தேர்தல் சீட் ரேஸ் துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.சின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் பெரியகுளம், ஆண்டிப்பட்டி, போடி, கம்பம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் விறுவிறுப்பாகியுள்ளது. தற்போதைய நிலையில் அ.தி.மு.க.-தி.மு.க. தலா 2 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளன. அதனால் இருதரப்பிலும் மல்லுக்கட்டுதான்.
சட்டமன்றத் தொகுதி வாரியான தட்பவெப்பத்தைப் பார்க்கலாம்.
போடி
""தொகுதியின் சிட்டிங் பிரதிநிதியான துணைமுதல்வர் ஓ.பி.எஸ். "முதல்வர் பதவிவரை வகித்தும் கூட தொகுதிக்கான அடிப்படை வசதிகளைக் கூட பூர்த்தி செய்யவில்லை' என்ற மன வருத்தம் மக்கள் மத்தியில் பரவலாகவே உள்ளது. தேர்தல் வாக்குசேகரிப்பு நேரத்தில் இது வெளிப்படவும் கூடும். அவருடைய சமூக ஓட்டு வங்கியைத் தவிர மற்ற பெரும் பான்மையான சமூக ஓட்டுகள் எல்லாம் ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராகவே இருந்து வருகிறது. ஆனால் ஓ.பி.எஸ்.சோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அதிகாரத்தையும் பணபலத்தையும் வைத்து எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற கணக்கோடு மூன்றாவது முறையாக களமிறங்க ரெடியாகிவிட்டார்.
தொகுதி மக்களின் குறைகளையும், கோரிக்கை களையும் நிறைவேற்றிக் கொடுப்பதைவிட, தன் மகன் வழியில் வாக் காளர்களுக்குப் பணத் தைக் கொடுத்து தொகுதியை தக்க வைத்துக்கொள்ளும் முனைப்புடன் இல்லை. எடப்பாடியோடு பவர் யுத்தம் செய்வதில் மட்டும்தான் அவர் கவனமாக இருக்கிறார்'' என்கி றார்கள் அங்குள்ள அ.தி.மு.க.வினரே.
தி.மு.க.வோ இந்தத்தொகுதி யை கேட்ச் பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஓ.பி.எஸ்.சின் அரசியல் எதிரியான தங்க தமிழ்செல்வனை அங்கே வடக்கு மா.செ.வாக நியமித்திருக்கிறது. மேலும் பெரியகுளம் தொகுதி யையும் அவரிடமே ஒப்படைத் திருக்கிறதாம் அறிவாலயம். அதோடு தலைவர் ஸ்டாலினும் "ஓ.பி.எஸ்-ஐ எதிர்த்து நீங்கதான் போட்டி போடவேண்டும்' என்று தங்க தமிழ்செல்வனிடம் கூறியிருக்கிறாராம். அதனாலேயே தங்க தமிழ்ச்செல்வனும் போடி தொகுதியில் களமிறங்கி அ.தி.மு.க. உள்பட மாற்றுக் கட்சியினரைக் கட்சியில் இணைத்துக்கொண்டு தேர்தல் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
அவரது வேகம் ஓ.பி.எஸ். தரப்பைத் திகைக்க வைத்து வருகிறது. எனினும் தங்கதமிழ் செல்வன் தனது சொந்தத் தொகுதியான ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவதுதான் அவருக்கு சாதகமாக இருக்கும் என்கிற டாக்கும் அடிபடுகிறது. மற்றொரு புறம் இரண்டுமுறை ஓ.பி.எஸ்சிடம் தோல்வியைத் தழுவிய முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஒன்றிய செய லாளருமான லெட்சுமணனும் இந்தமுறை எனக்குத்தான் சீட் கொடுக்க வேண்டும் என்பதோடு ஓ.பி.எஸ். மீதான அதிருப்தியால் நான் வெற்றி பெற்றுவிடுவேன் என்று அறிவாலயத்தில் காய் நகர்த்தி வருகிறார். இந்த போட்டி யால், மற்ற உ.பி.கள் யாரும் சீட் கேட்க ஆர்வம் காட்டவில்லை.
