பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் கொள்கை முடிவுகள், அந்நிறுவனங்களின் பணியாளர்களை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த சமூகத்தையே பெரிதும் பாதிக்கிறது.
பில்டிங் காண்ட்ராக்டர் ஹரி, "பல ஆண்டுகளாக பில்டிங் கட்டுதல், ரோடு மற்றும் பாலங்கள் கட்டுதல். கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறேன். அதில் பல ஆயிரம் பேர்களுக்கு வேலை கொடுத்துள்ளேன். இப்பொழுது பெரும்பாலான தமிழர்கள் வேலைக்கு வருவ தில்லை. வட மாநிலத்தவர்கள் தான் வேலை செய்கிறார்கள். மாதம் பத்தாயிரம் ரூபாயை ஊருக்கு அனுப்புவதாக ஒரு வடமாநில தொழிலாளி என்னிடம் சொன்னார். திருப்பூரில் மூன்று லட்சம் பேருக்கு மேல் வட மாநிலத்தவர்கள் பணியாற்றுகிறார்கள். இதேபோல் ஈரோடு, சென்னை, கோவை என தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களைக் கணக்கில்கொண்டால் முப்பது லட்சம் பேருக்குமேல் வட மாநிலத்தவர் கள் இங்கே பணியாற்ற வாய்ப்புள்ளது. அப்படி யானால் மாதந்தோறும் எவ்வளவு கோடி ரூபாய் வட மாநிலங்களுக்கு இங்கிருந்து செல்லுமெனக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள். இதேபோல் வட மாநிலத்தைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் முதல் பெருமுதலாளிகள் வரை கணக் கிட்டால் இந்த தொகை இன்னும் பெரிதாகும்'' என்கிறார்.
"வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் மத்திய மாநில அரசுகள் பொதுத்துறை நிறுவனங் களை தனியாருக்கு விற்க தீவிர முயற்சியில் இருக்கின்றன. 4,000 ஏக்கர் பரப்பளவுள்ள சேலம் இரும்பாலை, ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய் லாபம் ஈட்டித் தந்தது. அந்நிறுவனத்திலுள்ள அதிகாரிகள், உதிரி பாகங்கள் வாங்குவது முதல் பல்வேறு வழிகளில் தரமற்ற பொருட்களை கொள்முதல் செய்து கமிஷன் சம்பாதிப்பதன் விளைவாக நஷ்டம் ஏற்பட, தற்போது தனியாருக்கு தாரைவார்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, அவுட்சோர்ஸிங் மூலம் ஆளெடுக்கத் தொடங் கியதால் போக்குவரத்துத் துறையில் புதிதாக டிரைவர், கண்டக்டர் பணிகளுக்கு ஆளெடுக்க வில்லை. தொழிலாளர்களுக்கு கிராஜுட்டி, இன்சூரன்ஸ், பென்ஷன் போன்ற எதுவும் கிடைக்காமல் அல்லாடுகிறார்கள். தொழிலாளர் களும், தொழிற்சங்கங்களும் இணைந்து போராடினால்தான் தனியார்மயமாவதைத் தடுக்க முடியும்'' என்கிறார் சி.ஐ.டி.யு.சி. சங்கத்தைச் சேர்ந்த திண்டிவனம் ராமதாஸ்.
ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் ஆறுமுகம் கூறுகையில், "முன்பு ஜியோ செல்போன் இலவசமாக டேட்டா கொடுக்கத்தொடங்கி, பின்னர் படிப்படியாக ரூ.49. ரூ.99, ரூ.149 என அடுக்கடுக்காக அதிகரித்து, தற்போது 1400% மடங்கு உயர்த்தியுள்ளது. அதேபோல் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளைக்காரன் உப்புக்கு வரி போட்டதை எதிர்த்தோம், இப்போதோ அரிசிக்கே வரி போடுகிறார்கள். அனைத்துப் பொருட்களும் சீனாவிலிருந்து இறக்குமதியாவதால் சிறுதொழில்கள் நசிவடைந்துள்ளன. ரயில்வே துறையில் வட மாநிலத் தவர்களை நுழைக்க தேர்வுகளில் முறைகேடுகள் நடக்கின்றன. இதற் கெதிராக அனைத்துத் தரப்பினரும் போராட வேண்டும்'' என்றார்.
"ஆண்டுக்கு 40 ஆயிரம் பேர் ஓய்வு பெறுகிறார்கள். அந்த இடத்தில் மீண்டும் பணி யாளர்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதனால் மக்களுக்கு அரசுத் திட்டங்கள் போய் சேர்வதில் கால தாமதம் ஏற்படுகிறது. உரிய காலத்தில் மக்களுக்கான பணி களையும் செய்து கொடுக்க முடியவில்லை. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 7 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், சில ஆயிரம் இடங்களை மட்டுமே நிரப்புவதற்கு குரூப் தேர்வுகள் நடத்துவதற்கான அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது. இது எங்களைப் போன்றவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சுமார் இரண்டாயிரம் கல்லூரி பேராசிரியர் பணியிடங்களை, தற்காலிக அடிப் படையில் நிரப்புவதற்கு உயர்கல்வித் துறையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு வேலை யைப் பெறுவது பகீரத முயற்சியாக உள்ளது'' என்கிறார் விருத்தா சலத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை கீதா.
