தமிழக அமைச்சரவையை மூன்றாவது முறையாக மாற்றி அமைத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரின் பதவி பறிக்கப் பட்டு, அவருக்கு பதிலாக மன்னார்குடி எம். எல்.ஏ.வும் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு வின் மகனுமான டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக சேர்க்கப்பட்டுள்ளார். நீக்கம் -சேர்த்தல் நடந்துள்ள நிலையில், அமைச்சர்கள் சிலரின் இலாகாக்களையும் மாற்றியமைத்துள் ளார் முதல்வர் ஸ்டாலின். இந்த மாற்றத்தின் பின்னணியில் நிறைய தகவல்கள்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கேபினெட்டில் அவர் உட்பட 35 பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். பேரவை விதிகளின்படி 35 பேர் மட்டுமே அமைச்சர் களாக இருக்க முடியும். 2021 மே மாதம் தி.மு.க. பொறுப்புக்கு வந்தபிறகு ஒரு வருடம் கழிந்த நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை பிற்படுத் தப் பட்டோர் துறைக்கு தூக்கியடித்தார் ஸ்டாலின். போக்குவரத்துத்துறை அமைச்ச ராக சிவசங்கர் நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து, கடந்த ஜனவரியில் உதயநிதியை அமைச்சராக்கும் வகையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட் டார் உதயநிதி ஸ்டாலின். அதேசமயம், ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், மெய்யநாதன், இளித்துரை ராமச்சந்திரன் ஆகிய 4 அமைச் சர்களின் இலாகாக்களும் மாற்றியமைக் கப்பட்டன. இந்தநிலையில்தான், மூன்றாவது முறையாக தற்போது மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜ னுக்கு எதிரான ஆடியோ விவகாரத்தை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ரிலீஸ் செய்ததிலிருந்தே, பி.டி.ஆரின் பதவிக்கு ஆபத்து; விரைவில் அமைச்சரவை மாற்றப்படுகிறது என்று கோட்டை வட்டாரங்களில் எதிரொலித்த படியே இருந்தது. முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து பி.டி.ஆர். விளக்கமளித்தும், ஆடியோ விசயத்தை அவர் மறுத்துப் பேசியும்கூட, அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சு ஓய்ந்து விடவில்லை.
உளவுத்துறை வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, "அமைச்சரவையை மாற்றுவது குறித்து 10 நாட்களுக்கு முன்பு சீனியர் அமைச்சர்களிடம் மட்டும் விவாதித்தார் ஸ்டாலின். அப்போது, அமைச்சர்களை மாற்றுவது அவசியம்தான். ஏன்னா…அமைச்சர்கள் பலருக்கும் ஃபைல்களை பார்க்கவே தெரியவில்லை. துறையின் செகரட்டரிகளிடம், தனக்கான வருவாய் குறித்தே ஆலோசிக்கிறார்கள். இதனால் அதிகாரிகளின் டாமினேஷன் அதிகமாகிவிட்டது.
ஆனால், மாற்றம்னு வரும்போது பி.டி.ஆரை தவிர்த்து மற்றவர்களை மாற்றினால் சரியாக இருக்காது. அதேசமயம், பி.டி.ஆருக்காக அமைச்சரவையை மாற்றினால் அது பா.ஜ.க.வுக்கு கிடைத்த வெற்றியாக பூதகரமாக்குவார்கள். அதனால் மாற்றத்தை கொஞ்சநாள் தள்ளிப் போடலாமே என சீனியர்கள் சொல்லியிருக் கிறார்கள். அதில் உடன்பட்ட ஸ்டாலினும், மாற்றத்தைத் தள்ளி வைக்கவே விரும்பினார். ஆனால், என்ன நடந்ததோ தெரியாது… அமைச்சரவையை உடனடியாக மாற்றியமைக்கும் முடிவுக்கு திடீரென வந்தார் முதல்வர்''’என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
இதுகுறித்து தி.மு.க. மேலிடத்திற்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது, ‘’டெல்டா மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் தருகிற வகையில் டி.ஆர்.பி. ராஜாவுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் டி.ஆர்.பாலு. சமீபத்தில் முதல்வர் டெல்லி சென்றபோதும், மகனுக்கு மந்திரி பதவி கிடைக்க அழுத்தமாக வலியுறுத்தினார் பாலு. அதனைத் தட்ட முடியாமல் ஓ.கே. சொன்னார் முதல்வர்.