பெரியகுளம்
ஓ.பி.எஸ்.சின் சொந்தஊரான பெரியகுளம் தனித்தொகுதியில் கடந்த இடைத்தேர்தலில் தோல்வியைத் தழுவிய கொட்டகை மயில் என்பவர் மீண்டும் சீட் கேட்டு வருகிறார். இருந்தாலும் ஓ.பி.ஆரின் தீவீர ஆதரவாளரான மாவட்ட எம்.ஜி.ஆர் அணி இணைச் செயலாளர் வழக்கறிஞர் தவமணி கடந்த முறையே சீட் கேட்டபோது "அடுத்தமுறை உனக்குத் தான்' என ஓ.பி.எஸ்சும், ஓ.பி.ஆரும் உறுதி கொடுத்திருக்கிறார்களாம். அதன் அடிப்படையில் வக்கீல் தவமணியும் சீட் கிடைக்கும் என்ற நம்பிக் கையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பி.ஜே.பியும் இத்தொகுதியை கேட்டு வருகிறது. அதிலும் பி.ஜே.பி.யின் மாநில தலைவர் முருகன் இத்தொகுதியில் நிற்க விரும்புகிறாராம். அதனால் வாரம் ஒருமுறை உளவுத்துறை மூலம் தொகுதி நிலவரங்களை கேட்டு வருகிறாராம். அதோடு ஓ.பி.எஸ்.சிடமும் முருகன் நெருக்கத்தை வைத்துக்கொண்டு பெரியகுளம் தொகுதியைத் தக்க வைக்கக் காய் நகர்த்தி வருவதால், பி.ஜே.பி.யினர் தேர்தல் பணியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இப்படி கூட்டணிக்குள்ளேயே சீட்டுக்கான போட்டியும் நடந்து வருகிறது.
இடைத்தேர்தல் மூலம் இத்தொகுதியில் ஜெயித்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சரவணன் நன்றி சொல்லக்கூட பெரும்பாலான பகுதிக்குச் செல்ல வில்லையாம். அதுபோல் "கட்சிக்காரர்களை அவர் மதிப்பதில்லை' என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.
மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினரான ஜீவாவிற்கு இடைத்தேர்தலில் கிடைக்க வேண்டிய சீட்டுதான் சரவணனுக்குப் போய் சேர்ந்தது என்பதால் இந்த முறை தனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஜீவாவும் காத்திருக்கிறார். அதுபோல் அன்பழகன், கீழப்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ் உட்பட சில உ.பி.களும் சீட் கேட்டு வருகிறார்கள். அதோடு தி.மு.க. கூட்டணியோடு கம்யூனிஸ்ட் இருந்தபோது இத்தொகுதி யை அது கைப்பற்றியிருந்ததால் இப்போதும் தொகுதி எதிர்பார்ப்பில் இருக்கிறது சி.பி.எம்.
ஆண்டிப்பட்டி
கடந்த இடைத்தேர்தலில் தோல்வியை தழுவிய ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் லோகி ராஜன் மீண்டும் ஓ.பி.எஸ் மூலம் சீட் கேட்டு வரு கிறார். ஆனால் தொகுதியில் உள்ள பெரும் பாலான ர.ர.க்கள் "அ.தி.மு.க. கோட்டையாக இருந்து வந்த தொகுதியை இடைத்தேர்தலில் தி.மு.க. விற்குத் தாரைவார்த்து தன் அண்ணனை வெற்றிபெற வைத்துவிட்டார் லோகிராஜன். அப்படிபட்டவ ருக்கு மீண்டும் சீட் கொடுக்கக்கூடாது' என ஒருபுறம் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள் அ.தி.மு.க.வினர். மற்றொரு புறம் ஓ.பி.எஸ்.சின் தீவிர ஆதரவாளரான மாவட்ட துணைச்செயலாளரான முருக்கோடை ராமரும் இந்தமுறை சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறார். அதை தொடர்ந்து சில ர.ர.க்களும் சீட்டுக்காக மோதி வருகிறார்கள்
அ.தி.மு.க. கோட்டையாக இருந்த தொகுதியை இடைத்தேர்தல் மூலம் தம்பியை தோற்கடித்து தி.மு.க. கோட்டையாக்கிய மகாராஜன்தான் மீண்டும் மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் ஆசியோடு சீட் கேட்டு வருகிறார். அ.தி.மு.க.வில் மீண்டும் மகாராஜன் தம்பியான லோகிராஜனுக்கு சீட் கொடுக்கும்பட்சத்தில் மீண்டும் மகாராஜனை நிறுத்தினால் அவுங்க உறவினர்களும், சமூக மக்களும் கூட இந்தமுறை லோகிராஜனை வெற்றிபெற வைப்போம் என்ற முடிவில் இருக்கி றார்கள். அதனால மீண்டும் மகாராஜ னுக்கு சீட் கொடுத்தால் வெற்றி பெறுவது கடினம் என்ற பேச்சு உ.பி.கள் மத்தியில் அடிபடுகிறது. இந்த நிலையில் தான இங்கே தொடர்ந்து சீட் கேட்டு வந்த முன்னாள் மாவட்ட செயலாளரும், மாநில தீர்மானக்குழு இணைச் செயலாளருமான ஜெயக்குமார் அறிவாலய அருளால் தனக்கு சீட் கிடைக்கும் என்று நம்புகிறார். இதேபோல் முன்னாள் மாவட்ட செயலாளர் மூக்கையா உள்பட சில உ.பி.களும் சீட்டில் ஆர்வம் காட்டுகின்றனர்.
