நூறு நாட்களுக்கு மேலாக வேலையின்றி, வருமானமின்றி வீடுகளுக்குள் முடங்கிக்கிடப்பவர்களுக்கு பொழுதுபோக்கோடு சேர்த்து வருமானமும் கிடைப்பதாக ஆசை காட்டினால் போதாதா? "ஆன்லைன் ரம்மி' என்ற பெயரில், அப்படியொரு மோசடிதான் அனுதினமும் நடக்கிறது.

r

உச்ச நட்சத்திரங்கள் தொட்டு, உள்ளூர் முகங்கள் வரை "ஆன்லைனில் ரம்மி விளையாடி பணம் வெல்லுங்கள்' என்று உசுப்பேற்றுகிறார்கள். சோஷியல் மீடியாக்கள், டி.வி. என எந்தப்பக்கம் திரும்பினாலும், இவர்களின் முகம்தான். ""வெறும் 200 ரூபாய்தான் போட்டேன். இப்போ 52 ஆயிரம் ஜெயிச்சிருக்கேன். நீங்களும் கண்டிப்பா ரம்மி விளையாடி லட்சாதிபதி ஆகுங்க'' என்று ஒருவர் சொல்கிறார். ""ஆன்லைனில் ரம்மி விளையாட ஆரம்பிச்சா, அறிமுக சலுகையாக 2 ஆயிரம் ரூபாய் நாங்களே கொடுக்கிறோம். அதைவைத்து விளையாடத் தொடங்குங்கள்'' என்று, சம்மந்தப்பட்ட நிறுவனமே அறிவிக்கிறது.

ஊரடங்கு நேரத்தில் நாலு பேர் கூடி, சீட்டுக்கட்டில் ரம்மி ஆடினால் போலீசார் விரட்டி அடிக்கிறார்கள். ஆனால், ஆன்லைன் ரம்மிக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதிர்ஷ்டத்தை மையமாக வைத்து விளையாடினால் மட்டுமே அதை சூதாட்டமாகக் கொள்ளமுடியும். பணம்கட்டி விளையாடினாலும் திறமை சார்ந்த விளையாட்டை சூதாட்டமாக சொல்ல முடியாது’என்று 2015ல் உச்சநீதிமன்றம் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்கு அனுமதி அளித்து தீர்ப்பளித் தது. இது தொடர்பான மற்ற வழக்குகளிலும் ஆன்லைன் ரம்மிக்கு உச்சநீதிமன்றம் க்ரீன் சிக்னல் தந்துவிட்டது. இதனை சட்டப்பூர்வ அங்கீகாரமாக விளம்பரம் செய்து, பல்வேறு மோசடிகள் அரங்கேறுவதாகக் குற்றம்சாட்டுகிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களில் சிலரிடம் நாம் பேசிய போது, ரம்மி (ஆப்) செயலியில், ஒரு டேபி ளுக்கு இரண்டு அல்லது ஆறுபேர் கலந்து கொள்ள முடியும். விருப்பமான தொகையைக் கட்டி விளையாடத் தொடங்கலாம். ஆரம்பத்தில் சில நூறுகள் கிடைப்பதாக இருந்தாலும், போகப்போக எதுவுமே கையில் சேராது. அறிமுகம் இல்லாதவர்கள் பயிற்சி மேற் கொள்ளவும் இலவச வாய்ப்பு தருகிறார்கள்.

Advertisment

பணம் கட்டி விளையாடும்போது ஒரேயொரு கார்டு சேர்ந்தால் முடிந்துவிடும்- அந்த கார்டு கடைசிவரை வரவே வராது. அது வரை கத்திமேல் நடப்பதாகவே தோன்றும். தோற்றுப்போனால் விட்டதைப் பிடிக்க மீண்டும் பணம் கட்டுவோம். ஆரம்பத்தில் கிடைத்த காசுகூட பிறகு கிடைக்காது. விளையாடாமலும் இருக்க முடியாது. ஒரு கட்டத்தில் வீட்டுப் பொருட்களை விற்குமளவுக்கு "அடிக்ட்' ஆனதை உணர்ந்தே அந்த செயலியையே அன் இன்ஸ்டால் செய்துவிட்டோம் என்று பதட்டம் விலகாமல் சொல்கிறார்கள்.

rr

சிலர் தப்பித்துக் கொண்டாலும், பலர் இன்னமும் பணத்தைத் தொலைத்துவிட்டு மன உளைச்சலில் தவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மதுரை தம்பதி தற்கொலை செய்து கொண்டதும், சாத்தான்குளத்திற்கு அருகில் தந்தை, மகள்கள் தற்கொலைக்குத் துணிந்ததும் இதற்கு உதாரணமான சமீபத்திய பரிதாபங்கள்.