ராஜாவை அமைச்சராக்கனும்னா கேபி னெட்டிலிருந்து ஒருவரை விடுவிக்க வேண்டும். யாரை விடுவிப்பது என யோசித்தபோது, பி.டி.ஆரை நீக்கலாம் என முடிவெடுத்தார் முதல்வர். அப்படி நீக்கினால் உங்களின் ஆளுமை வெளிப்படும் என ஸ்டாலினின் அட்வைசர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், பி.டி.ஆருக்கு ஆதரவான முதல்வரின் செயலாளர் ஒருவர் வேறுவிதமாக சில யோசனை சொல்ல, பி.டி.ஆரை ட்ராப் செய்யும் யோசனையை தள்ளி வைத்து விட்டார்.
அதன்பிறகு ஆலோசிக்கப்பட்டபோது டிக் அடிக்கப்பட்ட நபர்தான் ஆவடி நாசர். இவர் மீதும் இவரது மகன் மீதும் ஏகப்பட்ட புகார்கள் ஸ்டாலினிடம் ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது. அதற்கேற்ப ஆவினின் பால் கொள்முதலையும் விற்பனையையும் அதிகரிக்க முடியாமல் ஒவ்வொரு வாரமும் குறைந்தே வந்தது. தினமும் 42 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வந்த ஆவினின் கொள்முதல் 20 லட்சமாக குறைந்துபோனது. நிர்வாக ரீதியாக பல ஊழல்களும் நடந்தன. இதற்கு ஆவின் எம்.டி. சுப்பையன் ஐ.ஏ.எஸ்.தான் காரணமாக இருந்தாலும் அமைச்சர் நாசர் மீதே பழி விழுந்தது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் லாபி ஆவடி நாசருக்கு எதிராக இருந்ததால் அவரை நீக்கும் முடிவுக்கு வந்தார் ஸ்டாலின்.
அந்த வகையில் நாசரை நீக்கிவிட்டு ராஜாவை சேர்ப்பது என்பதைத் தாண்டி வேறு யாரையும் நீக்கும் யோசனை முதல்வருக்கு இருக்கவில்லை. இதனையடுத்து பி.டி.ஆருக்கு தண்டனை கொடுக்காமல் இருந்தால், அமைச்சரவை மாற்றத்தில் அர்த்தமில்லை என முதல்வர் நினைத்ததால்தான் பி.டி.ஆரின் துறையை மாற்றுவது என்கிற முடிவுக்கு வந்தார்.
அதன்படி, நிதித்துறை அமைச்சரான பி.டி.ஆரை அதிலிருந்து தூக்கி விட்டு அவரை தகவல் தொழில் நுட்பத்துறைக்கு மாற்றுவது எனவும், தகவல் தொழில்துறை அமைச்சர் மனோதங்கராஜை பால்வளத் துறைக்கு மாற்றுவது எனவும் முடிவு செய்தார். ஆனால், ஆரம்பத்தில் பால்வளத்துறையை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கும், தமிழ் வளர்ச்சித்துறை யை மனோதங்கராஜுக்கும் ஒதுக்கலாம் என ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் விளையாடினார்கள்.
அதனைக் கேள்விப்பட்ட சிவசங்கர், உதயநிதியை சந்தித்து போக்குவரத்துறைக்கு அமைச்சராகி இன்னும் ஒரு வருசம்கூட ஆகலை. அதற்குள் மாற்றமா? என ஆதங்கப்பட, அவருக் காக ஸ்டாலினிடம் உதயநிதி பேசி, சிவசங்கர் மாற்றத்தை நிறுத்தினார். அதேபோல, தகவல் தொழில்நுட்பத் துறையை நன்றாக வைத்திருக் கிறார் மனோதங்கராஜ். அவருக்கு தமிழ் வளர்ச்சித்துறையை ஒதுக்கினால் அது அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனையாகாதா? என உதயநிதி சொல்லவும் அதனை ஒப்புக்கொண்ட ஸ்டாலின், அதிகாரிகளின் யோசனையை புறக்கணித்துவிட்டு பால்வளத்துறையை மனோதங்கராஜுக்கு ஒதுக்க முடிவு செய்தார்.
இதனையடுத்து நிதித்துறையை யாருக்கு கொடுப்பது என்கிற விவாதம் நடந்தது. சீனியர் அமைச்சர் துரைமுருகனிடம் கொடுக்கலாம் என யோசித்து அவரிடம் ஸ்டாலின் பேச, இதற்கு "என்னை கேபினெட்டிலிருந்து எடுத்து விடுங் களேன் தம்பி' என நொந்துபோனவராக சொல்லியிருக்கிறார் துரை. அதனால் அந்த யோசனையைத் தவிர்த்தார் ஸ்டாலின்.
