srgq

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி வளநாடு ஊராட்சியில் 1 கோடிக்கு அதிகமான ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார்கள் வரவே இதுகுறித்து விசாரிக்க ஆரம்பித்தோம்.

இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆரிஃப் என்பவரிடம் பேசுகையில், “ நான் தகவலறியும் உரிமைச் சட்டத்தில் எங்களுடைய ஊராட்சிக்குட்பட்ட தகவல்களை 25 கேள்விகள் மூலம் கேட்டறிந்தேன். அதில் கிடைத்த தகவல்கள் எங்களுக்கு அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

Advertisment

இந்த ஊராட்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்றவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்த வெங்கடேசன். இவர் இந்துத்துவா பின்னணியும் உள்ளவர். இந்த பகுதியிலிருக்கும் பெரும்பாலான தெருக்களில் தேர்தல் வெற்றிக்குப்பின் காலடி எடுத்து வைத்ததில்லை. தோப்புப்பட்டி, வாடிப்பட்டி, தேனூர் பிரிவு சாலை, வளநாடு, குறிஞ்சி நகர், பள்ளிவாசல் தெரு, சிவன் கோவில் தெரு, லால்பாட்சா தெரு பகுதிகள் அடங்கிய இந்த ஊராட்சியில் இஸ்லாமியர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் என மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

Advertisment

தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவல்களில் வளநாடு ஊராட்சிக்கு கடந்த நிதியாண்டில் மத்திய அரசு 15-ஆவது நிதிக்குழு மூலம் 2 கோடியே 10 லட்சத்து 7ஆயிரம் ரூபாய் பெறப்பட்டதாகவும், அந்த நிதியிலிருந்து வளநாடு அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து சிவன்கோவில் தெரு, லால்பாட்சா தெரு வரை புதிய குடிநீர்க் குழாய் விஸ்தரிப்பு செய்யப்பட்டதாகவும், குறிஞ்சி நகரில் புதிய ஆழ்குழாய்க் கிணறு, மின்மோட்டார், பைப்லைன் அமைக்கப்பட்டதாகவும், பள்ளி வாசல் தெருவிற்கு புதிய ஆழ்குழாய்க் கிணறு, மின்மோட்டார் பைப்லைன் அமைக்கப்பட்டதாகவும், தோப்புப்பட்டியிலிருந்து வடக்குகளம் வரை புதிய பைப்லைன், தேனூர் பிரிவு சாலை நிழற்குடையிலிருந்து அரசு மேல்நிலைப்பள்ளி வரை புதிய பைப்லைன், வாடிப்பட்டியில் புதிய ஆழ்குழாய்க் கிணறு, மின்மோட்டார் பைப்லைன், வளநாடு அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து சிவன்கோவில் தெரு, லால்பாட்சா தெரு வரை புதிய குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்தல் என்று ஒவ்வொரு பணிக்கும் 10 லட்சம், 5 லட்சம் என பில் எழுதப்பட்டிருந்தது.

இதில் எந்த ஒரு பணியையும் இதுவரை செய்யவில்லை. மின்மோட்டார் அமைத்த இடங்களில் பழைய மின் மோட்டாரைச் சரிசெய்து ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருட்களையே பயன்படுத்திவிட்டு புதிய மின்மோட்டார் வாங்கியதாக 3 லட்சம் கணக்கு எழுதியுள்ளனர். இப்படி மொத்தம் 1 கோடி ரூபாய்க்கு செய்யாத வேலைக்கு கணக்கெழுதி பணம் மட்டும் எடுத்துக்கொண்டார். நான் குறிப்பிட்டுள்ள எந்த தெருக்களிலும் அவர் இதுவரை எந்தப் பணியும் செய்யவில்லை. அவர் அந்த தெருவிற்கு வந்ததும் இல்லை. இந்த ஊழல் தொடர்பாக இதுவரை 50-க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் பல அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரை அந்த மனுக்கள் குறித்து எந்த அதிகாரியும் ஒரு வார்த்தைகூட விசாரிக்காமல் இருக்கிறார்கள்.

அடுத்து பிரதமரிடம்தான் மனு கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறேன். நான் கடந்தமுறை ஊராட்சிமன்ற தேர்தலில் போட்டியிட்டேன். அதனால் அவர்மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில் இப்படி புகாரளிப்பதாகக் கூறுகிறார்கள். தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த இடங்களை நேரில் ஆய்வு செய்யட்டும். அங்கு என்ன பணி நடந்துள்ளது என்பது குறித்து அதிகாரிகள் பொதுமக்களுக்கு தெரிவிக்கவேண்டும். அங்கு பணிகள் செய்யப்பட்டதற்கான ஒரு அடையாளத்தையாவது காட்டவேண்டும்''’என்றார் ஆரிஃப்.

இதுதொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசனைத் தொடர்பு கொண்டு பேசியபோது, “""என்மீது தேவையில்லாமல் அப்துல்ரகுமான், ஆரிப் குற்றம்சாட்டி வருகின்றனர். ஊராட்சிமன்றத் தலைவராக என்னால் ஒருமுறைக்கு 30 லட்சம் ரூபாய் வரை மட்டுமே வங்கிக் கணக்கு 1-லிருந்து பணம் எடுக்கமுடியும். அதிலும் மாதம் 70ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து அதிலிருந்து பைப்லைன் போடுபவர்களுக்கு கூலி, பொருட்கள் வாங்குவது, 10 ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது என செலவு செய்கிறேன். இந்தப் பணம் போதுமானதாக இல்லாததால் நான் என்னுடைய சொந்தச் செலவில் கூடுதல் பணிகளைச் செய்துவருகிறேன்''’என்று கூறினார்.

""உங்கள் மீது மரம் வெட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் தலைமறைவானதாகக் கூறப்படுகிறதே''’என்று கேள்வி எழுப்பியபோது, “""அது பம்ப் ஆப்பரேட்டர் வடிவேல் செய்தது. அதற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அதில் தேவையில்லாமல் என்னுடைய பெயரை இழுத்துவிட்டார்கள்''’என்று கூறினார். ""இந்த குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொண்டால் 2 லட்சம் ரூபாய் பணம் தருவதாக வடிவேலுவிடம் கூறினீர்களா?''’என்று கேள்வியெழுப்பியவுடன், “""நான் அப்படிக் கூறவில்லை''’என்று தெரிவித்தார்.

"இங்குள்ள இந்துக் கோவில் திருவிழாவின்போது ஜமாத் சார்பாக சீர்வரிசை வழங்கினோம். இஸ்லாமியர்களிடமிருந்து இதையெல்லாம் ஏன் வாங்குகிறீர்கள் என மதப் பிரிவினையைத் தூண்டுவதுபோல் பேசுகிறார்'’’ என முத்தாய்ப்பாக ஒரு குற்றச்சாட்டையும் வைத்து பேச்சை முடித்தார் ஆரிஃப்.