Advertisment

குடும்பங்கள் மட்டுமின்றி, காவல்துறையினரையும் இந்த ஆன்லைன் ரம்மி கொடுமை விட்டு வைக்கவில்லை. இந்த நிலையில்தான், தமிழ்நாடு சிறப்புக் காவல் (ராஜபாளையம்) 11ஆம் அணியின் தளவாய், தனது அணியின் அனைத்து ஆய்வாளர்களுக்கும் ஆன்லைன் ரம்மி தொடர்பாக எச்சரிக்கை சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார். "அதிகாரிகள் எவரேனும் பணிநேரத்தில் ஆன்லைனில் ரம்மி ஆடுவதாகத் தெரியவந்தால், அவர்கள் குறித்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இதைக் கண்காணிக்கும் அதிகாரிகளும் ரம்மி விளையாடக் கூடாது. இதுகுறித்து, அதிகாரிகள் அனைவருக்கும் ஆஜர் அணிவகுப்பில் அறிவுறுத்த வேண்டும். இதில் தவறும்பட்சத்தில் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்'’என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, கோவில்பட்டி, ராஜபாளையம் போன்ற மாவட்டங்களின் கிராமப்புறங்களில், வாட்ஸ்ஆப் குழுக்களின் மூலமாக, குலுக்கல் சூதாட்டக் கலாச்சாரம், ஊரடங்கை வாய்ப்பாக்கி பரவலாகி வருகிறது. பாரம்பரிய விளையாட்டு, வின்னர் டோக்கன், டோக்கன் குரூப் பசலி63, லக்கி கோழி ஆடு குலுக்கல், பாரம்பரிய சேவல், லக்கி கால்நடை போன்ற பெயர்களில் செயல்படும் பல வாட்ஸ்ஆப் குழுக்கள், இந்த சூதாட்டத்தைப் பிரதானமாக செய்து வருகின்றன.

rr

இதுபற்றி நம்முடைய சிவகங்கை நண்பர் ஒருவர், அறிமுகம் செய்து வைத்து நம்மை அந்தக் குழுவில் சேர்த்துவிட்டார். இணைந்ததுமே ஒரு மெசேஜ் வந்தது. அதில், ஒரு ஆடு படத்தைப் போட்டு, "அண்ணே! ஆடு நல்ல ஆடு, செவல ஆடு, இளம் ஆடு, கிடா குட்டிண்ணே, சூப்பரா இருக்கும். ஒரு டோக்கன் விலை ரூ.225. கூகுள் பேயில் பணத்தைக் கட்டி நம்பரைத் தேர்வு பண்ணிக்கோங்கண்ணே. மொத்தம் 25 டோக்கன்' என்று ஏலம்விட… அடுத்த சில நிமிடங்களிலேயே பணம் கட்டினார்கள். பணம் கட்டியவர்களுக்கான டோக்கனை போடுகிறார்கள்.

இன்னும் பத்து இடம்தான் இருக்கு. சீக்கிரம் குலுக்கிடலாம், என்று நேரலையில் வர்ணணை செய்துகொண்டே இருக்கே, அரை மணிநேரத்தில் 25 டோக்கன்களும் விற்றுத் தீர்ந்தன. முடிந்ததும் டோக்கன்களை ஒரு டப்பாவில் வைத்து குலுக்கி விக்னேஷ் என்பவருக்கு விழுந்த தாக அறிவித்தார்கள். அதோடு, சிவகங்கையிலிருந்து கரூருக்கு கிடாக் குட்டியை அனுப்பமுடி யாது. எனவே, குலுக்கல் பணத்தில் ரூ.2,625 கம்பெனி எடுத்துக்கொண்டு, மீதம் மூவாயிரம் ரூபாயை அனுப்புவதாக சொல்கிறார்கள். வெறும் ஒரு மணி நேரத்தில் சில ஆயிரங்களில் வேலை முடிகிறது. இதுபோல தினமும் ஐந்தாறு குலுக்கல்கள் நடக்கின்றன.

