லைமறைவாக இருந்தபடியே ஆன்லைனில் ஜாமீன் மனு தாக்கல் செய்த, கேரளாவின் 30 கிலோ தங்கம் கடத்தல் புகழ் ஸ்வப்னா சுரேஷ், தமிழ்நாட்டு எல்லை வழியாக காரில் சென்றது சி.சி.டி.வி. கேமரா மூலம் தெரியவர, ஞாயிறு அதிகாலையில் பெங்களூரு அருகே என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்டார். ஸ்வப்னாவின் கணவர், குழந்தையுடன் ஸ்வப்னாவின் கூட்டாளியும் தேடப்படுபவருமான சந்தீப் நாயரும் இருக்க, அள்ளிக் கொண்டு கொச்சின் நோக்கிச் சென்றது என்.ஐ.ஏ. ஸ்வப்னாவின் மற்றொரு கூட்டாளி சரித் நாயர் வீட்டையும் என்.ஐ.ஏ. சோதனையிட்டது.

sapana

ஸ்வப்னா சுரேஷின் சொந்த ஊர் திருவனந்தபுரத்தையடுத்த பாலராமபுரம். “40 ஆண்டுகளுக்கு முன்னே ஸ்வப்னாவின் தந்தை சுரேஷ் இங்கிருந்து துபாய்க்குச் சென்றுவிட்டார். ஸ்வப்னா அங்கேயே பிறந்து படித்தவள். சகோதரர் பிரைட் சுரேஷ் 28 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்துவருகிறார்’என்கிறார் தற்போதும் கேரளாவில் வசிக்கும் ஸ்வப்னாவின் தாயார் பிரபா, ஸ்வப்னா ஏப்ரலில்தான் கடைசியாக வீட்டுக்கு வந்தாள் என்கிறார்.

கேரளாவிலிருந்து துபாயில் தொழில் செய்துவந்த ஒருவரை ஸ்வப்னா திருமணம் செய்து, சில மாதங்களிலே விவாகரத்து செய்தார். பின்னர் இரண்டாவது ஒருவருடன் லிவிங் டூ கெதர் முறையில் குடும்பம் நடத்திவந்தார். அந்த உறவும் பாதியிலேயே முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 13 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

Advertisment

துபாயில் ஆடம்பர பங்களா, அதேபோல் கேரளாவில் அம்பலமுக்கில் காஸ்ட்லியான அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீடு, மேலும் பூஜபுரை முடவன்முகிழில் நடிகர் மோகன்லாலின் பழைய வீட்டினருகில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஆடம்பர வீடு, ஆடி கார் என சொகுசு வாழ்க்கையோடு உள்ள ஸ்வப்னாவுக்கு இதெல்லாம் எப்படி சாத்தியமானது என்ற கேள்வி தற்சமயம் எழுந்துள்ளது.

அரபி, ஆங்கிலம், மலையாளம், இந்தி என நுனிநாக்கில் பல மொழிகளைப் பேசும் திறமைகொண்ட ஸ்வப்னா முதலில் திருவனந்தபுரத்தில் தனியார் டிராவல் ஏஜென்சி நடத்திவந்தார்.

அதன்பிறகு 2013-ல் ஏர் இந்தியா நிறுவனத்தில் திருவனந்தபுரத்தில் ஃப்ளோர் மேலாளராக பணிக்குச் சேர்ந்தார். அப்போது உயரதிகாரி ஒருவர் மீது பொய்யான பாலியல் புகார் கூறி விசாரணைக்கு ஒத்துழைக்காததால் குற்றப்பிரிவு போலீசார் ஸ்வப்னா மீது நடவடிக்கை எடுத்தனர்.

Advertisment

பின்னர் 2016- அக்டோபரில் திருவனந்தபுரம் மணக்காடில் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் நிர்வாக மேலாளராகப் பணியாற்றிய ஸ்வப்னா அங்கு பி.ஆர்.ஓ.வாக பணியாற்றிய ஷரித்குமாருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார்.

