம் மட்டும்தான் ஒரே குறி. இந்த நேரத்தில்தான் சாதி வன்கொடுமை வழக்கில் அவர் கைதுசெய்யப்பட்ட தோடு, கட்சிப் பொறுப்பிலிருந்தும் தூக்கப்பட்டார்.
இப்போதாவது, சேலம் தெற்கு ஒ.செ. பதவியில் தி.மு.க. மேலிடம் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் மாணிக்கமும், சேலம் கிழக்கு மா.செ. எஸ்.ஆர்.சிவலிங்கமும் "டீல்' போட்டுக்கொண்டு, அந்த பதவியில் வேறு யாரையும் நியமிக்காமல் 9 மாதத்திற்கும் மேலாக ரிசர்வ் செய்து வைத்திருந்தனர்.
தெற்கு ஒன்றியத்திலுள்ள திருமலைகிரியைத் தவிர மஜ்ரா கொல்லப்பட்டி, வட்டமுத்தாம்பட்டி, ஆண்டிப்பட்டி, வேடுகாத்தாம்பட்டி, சன்னியாசிகுண்டு, எருமாபாளையம் ஆகிய ஆறு பஞ்சாயத்திலுமே அவருடைய வரவை கட்சியினர் ரசிக்கவில்லை. இந்த அதிருப்தி வரும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு சறுக்கலை ஏற்படுத்தும்'' என்கிறார்கள்.
பட்டியல் சமூக இளைஞரை, மாணிக்கம் ஆபாசமாக திட்டிய சம்பவத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அம்பேத்கர் மக்கள் இயக்கம் ஆகிய கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தன. தற்போது மாணிக்கம் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாநகர (வடக்கு) செயலாளர் பிரவீன்குமார் கூறுகையில், "சமூக நீதி, கோயில் நுழை வுப் போராட்டம், அனைத்து சாதியின ரும் அர்ச்சகர் என முழங்கிவரும் தி.மு.க. விடமிருந்து இப்படி ஒரு அறிவிப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மாணிக் கத்தை ஒ.செ. பொறுப்பில் நியமித்ததை தி.மு.க. மேலிடம் மறுபரிசீலனை செய்யவேண்டும்'' என்கிறார்.
அம்பேத்கர் மக்கள் இயக்க மாநிலத் தலைவர் அண்ணாத் துரையோ, "புகாரளித்த இளைஞர் குடும்பத்தினருக்கு தி.மு.க.வினர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து, புகாரை திரும்பப் பெறவைத்தனர். அதனால் தான் பி.சி.ஆர். வழக்கில் கைதான மாணிக்கம், ஒரே வாரத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.
மாணிக்கத்தின் சாதிவெறித் தாக்குதல் உலகமே அறிந்த ஒன்று. அப்படிப்பட்ட ஒருவரை சமூக நீதி பேசும் தி.மு.க. முக்கிய பதவியில் நியமித்திருக்கக்கூடாது. அவரை விட்டால் சேலம் தெற்கு ஒ.செ. பதவிக்கு வேறு ஆளே கிடையாதா? பாதிக்கப் பட்ட இளைஞர் புகாரை திரும்பப் பெற்றிருந்தாலும், நாங்கள் மாணிக்கம் மீது சாதி வன்கொடுமை வழக்கு தொடர்வோம்'' என்றார்.
என்று தணியுமோ ஜாதிக் கொடுமை!