நெய்வேலி என்.எல்.சி. மஸ்தூர் சங்க பொதுச்செய லாளர் சதாசிவராவ், "மத்திய அரசின் 245 பொதுத்துறை நிறுவனங் களில் 95% நஷ்டத்தில் இயங்குகின்றன. இதற்கு காரணம் அதிகாரிகளின் ஊழல் முறைகேடு கள்தான். 1991இல் பிரதமராக இருந்த நரசிம்மராவும், அப்போதைய நிதியமைச்சர் மன்மோகன்சிங்கும், தனியார் மயம்... தாராளமயம் என்று கடை விரித்தார்கள். நட்டமடைந்தால் உலக வங்கி கடன் தராது என்ற காரணத்திற்காக பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டன. 2014ல் பிரதமரான மோடி, அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளையும் அழைத்துப் பேசினார். தற்போது, ஆந்திராவில் நஷ்டத்தில் இயங்கிவரும் உரத்தொழிற்சாலையை 6,500 கோடி செலவில் புனரமைப்பு செய்யும் பணியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை லாபகரமாக இயக்க வேண்டுமானால் அங்கு நடக்கும் முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டும்'' என்கிறார்.
சி.ஐ.டி.யு.சி. சங்க நிர்வாகி பெரம்பலூர் அகஸ்டின் கூறுகையில், "மத்திய அரசு பொதுத்துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் கொள்கையின் காரணமாக, பல்வேறு சுமைகளை மக்கள் மீது சுமத்தப்பார்க்கிறது. தனியார்மயத்தில் முதலாளிகள் கொள்ளை லாபம் சம்பாதிக்க மட்டுமே பார்ப்பார்கள், மக்கள் நலனைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. கொரோனா காலத்தில் தனியார் மருத்துவமனைகள் மூடப் பட்டன. தனியார் பஸ்கள் ஓடவில்லை. 50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்து இயங்கியது. அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், தங்கள் உயிரை பணயம் வைத்து பொதுமக்களைக் காப்பாற்றினார்கள். ஒரு சில தனியார் மருத்துவமனைகள் பல லட்சங்களை மக்களிடம் பிடுங்கின. புயல், மழை போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் அரசு ஊழியர்கள்தான் மக்களைப் பாதுகாக்கிறார்கள். சேதமடைந்த மின் கம்பங்களை உடனுக்குடன் சரிசெய்தார்கள். இதுவே தனியார் வசமிருந்தால் அதனை எதிர்பார்க்க முடியாது. அரசுத் துறைகள் தனியார் மயமானால் நாளைக்கு பொதுமக்கள் சாப்பாட்டுக்குக்கூட தனியார் முதலாளிகளிடம் கையேந்தி நிற்கவேண்டிய நிலை வரும். அந்நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி பார்லிமென்ட் முன்பு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற உள்ளது'' என்கிறார்.
நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் மூன்றாவது சுரங்கப் பணிக்காக 25,000 ஏக்கர் விளைநிலத்தை கையகப்படுத்த முயல்வதைக் கண்டித்தும், என் எல் சி நிர்வாகம் அங்கிருந்து வெளியேற வலியுறுத்தியும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இரண்டு நாள் விழிப்புணர்வு நடை பயணத்தை ஏழாம் தேதி காலை நெய்வேலி அருகில் உள்ள வானதிராயபுரம் கிராமத்தில் துவக்கினார். அப்போது அப்பகுதி மக்கள் மத்தியில் பேசிய அன்புமணி, "நெய்வேலி பகுதியில் 49 கிராமங்களில் இருந்து 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை என்.எல்.சி. நிறுவனம் கையகப்படுத்த முயற்சி செய்து வருகிறது கடந்த 66 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி மக்களிட மிருந்து 37 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்திய என்.எல்.சி. நிர்வாகம், இதுவரை யாருக்கும் மாற்று பட்டா நிலம் வழங்கவில்லை. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் பெரிய அளவில் வழங்கவில்லை. 1800 பேர்களுக்கு மட்டுமே வேலை வழங்கியுள்ளது. அவர்களும் ஓய்வு பெற்றுவிட்டார்கள். தற்போது என்.எல்.சி. நிர்வாகம், நிலத்தை விவசாயிகளிட மிருந்து பிடுங்கி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைக்கப் போகிறார்கள்.
என்.எல்.சி. நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து மத்திய அரசே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. தனியாரிடம் ஒப்படைப்பதற்காக 25,000 ஏக்கர் நிலங்களை விவசாயிகளிடமிருந்து பறிக்கலாமா? 1987ஆம் ஆண்டு விவசாயிகளிடம் கையகப்படுத்திய பத்தாயிரம் ஏக்கர் நிலம் அப்படியே நிர்வாகத்திடம் உள்ளது. அதி லிருந்து இன்னும் 40 ஆண்டுகளுக்கு நிலக்கரி வெட்டி எடுத்து மின்சாரத்தைத் தயாரிக்க முடியும். என்.எல்.சி. நிறுவனம் மின்சாரம் தயாரிக்காவிட்டால் தமிழகம் இருண்டு விடும் என்று பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் தேவை 18 ஆயிரம் மெகாவாட். ஆனால் என்.எல்.சி. நிர்வாகம் 2000 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்கிறது. அதிலிருந்து 800 மெகாவாட் மின்சாரம்தான் தமிழகத்திற்கு கொடுக்கிறது'' என்று மக்களிடம் எடுத்துக் கூறி பிரச்சாரத்தை தொடங்கினார். என்.எல்.சி. நிறுவனத்தை தனியாருக்கு தாரைவார்ப்பது தடுக்கப்படுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.