சேலம் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர் ஒருவர், காசோலைகளில் திருத்தம் செய்து 92 லட்சம் ரூபாய் சுருட்டிய விவகாரத் தில், பணியின்போது அலட்சியமாக இருந்ததாக உதவி ஆணையர் உள்ளிட்ட 58 ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் விளக்கம் கேட்டு ஷோகாஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் கருங்கல்பட்டி கலைஞர் நகரைச் சேர்ந்த குணசேகரன் மகன் வெங்கடேஷ்குமார். சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்தில், கடந்த 2007-ஆம் ஆண்டு தூய்மைப் பணியாளராக வேலைக்குச் சேர்ந்தார். பிளஸ் 2 வரை படித்திருந்ததாலும், ஆள்பற்றாக் குறையால் அவரை அலுவலகக் கணக்காளருக்கு உதவியாளராக நியமித்தனர்.

ss

Advertisment

இந்நிலையில், கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் கடந்த 2018 - 2019ஆம் ஆண்டுக்கான வரவு, செலவினங் களை உள்ளாட்சித் தணிக்கை அலு வலர்கள் ஆய்வு செய்தனர். அப் போது சில காசோலைகள் திருத்தி எழுதப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தணிக்கை அலுவலர்கள் கணக்காளர் வெங்கடேசனிடம் விளக்கம் கேட்க, திருத்தம் செய்யப்பட்ட காசோலை களுக்குரிய ரொக்கப் புத்தகத்தை ஆய்வுசெய்தார். அதிலும் அடித்தல் திருத்தல் இருந்தது தெரியவந்தது. மேலும், 5 மாதங்களுக்கு முன்பு வழங்கிய காசோலையை தாமதமாக கலெக்ச னில் போட்டு வெங்கடேஷ்குமார் 'என்கேஷ்' செய்திருப்பதையும் கண்டுபிடித்தார்.

ss

சந்தேகத்தின்பேரில் 2017, 2018, 2019-ஆம் ஆண்டுகளுக்கான சம்பள 'பில்' பட்டியல், ரொக்கப் புத்தகங்களை தணிக்கை செய்தபோது, 7 காசோலைகளை திருத்தி எழுதி வெங்க டேஷ்குமார் 86 லட்சம் ரூபாய் கையாடல் செய்திருக்கும் அதிர்ச்சித் தகவல்கள் வெளி யாகின. அதாவது, தூய்மைப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி நிலுவை, சரண் விடுப்புத் தொகை, ஓய்வூதிய நிலுவை தொடர்பாக வழங்கப்பட்ட காசோலைகள் மூலமாக கையாடல் செய்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.

வெங்கடேஷ்குமார், தனது தம்பி மோகன்குமார், அவருடைய மனைவி பிரபாவதி, தாயார் விஜயா ஆகியோர் மாநகராட்சி ஊழியர்களாக பணியாற்றுவதுபோல போலியாக பட்டியலை தயாரித்து, அவர்களின் வங்கிக் கணக்கிற்கு மாநகராட்சிக்குச் சொந்தமான பணத்தை மாற்றி கையாடல் செய்திருந்தார்.

கையாடல் பணத்தில் தனது தாயார் பெயரில் 40 லட்சம் ரூபாய்க்கு ஒரு வீடு வாங்கியிருப்பதும், 20 லட்சம் ரூபாயை வட்டிக்கு விட்டிருந்ததும் வெளிச்சமானது. மீதப்பணத்தை என்ன செய்தார் என்பது தெரியவில்லை.

இந்நிலையில், கொண்டலாம் பட்டி உதவி ஆணையர் ரமேஷ் பாபு அளித்த புகாரின்பேரில், சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார்... வெங்கடேஷ்குமார், அவருடைய தம்பி மோகன்குமார் இருவரையும் கடந்த 15-9-2019ஆம் தேதி கைதுசெய்தனர்.

ssஇது ஒருபுறமிருக்க, சந்தேகத்தின்பேரில் 2015-2016 முதல் 31-3-2020 வரை வெங்கடேஷ்குமார் ஒர்க்அவுட் செய்த ஊதிய பட்டியல், ரொக்கப் பதிவேடுகளை தணிக்கை ஆய்வாளர் யவனராணி தலைமையிலான ஐவர் குழு, மறு தணிக்கை செய்தது. இதில் மேலும் 6 லட்சம் ரூபாய்க்கு மோசடி செய்திருப்பதைக் கண்டுபிடித்தனர். ஆக வெங்கடேஷ்குமார் 92 லட்சம் ரூபாய்க்கு மாநகராட்சி பணத்தை கையாடல் செய்திருப்பது அம்பலமானது.

இதுதொடர்பாக சேலம் மாநகராட்சி அலுவலர்கள் கூறுகையில், ''வெங்கடேஷ்குமார், காசோலைகளில் 0, 6 ஆகிய எண்களை 8, 9 ஆகவும், 1 என்பதை 7 ஆகவும் திருத்தி எழுதி, மோசடி செய்திருந்தார். மோசடி செய்வதற்கு வசதியாக காசோலைகளில், ஆரம்பத்திலேயே நிறைய இடம் விட்டு நிரப்பிக்கொண்டுவந்து உயர் அலுவலர்களிடம் கையெழுத்துப் பெற்றுள் ளார். அவர் மோசடி செய்திருக்கும் விவகாரம் மட்டுமின்றி, அவருடைய பணி நியமனமே விதிகளை மீறியதுதான். அதை மாநகராட்சி நிர்வாகம் இதுவரை கையிலெடுக்காதது ஏனென்று தெரியவில்லை'' என்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''வெங்கடேஷ்குமார் கையாடல் செய்த பணத்தை வசூலிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை அவர் வெறும் 3.50 லட்சம் ரூபாய் மட்டுமே மாநகராட்சிக்கு திருப்பிச் செலுத்தியிருக்கிறார். அவருடைய தாயார் பெயரில் கிரயம் செய்துள்ள வீட்டின் அசல் பத்திரங்களை பறிமுதல் செய்திருக்கிறோம்.

மோசடி நடந்த காலகட்டத்தில் கொண்ட லாம்பட்டி மண்டலத்தில் பணியாற்றி வந்த உதவி ஆணை யர், உதவி வருவாய் அலுவலர், கண்காணிப்பாளர், கணக்கர் உள்ளிட்ட 58 ஊழியர்களுக்கும் ஒரே நேரத்தில் ஷோகாஸ் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள் ளது,'' என்றார்.

இது இப்படியிருக்க, ''தனி ஒரு நபர் செய்த மோசடிக்கு ஒட்டுமொத்த ஊழியர்களையும் பொறுப்பேற்கச் சொல்வது சரியாகாது. ஒவ்வொரு மாதமும், உடன்நிகழ் தணிக்கை (கன்கரன்ட் ஆடிட்) செய்யவேண்டியது, உள் ளாட்சித் தணிக்கைத்துறையின் பணி. அதனால் தணிக்கை அலுவலர்களையும் பொறுப்பேற்கச் செய்யவேண்டும். வெங்கடேஷ்குமார் கணக்குப் பிரிவில் பணியாற்றத் தொடங்கிய காலத்திலிருந்தே ஆவணங்களை சிறப்புத் தணிக்கை செய்யவேண்டும்'' என்ற புலம்பல் களும் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

இந்நிலையில், சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரோ, வெங்கடேஷ்குமார், மோகன் குமார் ஆகியோர் மீது இன்னும் குற்றப்பத்திரி கையே தாக்கல் செய்யாமல் ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்து வருவதாகவும் மாநகராட்சி தரப்பில் அதிருப்தி கிளம்பியுள்ளது.