பொதுக்குழு கூட தடைகோரிய ஓ.பி.எஸ்.ஸின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 2500 போலீசாரின் பாதுகாப்புடன், கட்சித் தொண்டர்களின் எதிர்பார்ப்புகளுடன் சென்னை வானகரத் திலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் பொதுக்குழு கூடியது.
அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டத்துக்கு காலை 5 மணி முதலே ஆட்கள் வரத்தொடங்கினர். கூட்டத்துக்கு வரும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கான உணவு ஏற்பாடுகளை எடப்பாடியின் ஆதரவாளர்களான வேலுமணி, தங்கமணி ஆகியோர் பொறுப்பேற்றுக் கவனித்துக் கொண்டனர்.
ஸ்ரீவாரி மண்டபத்துக்குள் உறுப்பினர்களை 9 மணி முதல் அனுமதிக்கத் தொடங்கினர். மண்டபத்துக்குள் நுழைந்த உறுப்பினர் களில் பெருவாரியாக எடப்பாடியின் ஆதரவாளர்களே தென்பட்டனர். 400 பேர் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்.
பொதுக்குழு கூடும் முன்பே ஓ.பி.எஸ். அணியில் மிச்சம் மீதியிருக்கக்கூடிய மாவட்டச் செயலாளர்களை தன் வசமிழுக்க எடப்பாடி அணி வேலையைத் தொடங்கியிருந்தது. அவர்களை லாவகமாக மிரட்டும் வேலையை தங்கமணி, வேலுமணி அணி கவனித்துக்கொண்டது. முதலில் பண ஆசை காட்டப்பட்டது. கிட்டத்தட்ட 4 கோடிவரை கனமாகக் கவனிக்கப்பட்டது. அதற்கு மயங்காதவர்களை, "கட்சி எங்கள் வசம்தான் வரப்போகிறது. அப்போது இன்று முரண்டு பிடித்தவர்களிடம் உள்ள கட்சிப் பொறுப்புகள் அனைத்தும் பிடுங்கப்படும்' என மிரட்டியிருக்கி றார்கள்.
ஏற்கெனவே சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்குப் பின் பலரிடமும் கட்சிப் பொறுப்பு மட்டும்தான் மிஞ்சியிருக்கிறது. அதையும் இழக்கவேண்டுமா என்ற அச்சத்திலும், எடப்பாடி பக்கமே வலுவாகத் தெரிவதைப் பார்த்தும் அணி மாறினர். சென்னை தென்கிழக்கு மா.செ.யும் வேளச்சேரியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஓ.பி.எஸ். ஆதரவாளருமான அசோக் அணி மாறியதும்கூட இந்த வியூகத்தின்படிதான். ஓ.பி.எஸ். ஆதரவாளர்களாகக் கருதப்பட்ட மைத்ரேயன், மாஃபா பாண்டியராஜன் போன்றோர் கடைசி நேரத்தில் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து ஓ.பி.எஸ்.ஸை தவிக்க விட்டிருக்கின்றனர்.
பொதுக்குழுவில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என ஓ.பி.எஸ். பேசியிருந்ததால், ஓ.பி.எஸ். தரப்பினரால் பிரச்சனை வராமல் தடுக்கும் பொருட்டு மண்டபத்தின் மூன்று வாசலிலும் பவுன்சர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்களை மாதவரம் மூர்த்தி ஏற்பாடு செய்திருந்தார். இவர்கள் பவுன்சர்கள் என்றபோதும் தொழில்ரீதியான பவுன்சர்கள் அல்ல,… இக்கட்டான சூழலைச் சமாளிப்பதற்காக மூர்த்தி தரப்பால் ஆயத்தம் செய்யப்பட்ட குண்டர்கள்.
ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் உள்ளே வரும்போது, எடப்பாடி ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராகக் கோஷமெழுப்பினர். போக்குவரத்து நெரிசலைத் தாண்டி சரியாக 10:29 மணிக்கு மண்டபத்தை அடைந்த ஓ.பி.எஸ். மண்டபத்துக்குள் நுழையும்போதும், இந்த எதிர்ப்புக் கோஷம் வலுவாக இருந்தது.
மாறாக இ.பி.எஸ். 11.10-க்குத்தான் மண்டபத்துக்கு வந்தார். வரும்போது வரவேற்புக் கோஷம் காதைப் பிளந்தது. நடு நடுவே ஓ.பி.எஸ்.ஸை விமர்சிக்கும் கோஷம் எழுந்தபோது, தொண்டர் களைத் தடுக்காமல் உள்ளே சென்றார். முன்பே வந்த ஓ.பி.எஸ். மேடையேறாத நிலையில், தாமதமாக வந்த இ.பி.எஸ். முதல் ஆளாக மேடையேறினார். அதன் பின்பே ஓ.பி.எஸ். மேடைக்கு வந்தார்.
