பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, 2013-ல் செய்தித்துறை அமைச்சராக இருந்தபோது, தன் பெயரில் சொத்து வாங்கிக் குவிக்கிறார் என்பதை, பத்திரப் பதிவு ஆதாரங்களுடன் 22-5-2013 தேதியிட்ட நக்கீரன் இதழில், "மந்திரிகள் ஓஹோ! மக்கள் அய்யகோ! -ஜெ. அரசின் ஈராண்டு சாதனை!'’ என்னும் தலைப்பில், புலனாய்வுக் கட்டுரையாக அம்பலப் படுத்தியது நக்கீரன்.
ராஜபாளை யம் -சேத்தூர் -தெற்கு தேவதானத்தில் 32 ஏக்கர் 50 சென்ட் நிலத்தை, ராஜேந்திரபாலாஜி வாங்கிய விவகாரத்தை, நக்கீரன் வெளிச்சத்துக்கு கொண்டுவந்த நிலையில், மதுரை -ஆனையூரைச் சேர்ந்த ராஜா என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில், அமைச்சர் மீது சொத்துக் குவிப்பு வழக்காக தாக்கல் செய்தார். அன்றைய முதல்வர் ஜெ. கண்ணசைவில், அரசுத் தரப்பில் விளக்கம் அளித்ததும், அந்த வழக்கு முடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மதுரை -தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், ராஜேந்திர பாலாஜி திருத் தங்கல்லில் வாங்கிய சொத்து விவரங்களையும் குறிப்பிட்டு, வழக்கு தொடர்ந் தார். இந்த வழக்கில்தான், ‘விசாரணை முறையாக நடக்க வில்லை. ராஜேந்திரபாலாஜி திருத் தங்கல் பேரூராட்சி துணைத்தலைவராக இருந்த 1996-ஆம் ஆண்டிலிருந்து பிப்ரவரி 2018 வரையிலான காலக்கட்டம் வரை, எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தி, ஆகஸ்ட் 3-ஆம் தேதி அறிக்கையை, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்ய வேண்டும்‘ என, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடப் பட்டிருக்கிறது.
அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை தொடர்பு கொண்டோம். "எனக்கென்ன குடும்பமா? குட்டியா? பிரம்மச்சாரி வாழ்க்கைதான். எந்த தேவையும் எனக்கு இல்லை. நிலம் வாங்கி விற்கும் தொழிலை 18 வருடங்கள் பார்த்தேன். எல்லாவற்றுக்கும் முறைப்படி கணக்கு காட்டிவருகிறேன். எல்லாம் அரசியல்தான். பின்னால் இருந்துகொண்டு யாரோ தூண்டி விடுகிறார்கள்''’’ என்றார்.
ஆளும்கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம். ""முக்குலத்தோர், நாடார் மற்றும் நாயக்கர் சமுதாயத்தினர் கணிசமாக உள்ள விருதுநகர் மாவட்டத்தில், சிறுபான்மை சமுதாயமான விஸ்வகர்மா வகுப்பைச் சேர்ந்த ராஜேந்திரபாலாஜி, கடந்த 8 வருடங்களாக மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். தொடர்ந்து அமைச்சராகவும் அவர் இருப்பதால், ஜாதி ரீதியாக குடைச்சல் தருவோர் உண்டு. தினகரன் அணிக்கு மாறினாலும் கூட... முன்னாள் மா.செ. சிவசாமி தரப்பு, ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக தொடர்ந்து காய் நகர்த்தி வருகிறது. வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கும் ராஜேந்திர பாலாஜிக்கும் இடையே அரசியல் பகை உண்டு'' என்றனர்.
அ.ம.மு.க. ஜெ. பேரவை விருதுநகர் மாவட்ட செயலாளர் சிவக்குமார் நம்மிடம், “""கட்சியில் திட்டமிட்டே என்னை ஒதுக்கினார் ராஜேந்திரபாலாஜி. அதனால்தான், தாக்குப்பிடிக்க முடியாமல், முகாம் மாற வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. அமைச்சர் சொத்து வாங்கிய ஆவணங்கள் அனைத்தும் ஆர்.டி.ஐ. மூலம் எனக்கு கிடைத்தது. விசாரணையில் இருந்து தப்ப அமைச்சரால் முடியாது. ஏனென்றால், உயர்நீதிமன்றமே இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறது'' என்றார்.
ராஜேந்திரபாலாஜிக்கு விசுவாசம் காட்டும் ஆளும் கட்சியினரோ “""அ.தி.மு.க. கட்சி ஆரம்பித்து 46 வருடங்கள் ஆகி விட்டன. இந்த விருதுநகர் மாவட்டத்தில் பல மாவட்ட செய லாளர்களைப் பார்த்து விட்டோம். எங்க ளுக்குத் தெரிந்து, கட்சியினரையும் அவர்களின் குடும்ப சூழ் நிலையையும் அறிந்து உதவி செய்துவரும் மா.செ. என்றால், ராஜேந்திரபாலாஜி ஒருவர் மட்டும்தான். கட்சியினருக்கு மட்டு மல்ல, கஷ்டப்படும் பொதுஜனம் என் றாலும் இதய அறுவை சிகிச்சையிலிருந்து அத்தனை மருத்துவ காரியங்களுக்கும் தாராளமாக நிதி உதவி செய்வார். ஏனென்றால், பொதுநோக்கோடு அவர் செலவழிப்பதைத் தடுப்பதற்கு அவருக்கென்று குடும்பம் எதுவும் இல்லை.
சொத்துக் குவித்த முன்னாள் -இந்நாள் அமைச்சர்களோடு ஒப்பிட்டால், ராஜேந்திர பாலாஜி சுண்டைக்காய்தான். ரூ.74 லட்சத்துக்கு நிலம் வாங்கினார்; ரூ.23 லட்சத்துக்கு வீட்டு மனைகள் வாங்கினார் என்பது போன்ற குற்றச்சாட்டெல்லாம் ஜுஜுபி. கட்சியில் வலுவான சாதியினரை எதிர்கொள்ள அவரும் ரவுடி அரசியல் பண்ணாமல் இல்லை. ஆனாலும், சாதி ஆதிக்க பின்னணி கொண்டவர்கள், மாறி மாறி வழக்குத் தொடுத்து, ராஜேந்திர பாலாஜியை பாய்ந்து பிறாண்டுகிறார்கள்'' என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.
அமைச்சர் ஒருவர் மீது முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டிருப்பது, எடப்பாடி அரசுக்கு தலைவலி தான்! சொத்துக் குவிப்பில், பெரிய ஊழல், சின்ன ஊழல், ஆயிரம் கோடி, ஒரு கோடி என்கிற வாதமெல்லாம், சட்டத்தின்முன் எடுபடாது என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.
-சி.என்.இராமகிருஷ்ணன்