ன்லைன் வகுப்புகள் ஏற்படுத்தும் ஏற்றத்தாழ்வுகளையும் சிக்கல்களையும் நக்கீரன் வாயிலாக கல்வியாளர்கள் எடுத்துரைத்த நிலையிலும், தமிழக அரசு அதற்கு அனுமதியளித்துவிட்டது.

Advertisment

onlineclass

நாகப்பட்டினம் வடகுடியில் செயல்படும் அமிர்தா வித்யாலயா சி.பி.எஸ்.சி. பள்ளி நிர்வாகம் ஏப்ரல் முதல்வாரத்திலிருந்தே ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை ஜரூராகவே தொடங்கி நடத்திவருகிறது. பழைய கட்டண பாக்கி மற்றும் நடப்பாண்டு கட்டணம் கட்டாதவர்களை ஆன்லைன் வகுப்பிலிருந்து கடந்த சில நாட்களாகவே நீக்கிவிட்டதுடன், கட்டணம் கட்டாவிட்டால் தேர்வெழுத முடியாதெனவும் அமிர்தா வித்யாலயா கடுமையாக எச்சரித்திருக்கிறது. இந்த எச்சரிக்கை 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஹரிணியை அதிர வைத்தது. குடும்பத்தின் வறுமைச் சூழலால் கட்டணம் கட்டமுடியாத நிலையில், தன்னால் தேர்வெழுத முடியாதோ என தனது தோழிகளிடம் புலம்பியபடி இருந்தவர் மனமுடைந்து, யாருமில்லாத நேரத்தில் தனது தாயின் புடவையைக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதிர்ஷ்டவசமாக அவரது உறவினர்கள் அவரைக் காப்பாற்றி நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

cc

Advertisment

ஹரிணியின் தந்தை விஜயராஜ், ""நாகூரை அடுத்துள்ள நரிமணம் பகுதியில் செயல்படும் ஐ.ஓ.சி.எல்.லில் தொழிலாளியாக வேலை பார்த்துவருகிறேன். ஊரடங்கு காலமான கடந்த மூன்றுமாத காலமாக ஊதியம் வழங்காமல் நிறுவனம் இழுத்தடிப்பதால், குடும்பம் நடத்தவே சிரமப்படுகிறோம். இதற்கிடையில் ஆன்லைன் வகுப்பிற்கு அதிக விலைகொண்ட செல்போன் வாங்கவேண்டிய நிலை. சம்பளமும் இல்லை. ஃபீசும் கட்ட முடியலை. இனிமேல் படிக்கமுடியாதோ, பரீட்சை எழுத முடியாதோங்கிற கவலையில் இப்படி செய்துட்டா'' என்று கலங்குகிறார்.

பள்ளி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ""நாங்க யாரையும் கட்டாயப்படுத்தி கட்டணம் கேட்கலை. ஆன் லைன் வகுப்பு நடத்தலாம்னு அரசு கூறியபிறகுதான் நடக்குது. ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கணும். அதனால முடிந்தவர்கள் தேர்வுக் காலத்திற்குள் கட்டணத்தைக் கொடுங்கள் என்றுதான் வாட்ஸ் அப் பண்ணியிருந்தோம்'' என நழுவுகிறார்கள்.

நாகை சமூக ஆர்வலர்களோ,

""பள்ளி நிர்வாகத்துக்கு. பாஜக ஒத்துழைப்பு இருப்பதால் ஆடாத ஆட்டம் ஆடுகிறார்கள்'' என்று வேதனையோடு கூறு கிறார்கள்.

Advertisment

ஆன்லைன் வகுப்புகளை தடை செய்யவேண்டும் என தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வரும் வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராமசேயோன், ""ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் கல்விக் கட்டணத்தை கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக ஆன்லைன் வகுப்புகளை தடைசெய்து மாணவர்களைக் காப்பாற்ற வேண்டும்'' என்கிறார்.

-க.செல்வகுமார்