இந்த நூதன குலுக்கல் பற்றி தீவிரமாக விசாரணையில் இறங்கிய போதுதான், இதில் மிகப்பெரிய மோசடி நடப்பது நமக்குத் தெரியவந் தது. அதாவது, ""10 பேர் சேர்ந்த கும்பல்தான் இதை நடத்துகிறது. புதிதாக சேர்ந்தவராக இருந்தால், அவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக குலுக்கலை நடத்தி, அடுத்தடுத்த குலுக்கல்களில் ஏமாற்றுகிறார்கள். இதில் ஏமாந்தவர்களின் புலம்பலைக் கேட்டால் உங்களுக்கே புரியும்'' என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

ஆன்லைன் ரம்மி ஆட்டத்திலுமே, ஒரு டேபிளுக்கு ஆறு பேர் விளையாடும்போது, ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் ஒரே நேரத்தில் லாக்-இன் செய்து, ஆட்டத்தின் போக்கைத் தீர்மானிப்பதாகவும், ரம்மி விளையாட்டுக்கான புரோகிராமே ஆர்வத்தைத் தூண்டி பின் ஏமாற்றும் விதமாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

rrஇன்னொருபுறம், கோடிகளில் பணம் புரளும் கிரிக்கெட், குறிப்பாக ஐ.பி.எல். போன்ற பல்லாயிரம் கோடி மீடியா ரைட்ஸ் கொண்ட போட்டிகளில் ஆட்டத்தின் போக்கைத் தீர்மானிக்கும் எம்.பி.எல். போன்ற ஆன்லைன் சூதாட்டம் படுஜோராக நம் நாட்டில் நடக்கிறது. ஸ்பாட் பிக்ஸிங் மீதான கடுமையான விதிமுறைகளும், இதுபோன்ற ஆன்லைன் கேம்ப்ளிங் மீதான இலகுநிலையும் குழப் பத்தை ஏற்படுத்துவதாக சொல்கிறார்கள், இதில் மாட்டிக்கொண்டு பணத்தை இழந்தவர்கள்.

ரம்மி விளையாடுவதால் மனநலன் சார்ந்து ஏற்படும் சிக்கல்கள் குறித்து ஹோமியோபதி மருத்துவர் மணிகண்டனிடம் பேசினோம். ""சூதாட்டமும் ஒருவித போதைதான். இன்னும் கொஞ்சம் போதை ஏற்றிக்கலாம் என்று நினைப்பதைப் போல, விட்டதைப் பிடித்துவிடலாம் என்ற எண்ணம் வந்துகொண்டே இருக்கும். பலகட்ட ஆய்வுகளுக்குப் பிறகே, மனநலக் கோளாறு காரணமாகவே ஒருவர் மிக அதிகமாக சூதாட்டத்தில் ஈடுபடுகிறார் என்று சர்வதேச மனநலக் கழகம் 1986-ல் அறிவித்தது. இதில் ஆன்லைன் சூதாட்டத்தையும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதற்கான ஆய்வுகள் நடக்கின்றன.

சூதாட்டத்திற்கு அடிக்ட் ஆனவர்கள், சூதாட்டம் ஆடுவதை நிறுத்தச் சொன்னால் எரிச்சலடைவார்கள். சூதாட்டம் பற்றியே பேசுவார்கள்; யோசிப்பார்கள். சோகமானாலோ, மனச்சோர்வில் இருந்தாலோகூட சூதாட்டத்தில் ஈடுபட்டால் ஆறுதலாக உணர்வார்கள். எவ்வளவுதான் தோற்றாலும், விட்டதைப் பிடிக்கிறேன் பார் என்று மீண்டும் மீண்டும் விளையாடுவார்கள். சூதாட்டம் தொடர்பாக நிறைய பொய் சொல்வார்கள். எந்த சொந்த பந்தமும் தேவையில்லை, திருடியாவது பணத்தைக் கட்டி விளையாட வேண்டும் என்ற நிலைக்கு வருவார்கள். இதெல்லாம் ஒரு ஆண்டுக்குள் ஒருவருக்கு ஏற்படும் அறிகுறிகள். இதில் நான்கு ஏற்பட்டாலே போதும், அவர் சூதாட்டத்திற்கு அடிமையாகிவிட்டார் என்று உறுதிப்படுத்தலாம். அவருக்கு உடனடி மனநல ஆலோசனை தராமல் போனால், மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்'' என்று எச்சரிக்கிறார்.

