தமிழ்நாட்டில் சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்பட பல மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் மீளமுடியாமல் தவித்து வருகின்றனர்.
அதி கனமழையால் வாழ்விடத்தையும் காணவில்லை, வாழ்வளித்து வந்த விவசாயப் பயிர்களையும் காணவில்லை. வரலாறு காணாத மழை வெள்ளத்திற்கு விளைபயிர்களும் காணாமல் போய்விட்டது. இனி எப்படி மீண்டெழுவோம் என்று கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள் தென்மாவட்ட விவசாயிகள்.
அங்கே மறுபடியும் கனமழை என்று சொல்ல, கடும் பீதியில் உள்ளனர் விவசாயிகளும் பொதுமக்களும்.
தமிழ்நாட்டில் மற்றொரு பகுதியான டெல்டா மாவட்டங்களில் தண்ணீரில்லாமல் நட்ட பயிர்கள் கருகிக்கொண்டிருக்கின்றன. கர்நாடகத் தின் வஞ்சகத்தால் காலத்தே வரவேண்டிய தண்ணீர் வராததால் காவிரியில் தண்ணீர் இல்லாமல் கல்லணைத் தண்ணீரை நம்பி நட்ட நெற்பயிர்களும், விதை விதைப்புகளும் முழுமையாகக் கருகத் தொடங்கிவிட்டன.
தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக் கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட தொகுதிகளி லும், புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக் கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட தொகுதிகளிலும் உள்ள கல்லணைத் தண்ணீர் வராததால் பயிர்கள் கருகிவிட்டன. தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட விவசாயிகள் கருகிய பயிர்களு டன் சென்று ஆட்சியரிடம், "இந்தப் பயிர்களை எங்க வீட்டு குழந்தைகளைப் போல வளர்த்தோம். இப்ப தண்ணீர் இல்லாமல் இப்படி செத்துப் போச்சு, எப்படி காப்பாற்றப் போறோம்?''’என்று குமுறிவிட்டனர்.
மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த பிறகு நம்மிடம் பேசிய தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலசங்க மாவட்டச் செயலாளர் வீ.கே.சின்னத்துரை.. "காவிரியில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் கொடுக் காததால் காவிரியில் தண்ணீர் வரும் என்ற நம்பிக்கையில் வட்டிக்கு கடன் வாங்கி, நகைகளை அடகுவைத்து விவசாயி கள் செய்த அத்தனை விவசாயமும் கருகிக்கொண்டிருக்கிறது. காவிரி டெல்டா பகுதியில் சுமார் 1 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் கருகிவிட்டது. இதற்காக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று தெரியவில்லை. இன்னும் பல இடங்களில் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளது. சென்னையிலும் தென்மாவட்டங்களிலும் பெய்த பருவ மழையும் டெல்டா மாவட்டங்களில் இல்லை. அதனால் ஏரி, குளங்களில்கூட தண்ணீர் இல்லாத நிலை உருவாகிவிட்டது. திருவோணம் வட்டாரத்தில் முழுமையாகக் கருகிவிட்டது.
அதனால் அரசு அதிகாரிகள் உரிய காலத்தில் கள ஆய்வு செய்து பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அரசுக்குத் தெரியப்படுத்தி உரிய இழப்பீடுகளும், காலத்தோடு காப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் காப்பீடு கிடைப் பதில் சிக்கல் ஏற்பட்டதைப் போல இருக்கக்கூடாது, முழுமையாக வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி இருக்கிறோம். மேலும் எஞ்சியுள்ள பயிர்களைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் கர்நாடகத்திடம் இருந்து நமக்கு கிடைக்கவேண்டிய தண்ணீரை பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார்.
இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணை நேரடிப் பாசனம் இன்றி தண்ணீரை ஏரி, குளங்களில் சேமித்து விவசாயம் செய்வது வழக்கம். ஆனால் கல்லணையில் தண்ணீர் வந்துவிடும் என்று நம்பி விதைத்த நெல் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகத் தொடங்கிவிட்டது. எந்த ஏரி, குளங்களிலும் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. அதேபோல ஆவுடையார்கோயில், மணமேல்குடி ஒன்றியங்களில் மழைத் தண்ணீரை கண்மாய்களில் தேக்கி பாசனம் செய்யும் விவசாயிகள் ஒருசில நாட்கள் பெய்த மழையை நம்பி நேரடி நெல் விதைப்பு செய்துவிட்டுக் களை பறிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் தவித்தனர். தொடர்ந்து பருவமழை பெய்யாததால் கண்மாய் கள் வறண்டு கிடக்கிறது, வயல்களில் கருகும் பயிர்களை மாடுகளை விட்டு மேய்த்துக்கொண்டி ருக்கிறார்கள்.
சீனமங்கலம் விவசாயி சேகர் குளத்தில் கிடந்த தண்ணீரை இறைவைப் பெட்டி வைத்து இறைத்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அவர் நம்மிடம்.. “"வழக்கமாகப் பெய்யும் பருவ மழை பெய்யாததால் பயிர்கள் கருகத் தொடங்கிவிட்டது. குளத்தில் கிடக்கும் கொஞ்சம் தண்ணீரை கருகும் பயிர்களுக்கு பாய்ச்ச மோட்டார் வைத்தால் அதிக செலவாகும் என்பதால் இப்படி இறைவைப் பெட்டி வைத்து தண்ணீரை இறைக்கிறேன். எங்கள் பகுதியில் உள்ள குளம், ஏரி, கண்மாய்களை கொஞ்சம் ஆழப்படுத்திக் கொடுத்தால் மழைத் தண்ணீரை சேமிக்க வசதியாக இருக்கும்''’என்றார்.
தைத்திருநாள் உழவர்களின் அறுவடைத் திருநாளாக இருந்தது. இந்த 2024-ஆம் ஆண்டு தைத்திருநாள் டெல்டா விவசாயிகளுக்கு கவலைப் பொங்கலாக மாறிவிட்டது. அரசாங்கம்தான் இந்த விவசாயிகளைக் காப்பாற்றவேண்டும்.