அதேசமயம், புதிய அமைச்சரான டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறையை ஒதுக்க ஸ்டாலின் முடிவு செய்திருந்ததால், அந்த துறையின் அமைச்சரான தங்கம் தென்னரசுவுக்கு ஏக வருத்தம். நிதியமைச்சர் பதவியை துரைமுருகன் மறுத்த நிலையில், தங்கம் தென்னரசுவிடம் பேசினார் ஸ்டாலின். அப்போது, "நிதித்துறையை உங்களுக்கு ஒதுக்குகிறேன்... நீங்கள் ஏற்க வேண்டும்' என சொல்ல, "அடுத்தாண்டு உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கவிருக்கிறது. இதற்காக நிறைய உழைத்திருக்கிறேன். இந்த நிலையில் என்னை மாற்றணுமா?' என கேட்க, அவரை சமாதானப்படுத்தி ஏற்கவைத்தார்.
மேலும், தங்கம் தென்னரசுவுக்கு துரைமுருகனிடமிருக்கும் கனிம வளத்துறை யையும் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்திருந்தார் முதல்வர். இதனை யறிந்த துரைமுருகன், ஸ்டாலினை சந்தித்து, "கனிம வளத்துறையை என்னிடமிருந்து எடுத்தால் நான் தவறு செய்தவனாகிறேன். ஆனால், நான் என்ன தவறு செய்தேன்? நீங்கள் சொன்ன பாதையில்தானே செல்கிறேன். அதற்கு எனக்குத் தண்டனையா? கடைசி காலத்தில் இதுதான் எனக்கு பரிசா தம்பி?' என உருக்கமாக துரைமுருகன் பேச, கனிமவளத் துறையை அவரிடமிருந்து எடுக்கும் யோசனையை யும் கைவிட்டார் ஸ்டாலின்.
இப்படி இலாகா மாற்றத்தில் நிறைய ஆதங்கங்களை எதிர்கொண்ட ஸ்டாலின், தனது சமயோஜித யோசனையால் பிரச்சினைகளை சரிக் கட்டினார். இந்த நிலையில் 10-ந் தேதி மாலையில் இறுதி முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, தகவல் தொழில்நுட்பத் துறைக்கு பி.டி.ஆர்., நிதித்துறைக்கு தங்கம் தென்னரசு, பால்வளத்துறைக்கு மனோதங்க ராஜ், தொழில்துறைக்கு டி.ஆர்.பி.ராஜா என இறுதி வடிவம் பெற்றது. கூடுதலாக தங்கம் தென்னரசுவிட மிருந்த தமிழ் வளர்ச்சித் துறை, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கூடுதலாக வழங்கப்பட் டது என்று விரிவாக சுட்டிக்காட்டினார்கள் தி.மு.க. மேலிடத்துக்கு நெருக்கமானவர்கள்.
அமைச்சரவை மாற்றம் இப்படி இருக்கும் நிலையில், டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதில் டெல்டா மாவட்டம் கொந்தளித்துக் கிடக்கிறது.
இதற்கிடையே தி.மு.க.விலுள்ள இஸ்லாமிய சமூகமோ, ஆவடி நாசரை அமைச்சரவையிலிருந்து நீக்கியதை ஈடுகட்ட அவருக்கு பதிலாக இஸ்லாமியர் ஒருவருக்கு வாய்ப்பளித்திருக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை? என அதிருப்தியடைந்திருக்கிறார்கள்.
இந்நிலையில், "முதல்வர் மு.க.ஸ்டாலினின் தலைமையின் கீழ் ஒரு திருத்தப்பட்ட பட்ஜெட்டை யும், இரண்டு ஆண்டு பட்ஜெட்களையும் சமர்ப் பித்துள்ளேன். முந்தைய ஆட்சியின் உச்சபட்ச பற்றாக்குறை, கடன் விகிதங்களை மீறி சாதித்துள் ளோம். உலக அளவில் முதலீடு, வேலை வாய்ப்பை உருவாக்கும் துறையான தகவல் தொழில்நுட்ப இலாகாவை எனக்கு வழங்கியுள்ளதற்கும் நன்றியுள்ளவ னாகத் திகழ்வேன்'' என பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆக, அமைச்சரவை மாற்றம் ஆரோக்கியமாக இருந்தாலும் இப்படிப்பட்ட எதிர்விளைவுகளையும் ஏற் படுத்தி வருகிறது.