கம்பம்
சிட்டிங் எம்.எல்.ஏ.வான ஜக்கையன் இ.பி.எஸ். ஆதரவாளர் என்று வெளிப்படையாக தெரிந்ததில் இருந்தே மீண்டும் சீட் கொடுக்கக்கூடாது என்ற முடிவில் ஓ.பி.எஸ். இருந்து வருகிறார். அதுபோல் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும் "ஜக்கையனுக்கு மீண்டும் சீட் கொடுத்தால் தேர்தலில் பணியாற்றமாட்டோம்' என்று வெளிப்படையாகவே கூறிவருகிறார்கள். அதனாலேயே ஓ.பி.எஸ். தனது இளைய மகனான ஜெயபிரதீப்பை இத்தொகுதியில் களமிறக்கும் முடிவில் இருக்கிறார். அதனால் இப்போதே சின்னமனூரில் இருந்து உத்தமபாளையம் செல்லும் வழியில் ஒரு பண்ணை வீட்டில் ஜெயபிரதீப் முகாமிட்டு தேர்தலுக்கான பணியில் ஈடுபட்டு வருகிறார். அதைக்கண்டு டென்சன் அடைந்த ஜக்கையனோ, இ.பி.எஸ் மூலம் மீண்டும் சீட் கேட்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். ஒருவேளை இத்தொகுதி கிடைக்கவில்லை என்றால் மதுரையில் சீட் கேட்கவும் தயாராகி வருகிறார். இந்த நிலையில் சிட்டிங் மாவட்ட செயலாளர் சையதுகான், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமார், கூடலூர் நகர செயலாளர் அருண்குமார் ஆகியோர் எம்.எல்.ஏ. கனவில் மிதந்தபடி சீட்டுக்கு ரூட் போட்டுவருகின்றனர்.
தி.மு.க.விலோ தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வு வான கம்பம் ராமகிருஷ்ணன் மீண்டும் களமிறங்க இருக்கிறார். இத்தொகுதியில் 6 முறை போட்டியிட்டு, 4 முறை வெற்றி பெற்றதின் மூலம் தொகுதியிலும் ராமகிருஷ்ணனுக்கு நல்ல பெயர் இருக்கிறது. அதோடு தலைவர் ஸ்டாலின் ஆசியும் அவருக்கு இருப்பதால் சீட் உறுதி என்ற நம்பிக்கையில் உற்சாகமாகவே வலம் வருகிறார். இருந்தாலும் முன்னாள் எம்.பி.யும் தேர்தல் பணிக்குழு செயலாளருமான கம்பம் செல்வேந்திரனும் சீட் வாங்க ஆசைப்படுகிறார்.
தேனி மாவட்டத்தில் இப்போது தேர்தல் காய்ச்சல் பலரையும் வாட்டி எடுத்துவருகிறது. ஆளும்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் இப்போதே பலப் பிரயோகத்துக்குத் தயாராக இருக்கிறார்கள். அதனால் தேனி மாவட்டமே தகிப்பேறிக் கிடக்கிறது.
-சக்தி