கல்லூரி மாணவிகளை தவறான வழிக்குத் திருப்பிய நிர்மலாதேவி வழக்கை பிசுபிசுக்கச் செய்வதற்கான அத்தனை வேலைகளும் அதிகார பலத்தோடு அரங்கேறி வருகின்றன. ஒருபுறம் விசாரணை என்ற பெயரில், கவர்னரைக் காப்பாற்றும் காரியங்கள் தீவிரமாக நடப்பதை கடந்த இதழில் விரிவாக எழுதியிருந்தோம். இன்னொருபுறம் ‘உண்மைகள்’ திமிறிக்கொண்டு வெளிப்படுகின்றன.
நிர்மலா கோபம்! பீதியில் மாணவிகள்!
""நிர்மலாதேவி விவகாரம் ‘லீக்’ ஆனதற்கு, எங்கள் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது. அதனால், பெயர் கெட்டதோடு மட்டுமல்லாமல், கல்லூரி மூடப்பட்டது என்று வதந்தியும் கிளப்புகிறார்கள். "நான் செல்போனில் பேசியதை ரெகார்ட் செய்து, என்னைச் சிறையில் தள்ளிய அந்த 4 மாணவிகள், அவர்களின் பெயர் வெளிவந்துவிடக்கூடாது; அவர்களின் வாழ்க்கை முக்கியம் என்று கருதுகிறார்கள். நான் நினைத்தால்..?'’என்று அந்த மாணவிகளையும், கல்லூரியையும், நிர்மலாதேவி பழிவாங்கத் துடிப்பதாகச் சொல்கிறார்கள். மாணவிகள் பீதிக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்த விவகாரம் எங்கே கொண்டுபோய் விடுமோ தெரியவில்லை''’என்று வேதனைப்பட்டார் கல்லூரி நிர்வாகத்தினரின் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
ஆடியோவை கை மாற்றிய ப்ரவுசிங் சென்டர்!
‘"நிர்மலாதேவி கோபத்தால் எதுவும் ஆகிவிடாது'’ எனச் சொல்லும் சி.பி.சி.ஐ.டி. வட்டாரம், இதுவரை வெளிவராத, ஆடியோ ‘லீக்’ ஆனதன் பின்னணியை விவரித்தது.
""முதலில் மாணவிகள் தரப்பில், வாய்மொழியாகத்தான், நிர்மலாதேவி குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் சொன்னார்கள். ஆதாரம் இல்லை என்று அலட்சியம் செய்தது அந்தக் கல்லூரி. அதன்பிறகே, நிர்மலாதேவி தவறான நோக்கத்துடன் பேசியதை ரெகார்ட் செய்து, "இந்த ஆடியோவைக் கேட்டுவிட்டு நடவடிக்கை எடுங்கள்'’என்று கூறியிருக்கிறார்கள். அப்போது கல்லூரி நிர்வாகம், "செல்போனில் ரெகார்ட் செய்திருப்பதை, சி.டி.யில் காப்பி செய்து, எழுத்துமூலமாக புகார் அளியுங்கள்' என்று மாணவிகளைக் கடுப்படித்திருக்கிறது. பிறகுதான், செல்போனில் உள்ள ஆடியோவை சி.டி.யில் காப்பி செய்வதற்கு, அருப்புக்கோட்டையில் உள்ள ப்ரவுசிங் சென்டருக்குப் போனார்கள். அங்கிருந்துதான், யார் யார் கைக்கோ ஆடியோ சென்று, மிரட்டல், பேரமெல்லாம் நடந்து, விவகாரம் அமுக்கப்பட்டிருக்கிறது. ‘ஆடியோவை யார் யாருக்கு என்ன விலைக்கு விற்றாய்?’ என்று அந்த ப்ரவுசிங் சென்டரும் கடுமையான விசாரணைக்கு ஆளானது.
கல்லூரி நிர்வாகமும், வெளி நபர்களும், மாணவிகள் விவகாரத்தில், சுயநலத்தோடு விளையாடியதைக் கண்டு கொதித்துப் போனார்கள் மாணவிகளின் பெற்றோர். ஏனென்றால், அந்த ஆடியோவில் இரண்டு மாணவிகளின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார் நிர்மலாதேவி. இந்த நிலையில்தான், மாணவிகளின் பெயர், கல்லூரியின் பெயரை வெளிவராமல், நிர்மலாதேவி விவகாரத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்று ஒரு முடிவு எடுத்திருக்கிறது மாணவிகள் தரப்பு. கல்லூரியில் நிர்மலாதேவியின் அதிகார ஆட்டத்தை சகித்துக்கொள்ள முடியாத பேராசிரியர்கள் சிலரும் மாணவிகளுக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்கள். அவர்கள்தான், ‘"கவர்னர் குறித்தெல்லாம் பேசியிருக்கிறார் நிர்மலா. பெரிய விவகாரமாக இருக்கிறது. நக்கீரன்தான் இதற்கு சரியாக இருக்கும். எத்தனை அதிகாரத்தில் இருந்தாலும் விடமாட்டார்கள்'’என்று மாணவிகளின் பெற்றோருக்கு வழிகாட்டியிருக்கிறார்கள். பிறகுதான், நிர்மலாதேவி விவகாரம் முதலில் நக்கீரனில் வெளிவந்து உலுக்கியது.''
கவர்னர் ப்ரோக்ராம் கேன்சல்!