இந்த நிலையில் தூதரகத்தின் முக்கிய அதிகாரியாக தன்னைக் காட்டிக்கொண்ட ஸ்வப்னா அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அதிகாரிகள், அமைச்சர்களுடன் நெருக்கமாகப் பழகுவதில் ஆர்வம் காட்டிவந்தார். தூதரகத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பலரை ஏமாற்றியதோடு, தூதரகத்தின் மூலம் பல முறைகேடுகளில் ஈடு பட்டதால் ஸ்வப்னா டிஸ் மிஸ் செய்யப்பட்டார்.

இந்த விசயம் வெளியே தெரிவதற்குள் தனது செல்வாக்கைப் பயன் படுத்தி கேரள அரசின் தகவல் தொழிட்நுட்பத் துறையில் விண்வெளி பூங்கா பிரிவு செயலாளராக பணி நியமனமானார். கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளருடனான அறிமுகத்தால், கேரள தலைமைச் செயலகத்தில் தனிச்செல்வாக்குடன் திகழ்ந்தார்.

ஜூலை 5-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வரும் உணவுப்பொருள் பார்சலில் தங்கம் கடத்திய விவகாரம் வெடித்து ஸ்வப்னா தலைமறைவானார். விசாரணையில் இந்தக் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது ஸ்வப்னாதான் என ஷரித்குமார் காட்டிக்கொடுத்தார்.

இதுகுறித்து கடுமையாக சாடியிருக்கும் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா... ""முதல்வர் மகளின் நிறுவனத்துக்கும் ஸவப்னாவுக்கும் தொடர்பு இருக்கிறது. அதுபோல் சிவசங்கர் முடவன்முகழில் உள்ள ஸ்வப்னாவின் வீட்டிற்கு அடிக்கடி சென்றுவந்தது சி.சி.டி.வி. காமிராவில் உள்ளது'' என்றார்.

பா.ஜ.க. மாநில தலைவர் சுரேந்திரனோ, ""தங்கக் கடத்தலில் ஸ்வப்னாவின் இன்னொரு கூட்டாளியான சந்தீப் நாயர் சி.பி.எம். கட்சிக்காரர். இவரும் ஸ்வப்னாவும் சேர்ந்து தொடங்கிய "கார்பன் டாக்டர்' என்ற நிறுவனத்தை கேரள சபாநாயகர் ஸ்ரீ ராமகிருஷ்ணன் தான் தொடங்கிவைத்தார்'' என்கிறார்.

ss

அமெரிக்காவில் இருக்கும் ஸ்வப்னாவின் சகோதரர் பிரைட் சுரேஷ் ஸ்வப்னா வெறும் 10-ம் வகுப்பு மட்டும்தான் படித்திருக்கிறார் என கூறியிருக்கிறார். 10-ம் வகுப்பு மட்டும் படித்த ஒருவரை எப்படி அரசின் உயர்பதவியில் நியமிக்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திருவனந்தபுரம் சுங்கத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது... ""முக்கிய தங்கக் கடத்தல் மன்னனான எர்ணா குளம் மட்டாஞ்சேரியைச் சேர்ந்த ஃபைசல் பரித்தின் வலதுகரமாகத்தான் ஸ்வப்னா செயல்பட்டு வந்துள்ளார். இதுவரை சுமார் 100 கோடிக்கு மேல் இவள் மூலம் தங்கம் கடத்தப்பட்டிருக்கலாம். சமீபத்தில் லாக்-டவுன் நேரத்தில் ஸ்வப்னாவே கேரளா அரசு வாகனம் மூலம் தங்கத்தை சென்னைக்கு கொண்டுசென்றதாகவும் தகவல் உள்ளது''’என்றனர்.

இதற்கிடையில் தலைமறைவான சந்தீப் நாயரின் மனைவி சௌமியாவை போலீசார் கைதுசெய்தனர். அதன்பிறகே ஸ்வப்னா, சந்தீப் நாயர் இருப்பிடம் பற்றி தெரிய வந்துள்ளது.

-மணிகண்டன்