தூண்டில் வாங்கும் காசில் திமிங்கலம் பிடிக்கலாம் என்று ஆசைகாட்டி சூதாட்டக் கடலில் இழுக்கிறார்கள். இதில் கரை சேர்ந்து மீண்டவர்கள் மிகச்சொற்பம்.

-ஜெ.டி.ஆர்., அண்ணல், மதி

__________________

சட்டப்பூர்வ தீர்வு கிடைக்குமா?

rrபல குடும்பங்களில் சிக்கலை ஏற்படுத்தி இருக்கும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு சட்டப்பூர்வமாக தடை வாங்க முடியாதா என்ற கேள்வியுடன், வழக்கறிஞர் ஸ்டாலினிடம் கேட்டோம். ""இந்திய பொது சூதாட்டத் தடைச் சட்டம் 1867-ன்படி இந்தியாவில் சூதாட்டம் தடை செய்யப் பட்டுள்ளது. நாட்டின் பல மாநிலங்களிலும் எல்லா வகையான சூதாட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. சிக்கிமும், கோவாவும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்காக சூதாட்டத்திற்கு அனுமதி வாங்கியுள்ளன. இப்படியிருக்க, ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடிவாளம் போட முடியவில்லை; அரசு திணறுகிறது. இதுகுறித்து, மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கருத்து கேட்டிருக்கிறது; இன்னும் பதில் சொல்லவில்லை.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருப்பது போன்ற இணைய சூதாட்டத் தடைச்சட்டம் இங்கு கிடையாது. ஆன்லைன் சூதாட்டத்தில் கிரெடிட் கார்ட், ஆன்லைன் பேங்கிங் உள்ளிட்டவை மூலமாக பணம் செலுத்தலாம். இந்தப் பரிவர்த்தனைகள் வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. எப்போது வேண்டுமானாலும் சட்டப்படி இந்தப் பணத்தை முடக்கமுடியும். மத்திய, மாநில அரசுகள் இதில் துரிதமாக செயல்பட்டால் மட்டுமே, நிரந்தரத் தீர்வு கிடைக்கும்'' என்றார்.

- அண்ணல்

பெண்களும் சூதாட்டத்தில்!

ரம்மி டேபிளில் கலந்துகொள்ள சில பைசாக்களில் இருந்து, ஆயிரங்கள் வரை பணம் கட்ட முடியும். டோர்ன மெண்டுகளில் பல ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள். சில சமயங்களில் சலுகை என்கிற பெயரில், பணம் கட்டாமலே டோர்னமெண்டில் கலந்துகொள்ள முடியும். அதுகூட குறிவைத்து நடக்கும் வேலைதான். ஒவ்வொரு முறை போட்டி முடிந்ததும் ஒரு தொகையைக் கமிஷனாக ரம்மி நிறுவனம் எடுத்துக் கொள்ளும். 2014ல் சில லட்சங்களில் இருந்த இதன் ஆண்டு வருமானம், இப்போது ஆயிரம் கோடிகளைக் கடந்திருக்கிறது. 30க்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்கள், இந்தியாவில் வர்த்தகமாக இதைச் செய்கின்றன. ஆண்டுதோறும் 22 சதவீதம் பணப்புழக்கம் இதில் அதிகரிக்கிறது. ஐந்தரை கோடி இந்தியர்களும், அதில் 30 சதவீதம் பெண்களும் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதாக இதை முறைப்படுத்தும் "தி ரம்மி ஃபெடரேஷன்' அமைப்பு தெரிவித்திருக்கிறது.

- மதி