வேலை என்னவோ ஆசிரியர் வேலைதான். ஆனால் விடுமுறைக் காலமான மே மாசம் என்றால் கூலி வேலைக்குப் போகிற நிலையில்தான் இருக்கிறோம் என்று பரிதாபமாக சொல்கிறார்கள், அரசுப்பள்ளி பகுதிநேர ஆசிரியர்கள்.
""2012-ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தோட்டக்கலை, இசை, தையல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பகுதிநேர ஆசிரியர்களாக 16,549 பேரை ஜெயலலிதா அரசு நியமித்தது. அவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.
அவர்களுக்கு 2014-ஆம் ஆண்டு ரூ.2 ஆயிரம் சம்பளம் உயர்த்தப்பட்டது. ஆனால், பகுதி நேர ஆசிரியர்களில் 1,380 பேர் குறைக்கப்பட்டனர். 2017-ல் இவர்களுக்கு ரூ.700 சம்பள உயர்வாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மொத்தக் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது'' என்கிறார் தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து அவரே தொடர்ந்தார்…
""எங்களை முழுநேர வேலையுடன் சிறப்பாசிரியர்களாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே 6 ஆண்டு கோரிக்கை. 7வது ஊதியக்கமிஷன் பரிந்துரைப்படி 30 சதவீத ஊதிய உயர்வும் வழங்கவில்லை. மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தையும் அமல்படுத்தவில்லை.
7-வது ஊதியக்குழு பரிந்துரைத்த 30 சதவீத ஊதிய உயர்வு கிடைத்தால்கூட ஓரளவு சமாளிக்க முடியும். மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச சம்பளமான ரூ.18 ஆயிரத்தையாவது வழங்கியிருக்கலாம். அதற்காவது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
முதல்வர் 110விதியின்கீழ் அறிவித்தபடி அனைத்து மாதங்களுக்கும் சம்பளம் வழங்கவில்லை. மே மாதம் ஊதியம் இல்லை என அரசாணையிலும் இல்லை. ஆனால், மே-2012, மே-2013, மே-2014, மே-2015, மே-2016, மே-2017 என 6 ஆண்டுகளாக மே மாத சம்பளம் வழங்கவில்லை. இதில்மட்டும் ஒவ்வொரு பகுதிநேர ஆசிரியரும் ரூ.38 ஆயிரம் இழந்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா 110 விதியின்கீழ் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்களுக்கு 12 மாத சம்பளமாகத்தான் ரூ. 99கோடியே 29 லட்சத்தை ஒதுக்கி அறிவித்தார்.
ஆனால், இதைக் கருத்தில் கொள்ளாமல் 2012 மார்ச் மாதம் நியமிக்கப்பட்டு 2 மாதங்கள் பணிபுரிந்த நிலையில், அடுத்து வந்த 2012 மே மாதம் கோடை விடுமுறை என்பதால் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உயர்அதிகாரிகளால் 2012 மே மாதம் ஊதியம் வழங்கிட உரிய உத்தரவுகள் வழங்கப்படவில்லை. அதைத்தொடர்ந்து 6 ஆண்டுகளாக மே மாதம் ஊதியம் மறுக்கப்பட்டு வருகிறது. மே மாதம் ஊதியம் வழங்கப்படாததால், பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம் மிகவும் கடுமையாகப் பாதிக்கபட்டுள்ளது.
தவிர, ஒப்பந்த வேலைகளில் தொகுப்பூதியத்திற்கு பணிசெய்பவர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய அடிப்படைச் சலுகைகளைக்கூட அரசு இதுவரை வழங்கவில்லை. பணிநியமனம் செய்யும்போதே அருகில் உள்ள பள்ளிகளுக்கு பணிநியமனம் வழங்காமல் சிரமங்களை அனுபவிக்கிறார்கள். இனியாவது விரும்பும் பள்ளிகளில் பணிமாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி ஒரு பகுதிநேர ஆசிரியர் அதிகபட்சமாக 4 பள்ளிகளில் வேலைபார்த்து அதற்குரிய சம்பளங்களை அந்தந்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்பதையாவது நடைமுறைப்படுத்தி இருக்கலாம். அப்படிச் செய்திருந்தால், கிட்டதட்ட அனைவருக்கும் முழுநேரவேலை கிடைத்ததோடு மட்டுமில்லாமல் கணிசமான ஊதியமும் கிடைத்திருக்கும்.
சம்பளம் வழங்கும் முறையை மாற்றி பள்ளிகளில் பணிபுரியும் ஏனைய நிரந்தர ஆசிரியர்களுடன் சேர்த்தே வழங்க வேண்டும். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பகுதிநேர ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது என்று கல்வி அமைச்சர் கூறினார். ஆனால், அதை நிறைவேற்றவில்லை.
ஜாக்டோஜியோ தொடர் போராட்டங்களின்போது அரசின் உத்தரவுப்படி முழுநேரமும் ஊதியம் எதுவுமின்றி பகுதிநேர ஆசிரியர்களே பள்ளிகளைத் தொய்வின்றி நடத்தியதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 1,325 சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு 23-09-2017-ல் தேர்வு நடைபெற்று அதன் முடிவுகள் விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதில் தேர்ச்சி பெறுகிறவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும். ஆனால் இதே கல்வித் தகுதியோடு அரசுப் பள்ளிகளில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ரூ.7,700 மட்டுமே தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. ஒரே கல்வித் தகுதிகொண்டவர்களை இருவேறு நிலைகளில் பணியமர்த்தும் அரசின் இரட்டைநிலை எதிர்காலத்தைப் பாதிக்கிறது. தினக்கூலிகளாக பணியமர்த்தப்பட்டிருந்தால்கூட பணிநிரந்தரம் கேட்க உரிமை கிடைத்திருக்கும்'' என்று பகுதிநேர ஆசிரியர்களின் உள்ளக்குமுறலை கொட்டித் தீர்த்தார்.
-இரா.பகத்சிங்