ரஷ்யா -உக்ரைன் இடையிலான போரை உலகமே வருத்தத்தோடு பார்க்கும்போது, இந்திய தனியார் பெட்ரோலிய நிறுவனங்கள் மட்டும், 'எரியிற வீட்டில் பிடுங்குற வரைக்கும் லாபம்' என்ற கணக்கில், இந்தப் போரை வைத்து பெருத்த லாபம் சம்பாதிக்கின்றன. குறிப்பாக, இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ், வேதாந்தா, ஷெல் உள்ளிட்ட பெட்ரோலிய நிறுவனங்கள், இப்போரை மிகப்பெரிய தொழில் வாய்ப்பாகக் கருதுகின்றன.
அப்படியென்ன இதில் தொழில் வாய்ப்பு? கடந்த 2022, மே 28- 31 நக்கீரன் இதழில், 'பெட்ரோல்- டீசல் விலை குறைப்பு! நன்மையா? நாடகமா?' என்ற கட்டுரையில் குறிப்பிட்டதைப்போல், உக்ரைன் -ரஷ்யா போருக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்திருப்பது, உலகின் மூன்றா வது மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான ரஷ்யாவுக்கு பெருத்த அடியாகியிருக்கிறது. ரஷ்யா உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் தேக்கமடைவதால், அதைத் தவிர்க்க, மிகக்குறைவான விலையில் அதனை ஏற்றுமதி செய்யும் கட்டாயத்தி லுள்ளது. இதைச் சாதகமாக்கிக் கொண்டு, இந்தியாவிலுள்ள தனியார் பெட்ரோலிய நிறுவனங் கள், ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கிக் குவிக்கின்றன. நாளொன்றுக்கு சராசரியாக 8,19,000 பேரல் கச்சா எண் ணெயை ரஷ்யாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய் கிறது. இந்தியாவின் இறக்குமதியில் ஈராக்குக்கு அடுத்த இடத்திலிருந்த சவுதி அரேபியாவை பின்னுக் குத் தள்ளிவிட்டு தற் போது ரஷ்யா இரண்டா வது இடத்திலுள்ளது.
குறைந்த விலைக்கு இறக்குமதி செய்வதால் இந்தியாவுக்குத்தானே லாபம் என்று நினைக் கிறீர்களா? அதான் இல்லை. இந்நிறுவனங்கள் வாங்கும் ரஷ்ய கச்சா எண்ணெயை சுத்திகரித்து, பெட்ரோல் தட்டுப்பாடுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கும், மேலும் பல நாடுகளுக்கும் அனுப்புகின்றன. இப்படி ஏற்றுமதியில் கொள்ளை லாபம் பார்க்கத் தொடங்கியதால், உள்நாட்டில் பெட்ரோல் விற்பனையை இந்நிறுவனங்கள் குறைத்துக்கொண்டன. குறைவான விலைக்கு பெட்ரோலை இந்தியாவில் இறக்குமதி செய்துவிட்டு, அதன் பலனை இந்தியர்களுக்குக் கொடுக்காமல், வெளிநாடு களுக்கு பெட்ரோலை ஏற்றுமதி செய்வதை வேறு யாரேனுமென்றால் தேசத்துரோகம் என்று முத்திரை குத்தலாம். ஆனால் ரிலையன்ஸையும் வேதாந்தாவையும் அப்படிச் சொன்னால் குத்தமாகுமல்லவா?
இப்படி குறைந்த விலை பெட்ரோலியப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொள்ளை லாபமீட்டும் நிறுவனங்களை கட்டுக்குள் கொண்டுவர என்ன செய்வதென யோசித்த ஒன்றிய அரசு, கடந்த ஜூலை ஒன்றாம் தேதி பெட்ரோலிய ஏற்றுமதிக்கு அதிரடியாக வரி விதித்தது. பெட்ரோல் ஏற்றுமதிக்கும், விமான எரிபொருள் ஏற்றுமதிக்கும் லிட்டருக்கு 6 ரூபாயும், டீசல் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு 13 ரூபாயும், இந்தியாவிலேயே உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு டன்னுக்கு 23,250 ரூபாயும் வரியாக விதிக்கப் பட்டதை தனியார் பெட்ரோலிய நிறுவனங்கள் எதிர்பார்க்கவேயில்லை. அதிலும், ஒன்றிய அரசின் செல்லப்பிள்ளையான ரிலையன்ஸ் நிறு வனத்துக்கே வரியா? என்று ஷேர் மார்க்கெட்டில் பதற்றம் ஏற்பட்டதில் அன்றைய தினமே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் பலத்த அடி வாங்கின. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை, மும்பை பங்குச்சந்தையில் 2,575 ரூபாயி-ருந்து 9% தடாலடியாக இறங்கி ரூ.2,365 ரூபாய்க்கு வந்தது. தங்கள் செல்லப்பிள்ளையை கைவிட மனம் வருமா ஒன்றிய அரசுக்கு?
அடுத்த 19வது நாளில், பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரியான லிட்டருக்கு 6 ரூபாயை மொத்தமாக நீக்கியது. விமான எரிபொருளுக் கான ஏற்றுமதி வரியில் லிட்டருக்கு 2 ரூபாயும், டீசலுக்கான ஏற்றுமதி வரியில் லிட்டருக்கு 2 ரூபாயும் குறைத்தது. இதன்மூலம், தனியார் பெட் ரோலிய நிறுவனங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந் துள்ளன. பெட்ரோலிய நிறுவனங்கள், இந்திய அரசுக்கோ, மக்களுக்கோ பயனளிக்காதபடி பெட்ரோல் ஏற்றுமதியில் கொள்ளையடிப்பதைத் தடுக்க வரியை உயர்த்திய ஒன்றிய அரசு, அதுகுறித்து எந்த கட்சியினரும் கோரிக்கை வைக்காமலேயே வரியை நீக்கியிருப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்னொரு பக்கம், சாமானிய மக்கள் அன்றாடம் உணவுக்குப் பயன்படுத்தும் அரிசி, பால், மோர், தயிருக்கெல்லாம் ஜி.எஸ்.டி. விதித்த ஒன்றிய அரசை, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து, ஜி.எஸ்.டி.யை ரத்து செய்யுமாறு பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியும் அதற்கு செவிசாய்க்க மறுக்கிறது. பாதிக்கப்படும் மக்களும், வணிகர்களும் இந்தியாவெங்கும் குரலெழுப்பியும் கண்டுகொள்ளவில்லை. திருப்பூர், ஈரோடு, கரூர் பகுதிகளில் விசைத்தறி நெசவாளர்கள், நூல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தக்கோரி மாதக்கணக்கில் வேலை நிறுத்தம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தியும், மத்திய நிதியமைச்சருக்கும், பிரதமருக் கும் கோரிக்கை வைத்தும் ஒன்றிய அரசு கண்டு கொள்ளவில்லை. அதேபோல், டோல் கட்டண உயர்வு, ரயில் கட்டண உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு என எதைப்பற்றியும் கண்டுகொள் ளாமல் செயல்பட்டு வருகிறது. ஆக, கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு மட்டுமே நல்ல பிள்ளையாக நடக்கும் இந்த அரசுக்கு வாக்களிக்க மட்டும் தான் மக்களா என்று குமுறு கிறார்கள் பொதுமக்கள்! இது ஒன்றிய அரசின் செவிகளை எட்டுமா?