பொதுக்குழு -செயற் குழுவைத் தொடங்கிவைக்க ஓ.பி.எஸ். முன்மொழிய, அதனை இ.பி.எஸ். வழி மொழிந்தார். பின் பேசவந்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், இந்தப் பொதுக்குழு அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக அறிவிக்க, கூட்டத்தில் கூச்சலும் முழக்கமும் எழுந்தது.
பின் பேசிய தமிழக முன்னாள் அமைச்சரான கே.பி. முனுசாமி, “"அடுத்து நடக்கக்கூடிய பொதுக்குழு- செயற்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானத் தோடு சேர்த்து மற்ற 23 தீர்மானங்களும் நிறைவேற்றப்படும்''’எனப் பேசி முடித்தார். பின் மூத்த அ.தி.மு.க. நிர்வாகியான செம்மலை அ.தி.மு.க.வைச் சேர்ந்த பிரமுகர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.
பொதுக்குழுவில் தற்காலிக அவைத் தலைவராகத் திகழ்ந்த தமிழ்மகன் உசேனை, கழக அவைத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக இ.பி.எஸ். அறிவித்தார். அதையடுத்துப் பேசிய தமிழ் மகன் உசேன், நன்றியுரையில் ஓ.பி.எஸ்.ஸை ஒருங் கிணைப்பாளர் என குறிப்பிட்டு அவரது பெயரைக் குறிப்பிடுவதைத் தவிர்த்தார். அதேசமயம் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். என எடப்பாடி பெயரைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார்.
அடுத்துப் பேசவந்த சி.வி சண்முகம், “"2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஒற்றைத் தலைமை வேண்டும் என கடிதம் எழுதியிருப்பதாகவும், இரட்டைத் தலைமையால் தி.மு.க.வை எதிர்த்துச் செயல்பட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பின்ன டைவை சமாளிக்க முடியாத நிலை கண்டு, தொண்டர்களிடையே உற்சாகம் குறைந்துள்ளது. எழுச்சியோடு கழகம் செயல்பட முடியவில்லை. தி.மு.க.வை எதிர்த்துச் செயல்பட, இரட்டைத் தலைமையை ரத்து செய்துவிட்டு, ஒற்றைத் தலைமையை கொண்டுவரவேண்டும். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்த தைப்போல், ஜெ. காலத்தில் இருந்ததைப் போல தைரிய மாகச் செயல்படக்கூடிய ஒற்றைத் தலைமையே தேவை''’என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக விளக்கி, அக்கடிதத்தை அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனிடம் அளித்தார்.
2190 பொதுக்குழு உறுப்பினர்களால் கையெழுத்தி டப்பட்டு அளிக்கப்பட்ட கடித கோரிக்கையை ஏற்று, அடுத்த பொதுக்குழு 11-7-2022 அன்று காலை 9.15 மணிக்கு இன்னொரு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார். உடனே அதனை "சட்டத்துக்குப் புறம்பான பொதுக்குழு' என வைத்திலிங்கம் முழங்கினார். தொடர்ந்து வேலுமணி பேசவந்தபோது, பொதுக்குழுவிலிருந்து கோபமாக ஓ.பி.எஸ். வெளியேறினார். ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பொதுக்குழு கூட்ட அறிவிப்புக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். வெளியேறிச் சென்ற ஓ.பி.எஸ். மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. மேலும் மண்டபத் துக்கு வந்த அவரது கார் டயரும் பஞ்சராக்கப் பட்டது.
"இது சட்டவிரோத பொதுக்குழு. கூட்ட அறிவிப்பு எனவும், ஓ.பி.எஸ். கையெழுத்திட்டால் தான் அந்த அறிவிப்பு செல்லும்' என ஊடகங்களிடம் வைத்திலிங்கம் கொந்தளிப்புடன் அறிவித்தார். மண்டபத்திலிருந்து ஓ.பி.எஸ்.ஸுடன் வெளியேறிய மனோஜ்பாண்டியன், மண்டபத்துக்குள் நுழைவதற்குக் கொடுக்கப்பட்ட அடையாள அட்டை உள்ளிட்டவை களை கோபமாக விசிறியடித்தார்.
இரு தரப்பிலும் நடந்த களேபரங்களுடன் முடிவுக்கு வந்தது பொதுக்குழு.