கொரோனாவின் தாண்டவம் உச்சத்தில் இருந்த போது, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 50 கிலோ இலவச அரிசியுடன் ஆயிரம் ரூபாய் ரொக்கமும் இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டன. அரிசியை எடை குறைவாக போடுவது ரேஷன் கடைகளின் எழுதப்படாத விதி என்றாலும் ரொக்கத்தில் அவர்களால் கை வைக்க முடியவில்லை. ஆனால் தங்களது ரொக்கத் தொகையையும் ஆட்டையப் போட்ட விவகாரத்தை இப்போதுதான் கண்டுபிடித் துள்ளனர், ரொக்கத்தை இழந்தவர்கள்.
தேனி மாவட்டம் போடி தொகுதியில் உள்ளது சிறைக்காடு கிராமம். துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் தொகுதிக்குள் வரும் இந்த மலை கிராமத்தில் 48 குடும்பங்கள் வசிக்கின்றன. போடி நகரில் இருந்து 8 கி.மீ. தூரத்தில்தான் இந்த கிராமம் இருந்தாலும் போக்குவரத்து வசதி என்பது கிடையாது. காரணம் அங்கு வசிப்பவர்கள் அனைவருமே பளியர் இனத்தைச் சேர்ந்த பழங்குடி இன மக்கள்.
அந்த 48 குடும்பங்களில் 28 குடும்பங் களுக்கு மட்டும் ரேஷன் கார்டு இருப்பதால், மாதம் ஒரு முறை ஷேர் ஆட்டோவில் வந்து ரேஷன் பொருட்களை இறக்கிவிட்டுச் சென்றுவிடுவார்கள். மக்களே தங்களுக்குள் சமமாக பிரித்துக் கொள்வார்கள். அப்படி வசிக்கும் மக்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி கொடுத்தது மட்டும் உடனே தெரிந்துவிடுமா என்ன?
லாக்-டவுண் தளர்வுகள் அமலுக்கு வந்து போக்குவரத்து ஆரம்பித்தும் சமீபத்தில்தான் அந்த இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு போடி டவுணுக்கு போக முடிந்திருக்கிறது. அப்படிப் போன போது தான் 28 குடும்பங்களின் ஆயிரம் ரூபாய் ஆட்டையைப் போட்ட விவகாரம் தெரிந்திருக்கிறது. இது தெரிந்து அதிர்ச்சியாகி, போடி தாசில்தாரிடம் அம்மக்கள் முறையிட்ட போது, "கைநாட்டு வச்சு, கையெழுத்துப் போட்டு எல்லாத்தையும் நீங்க வாங்கிட்டீங்க' என்றிருக்கிறார். "ஐயா அரிசி வாங்குனோம், ரூவா வாங்கல' எனச் சொல்லிப் பார்த்தும் பலனில்லை.
அதன்பின் தங்களது எம்.எல்.ஏ.வும் துணை முதல்வருமான ஓ.பி.எஸ்.சுக்கும் கலெக்டர் பல்லவி பல்தேவிற்கும் மனு அனுப்பியும் பிரயோஜனமில்லாததால், சில நாட்களுக்கு முன்பு கலெக்டரை நேரில் சந்தித்தும் முறையிட்டுள்ளனர்.
அந்த பழங்குடி மக்களுக்கு நடந்த பக்கா சீட்டிங் குறித்து நம்மிடம் பேசினார் பளியர் பழங்குடி நல சங்க கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் ராஜன், ""இந்த ஆயிரம் ரூபாயில் மட்டுமல்ல, எல்லா வகையிலும் இந்த மக்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். பள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஷேர் ஆட்டோவில் போக வேண்டிய கட்டாயம். போடி நகரின் மொத்த குப்பைகளையும் கழிவுகளையும் இங்கே கொண்டு வந்து கொட்டி, மக்கள் வாழவே முடியாத நிலை. எம்.பி. தேர்தலில் நின்ற ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் ஓட்டுக் கேட்ட போது எல்லாத்தையும் சரி பண்ணிருவேன்னு சொன்னார். ஆனால் எதுவும் நடக்கல. பெரியனூத்து கோம்பையில் புதிதாக வீடுகள் கட்டித் தருவதாக கலெக்டர் சொல்லி ரெண்டு வருசம் ஆச்சு, அதுவும் என்னாச்சுன்னு தெரியல'' என்றார் வேதனையுடன்.
நாம் கலெக்டர் பல்லவி பல்தேவ்விடம் இந்த விவரங்களைச் சொன்ன போது, ""கொரோனா நிதி குறித்து விசாரிக்க டி.எஸ்.ஓ.வை அனுப்பியிருக்கேன். அதேபோல் புதிய வீடு கட்டும் பணி விரைவில் தொடங்கும்'' என்றார்.
பழங்குடி மக்கள்தானே என்று நினைக்காமல், அவர்களின் வாழ்வுரிமைக்கு உரியதை, பார்த்து செய்ங்க கலெக்டரம்மா.
-சக்தி