முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகப் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்பொழுது முடியும் தருவாயில் உள்ளது. இதையொட்டி, வருகிற ஜனவரி 27-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது

இந்த நிலையில், கோயில் அர்ச்சகர் சங்க தலைவர் கும்பேஸ்வர குருக்கள் திடீரென ஒரு ஆடியோவை அர்ச்சக சங்க உறுப்பினர்களின் வாட்ஸப்பில் பதிவு செய்திருக்கிறார். அதில் "ஆபீஸோ, கும்பாபிஷேகமோ அது, இது என்று கேட்டுவந்தால் கையெழுத்து போடாதீங்க. இப்ப பிரச்சனை பண்ணி அனுப்பி இருக்கிறோம். அப்படி போட்டீங்க என்றால் சிக்கிடுவீங்க. அப்படி சிக்குனா சங்கம் வராது. நீங்கதான் பாத்துக்கணும். அவங்க சாமியை சரிசெய்து கொடுக்காமல் இருக்கிறார்கள். அதைச் சொன்னா ஒத்துக்க மாட்டேங்கிறாங்க. அதனால நீங்களே தேவையில்லை என்றும், கும்பாபிஷேகத்தைப் பற்றி மட்டும் பேசுங்கள், சாமியைப் பற்றி பேசக்கூடாது என்கிறார்கள். அப்படி பேசினதுனாலதான் பிரச்சனை பண்ணி வெளியே வந்திருக்கிறோம். தயவுசெய்து கையெழுத்து போடாதீர்கள். அப்புறம் உங்க விருப்பம். சங்கம் வராது'' என்று கூறியுள்ளார்.

dd

Advertisment

இதன்மூலம், கோயில் நிர்வாக அதிகாரிகளுக்கும், அர்ச்சகர்களுக்கும் இடையே கும்பாபிஷேகத்தில் கருத்து வேறுபாடு வெடித்திருப்பது தெரிகிறது. இந்த ஆடியோ பதிவு, அதிகாரிகள் மற்றும் முருக பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதில் மலைக்கோயில் கோபுர சிலைகள், கலசம், சாமி எடுப்புச் சிலைகள் உள்பட அனைத்து கும்பாபிஷேக பராமரிப்புப் பணிகளும் செய்தும்கூட, நவபாஷாணத்தாலான முருகன் சிலை உள்ள மூலஸ்தானத்தில் மட்டும் கும்பாபிஷேகப் பணிகள் நடைபெறவில்லை. அதைத் தொடர்ந்துதான் அதிகாரிகள், அறங்காவல் குழுவினர் அர்ச்சகர்களோடு கும்பாபிஷேக ஆலோசனை கூட்டம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்தபோது அதில் கலந்து கொண்ட கோயில் தலைமை அர்ச்சகரான கும்பேஸ்வர குருக்கள், சாமி சிலையை சரிப்படுத்திக் கொடுங்கள் என்று கூறியிருக்கிறார். அதற்கு மூலஸ்தானத்தை இப்பொழுது பார்க்க முடியாது, இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் கழித்து பார்த்துக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

Advertisment

dd

குருக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, அதையும் சரிசெய்து மூலவருக்கு மருந்து வைத்துவிடலாம் என்று கூறியிருக்கிறார்கள். அதற்கு குருக்களோ, ஏற்கனவே நடந்த கும்பாபிஷேகத்தின்போது மருந்து வைத்தார்கள். அது பல வருடங்களுக்கு நீடிக்கும் என்று கூறினார்கள். சில மாதங்களி லேயே அது கரைந்துவிட்டது. அதனால் என்ன மருந்து வைக்கப் போகிறார்கள். நவபாஷாணத்தினால் உருவான முருகன் சிலை என்பதால் அதற்கு ஏற்றவாறுதான் வைக்க வேண்டும். இல்லையென்றால் பழைய மாதிரியே ஆகிவிடும். அந்த விவரங்களைத் தெரியப்படுத்துங்கள் என்று கூறினோம். அதற்கு அதிகாரிகளோ, அதைப்பற்றி உங்களிடம் சொல்லத் தேவையில்லை. கும்பாபிஷேகத்திற்கான பணிகளை மட்டும் பாருங்கள் என்று கூறியிருக்கிறார்கள். அதனால் டென்ஷன் அடைந்த குருக்கள் இப்படி ஒரு ஆடியோவை பதிவுசெய் திருக்கிறார். அந்த நவபாஷாண சிலை மீது ஊற்றப்படும் தண்ணீருக்கும், சந்தனத்துக்கும் பல நோய்களை தீர்க்கக்கூடிய சக்தி இருக்கு. அப்படிப்பட்ட சிலையை சேதப்படுத்தும் நோக்கத்தில் மருந்து வைக்கக் கூடாது. வைத்தார்கள் என்றால் அந்த ஆட்சிக்கும், அதிகாரிகளுக்கு கேடு விளைவிக்கும்''’என்றார் ஞான தண்டாயுதபாணி பத்தர் பேரவையின் அமைப்பாளர் செந்தில்குமார்.

கோயில் நிர்வாக அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, "அர்ச்சகர்களின் ஆலோசனை பெற்றுதான் கும்பாபிஷேக தேதியை முடிவு பண்ணினோம். அதுபோல் ஆடியோ வெளியிட்ட குருக்களை வரச் சொல்லியிருக்கிறோம். மற்ற விவரம் தெரியாது''’என்று கூறினர்.

கும்பாபிஷேகம் நடக்கும் 27-ஆம் தேதி பூரம் நட் சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் என்பதால் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற பேச்சு ஒருபுறமும், அர்ச்சகர்- அதிகாரிகள் மோதல் மறுபுறமும் நடப்பதால் கும்பாபிஷேகம் சொன்ன தேதியில் நடக்குமா என்ற சந்தேகம் முருக பக்தர்கள் நடுவே எழுந்தது. இந்நிலையில் டிசம்பர் 24-ஆம் தேதி பழனி கோயி லுக்கு வருகை தந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.சேகர்பாபு, அர்ச்சகர்களுக்கும் அதிகாரிகளுக்குமான உரசலை அறிந்து, அவர்களை சந்திக்க வைத்ததால் இந்தப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

-வேல்

_____________

கட்சி உறுப்பினரில்லை!

2022, நவம்பர் 30-டிசம்பர் இதழில் "மக்கள் பணத்தை விழுங்கும் கமலாலயத் திமிங்கலங்கள்' கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள யூடியூபர் கார்த்திக் கோபிநாத், பா.ஜ.க. நிர்வாகியோ, பா.ஜ.க. அடிப்படை உறுப்பினரோ இல்லையென சேலம் மாவட்ட பா.ஜ.க.வைச் சேர்ந்த ஜி.கௌதம் பிரகாஷ் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

(ஆர்.)