நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதில் மருத்துவர் ராமதாஸுக்கும் அன்புமணிக்குமிடையே கருத்து முரண்பாடு இருந்துவந்தது. மருத்துவர் ராமதாஸோ, பா.ஜ.க.வை மிகக்கடுமையாக எதிர்த்துப் பேசிவந்தார். 2019ஆம் ஆண்டில், அவரளித்த பேட்டியில், "பா.ஜ.க. ஆட்சிக்கு சைபருக்கும் கீழே ஏதேனும் மதிப்பெண் இருந்தால் அதைத்தான் கொடுப்பேன். அப்படிப்பட்ட கட்சியோடு எப்படி கூட்டணி வைக்க முடியும்? நூற்றுக்கு இருநூறு விழுக்காடு கூட்டணி வைக்காது'' என்று கூறி யிருந்தார். மேலும் அவர், "என்ன சாதித்தது பா.ஜ.க.? இந்திய மக்க ளுக்கும், தமிழக மக்களுக்கும் என்ன செய்தார்கள்? எல்லா மாநிலங் களின் உரிமைகளையும், அதிகாரத்தையும் அவர்களே எடுத்துக்கொள் கிறார்கள். அவங்க நோக்கமே இந்தியையும், இந்துத்வா கொள்கை யையும் புகுத்துவதுதான். தேசிய கட்சிகளில் காங்கிரஸுடன் வேண்டுமானால் கூட்டணி வைக்கலாம். மற்றபடி, திராவிடக் கட்சிகளுடனும், பா.ஜ.க.வுடனும் கூட்டணி வைக்கமாட்டோம்'' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், அன்பு மணியின் ஒன்றிய அமைச்சர் கனவுக்காக, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் முடிவுக்கு பா.ம.க. வந்திருப்பதற்கு பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு உருவாகியுள் ளது. பா.ம.க. தொண்டர்களைப் பொறுத்தவரை, பெரும்பாலானோர் அ.தி.மு.க.வுடனான கூட்டணியையே விரும்புகிறார்கள். அதற்கேற்ப அ.தி.மு.க.வும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை, ராமதாஸ் வீட்டுக்கே நேரடியாக அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்நிலையில், அ.தி.மு.க.வை தங்கள் கூட்டணிக்கு இழுப்பதில் தோற்றுப்போன பா.ஜ.க. தலைமை, பா.ம.க.வுக்கு வலைவிரிக்க, அன்பு மணியோடு நடைபெற்ற பேச்சு வார்த்தையில், பா.ஜ.க. கூட்டணி யில், 10 மாநிலங்களவை தொகுதி யில் போட்டியிடுவதற்கான ஒப் பந்தத்தில், கடந்த 19ஆம் தேதி காலையில், பா.ம.க. தலைமை கையெழுத்திட்டு அதிர்ச்சியளித் தது. அன்று மாலை, சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் கலந்துகொண்டனர். பா.ம.க., பா.ஜ.க. கூட்டணிக்கு சமூக வலைத் தளத்தில் பா.ம.க. தொண்டர்களும், அனுதாபிகளும் எதிர்ப்புக் கருத்துக் களைப் பதிவிடத் தொடங்கினர். 'மாம்பழத்துக்கு மட்டுமே எங்கள் வாக்கு, தாமரை நின்றால் வாக்கு இல்லை' என்று பொங்கினர்.
ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, "2014ல் தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. தவிர்த்து பா.ஜ.க. தலைமையில் கூட்டணி அமைந் தது. கூட்டணி ஒப்பந்தத்தின்போதே வெற்றி பெற்றால் பா.ம.க. வுக்கு அமைச்சர் பதவி தருகிறோமென்றார்கள். அத்தேர்தலில் வென்று மோடி பிரதமரானார். தருமபுரியில் அன்புமணி வெற்றி பெற்றார். ஆனால் அன்புமணிக்கு அமைச்சர் பதவி தரவில்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. இணைந்தது. பா.ஜ.க. மற்றும் மோடிக்கு எதிரான அலையால் தமிழ்நாட்டில் 38 தொகுதிகளில் எங்கள் கூட்டணி தோல்வியடைந் தது. அந்த இரண்டு தேர்தல்களைவிட இந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மீதான அதிருப்தி மக்களிடம் அதிகமாக இருக்கிறது. எங்கள் தொண்டர்கள் மட்டுமல்ல, மக்களும், நாங்கள் அ.தி.மு.க.வுடன் தான் கூட்டணி வைப்போம் என நினைத்தார்கள், விரும்பினார்கள். எங்கள் தொண்டர்களும், பா.ஜ.க.வினரும் கடந்த சில மாதங்களாகக் களத்தில் எதிரும் புதிருமாகவே இருந்துவந்தோம். இந்நிலையில், பா.ஜ.க.வினரோடு இணைந்து எப்படி களத்தில் வேலை செய்வோம்? பா.ஜ.க.வின் சாதனையென எதைச்சொல்லி நாங்கள் மக்களிடம் வாக்கு கேட்பது?.
2009 நாடாளுமன்றத் தேர்தல் முதலே, தொண்டர்களின் விருப்பத்துக்கு எதிராகவே எங்கள் தலைமை கூட்டணி முடிவுகளை எடுத்துவருகிறது. இதனாலேயே ஒவ்வொரு தேர்தலிலும் படுதோல்வியைச் சந்தித்துவருகிறோம். 2021 சட்டமன்றத் தேர்தலில் ஓரளவு சரியான முடிவெடுத்ததால் இப்போது நான்கு எம்.எல்.ஏ.க்கள் எங்கள் கட்சிக்கு இருக்கிறார்கள். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்தால் கண்டிப்பாக இரண்டு எம்.பி.யாவது கிடைத்திருக்கும், 2026 சட்டமன்றத் தேர்தலில் அது கூடுதல் பலத்தைத் தந்திருக்கும். அது நடக்காமல் செய்துவிட்டார்கள்.
மகனுக்காக மட்டுமே இப்போது ராமதாஸ் கட்சி நடத்துகிறார். தன் சாதி மக்களின் வளர்ச்சியை மறந்துவிட்டார் என்கிற குற்றச்சாட்டை உண்மையாக்கும் வகையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொண்டர்கள் முன்பே உணர்ந்ததால் அய்யாவின் வேண்டுகோளைத் தொண்டர்கள் புறக்கணித்தார்கள். அதாவது, திருவண்ணாமலை மாவட்டம், நாயுடுமங்கலத்தில் சாலை விரிவாக்கத்துக்காக சாலையோரமிருந்த வன்னியர் கலசம் 2022-ல் அகற்றப்பட்டது. அதை மீண்டும் வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை. தடையை மீறி கடந்த மார்ச் 14ஆம் தேதி கலசம் வைக்கப்படும் என அறிவித்தார் அய்யா. இதற்கு பத்தாயிரம் பட்டாளி சொந்தங்கள் திரளுவார்கள் என எதிர்பார்த்தோம். இதற்காக திருவண்ணாமலை, வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொண்டர்களை அழைத்தபோது வரவில்லை. மொத்தமாக இரண்டாயிரம் பேரே வந்திருந்தது எங்களுக்கு அதிர்ச்சி. இது தெரிந்தும் தலைமை பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது. இதனால், எப்போதும் எங்களுக்கு விழும் ஓட்டுக்கள்கூட இந்த முறை விழாது'' என்றார்கள் விரக்தியான குரலில்.
தொண்டர்களின் கொந்தளிப்பை மீறி கரையேறுமா பா.ம.க.?