"நிர்மலாவுடன் நீ நெருக்கமாக இருந்ததை மட்டும் சொன்னால் போதும்'’என்று விசாரணை வட்டத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சுருக்கினாலும், நிறைய’ பேசியிருக்கிறார் உதவிப் பேராசிரியர் முருகன்.
""கருப்பசாமியுடனான நெருக்கத்துக்கு ஜாதிப் பாசமும் ஒரு காரணம். பதிவாளர் சின்னையாவும் அந்த வகையில்தான் எங்களை அரவணைத்து வழிநடத்தினார். நிர்மலாவே என்னிடம் சொன்னார் - ‘"நான் 2008-ல் தேவாங்கர் கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால் 2004-ல் இருந்தே யுனிவர்சிட்டிக்கு மாணவிகளை அனுப்புவது நடந்திருக்கிறது. பதிவாளர், துணைப்பதிவாளர், கண்ட்ரோலர் போன்ற பல்கலைக்கழகத்தின் முக்கிய அதிகாரிகள் எப்போதும் கேளிக்கை விரும்பிகள்தான். யு.ஜி.சி. அதிகாரிகளை கவனிப்பதெல்லாம் காலம் காலமாக நடந்து வருகிறது. பதவி பேரங்களுக்காக ராஜ்பவன் வரையிலும் மாணவிகளை அனுப்புவது புதிதல்ல. இதெல்லாம் இங்கே சகஜம்தான்'’என்றார்.
மார்ச் 13-ஆம் தேதி, பல்கலைக்கழக கெஸ்ட் ஹவுஸில் கவர்னருக்காக, எல்லா ஏற்பாடும் செய்திருந்தோம். மாணவிகளோடு நிர்மலாவும் தயாராக இருந்தார். இடுக்கி என்றால் இன்னும் வசதியாக இருக்கும் என்றும் பிளான் பண்ணியிருந்தோம். குரங்கணி தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக, அன்று மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்தார் கவர்னர். அவரிடம் ‘"ஆடியோ விவகாரம் லீக் ஆகி உங்கள் பெயர் அடிபடுகிறது'’என்று ராஜ்பவன் வட்டாரம் பணிவுடன் கூற, கவர்னரின் அடுத்த ப்ரோக்ராமும் கேன்சல் ஆனது. ஆனாலும், அழைத்துவரப்பட்ட மாணவிகளை, ‘ஹையர் அஃபிசியல்ஸுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள்''’என்று புட்டு வைத்திருக்கிறார்.
பேப்பர் சேஸிங் கூட்டணி!
விசாரணையில் கருப்பசாமி ‘நிர்மலாவுடனான அறிமுகம் பற்றியும் மற்ற லீலைகள் பற்றியும் ஒத்துக்கொண்ட நிலையில், ""நானும் நிர்மலாவும் மெயினா பார்த்துக்கிட்டது பேப்பர் சேஸிங் வேலைதான். ஒரு பேப்பருக்கு ரூ.5000 வரை வாங்குவோம். திருத்துபவருக்கு ரூ.1000-லிருந்து ரூ.1500 வரை கொடுப்போம். மீதியை நானும் நிர்மலாவும் பிரித்துக்கொள்வோம்''’என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருவரும் புரோக்கர்களாக செயல்பட்டதையும் கூறியிருக்கிறார்.
ராஜ்பவன் பலவீனம்! ஆட்சியாளர்களின் ஆர்வம்!
ஏப்ரல்-8 நக்கீரன் இதழில் ‘"கவர்னர் பெயரால் கல்லூரி மாணவிகளுக்கு வலை'’ என்னும் தலைப்பில் முதன்முதலில் செய்தி வெளிவந்ததும், அதனை உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனின் கவனத்துக்கு கொண்டுசெல்லாமல், நேரடியாக கவர்னரை சந்தித்திருக்கிறார் துணைவேந்தர் செல்லத்துரை. இந்த விவகாரத்தை எப்படி கையாள்வது என்று ராஜ்பவனில் விவாதித்திருக்கின்றனர். ‘கமிஷன் அமைத்து நீர்த்துப்போகச் செய்துவிடலாம்’ என்று ஆலோசனை தந்திருக்கிறார் ஆடிட்டர் குருமூர்த்தி. இந்தக் கோபத்தில்தான் அமைச்சர் அன்பழகன் "சி.பி.சி.ஐ.டி. போலீசார், ராஜ்பவனின் பலவீனம் சம்பந்தப்பட்ட அத்தனை விஷயங்களையும் நிர்மலாதேவியிடம் கறந்துவிட வேண்டும். அறிக்கையும் தரவேண்டும்' என்று ஆரம்பத்தில் வேகம் காட்டியிருக்கிறார். முதலமைச்சர் எடப்பாடியும், அரசியல் கணக்குடன் ஆர்வம் மேலிட அதை ஆமோதித்திருக்கிறார். அதனால்தான், ‘"என்னைத் தெரியாது என்று கவர்னர் சொல்கிறார். கவர்னரைத் தெரியும் என்று நான் சொல்கிறேன். என்னை விசாரிப்பது போன்று கவர்னரையும் விசாரியுங்கள்'’என்று முதல்கட்ட விசாரணையில் நிர்மலாதேவியால் சொல்ல முடிந்திருக்கிறது.
இரு விசாரணையும் ஒரே ஸ்டைலில்!
சந்தானம் கமிஷன் இயங்கிய விதத்தை சுட்டிக்காட்டிய ஒரு அதிகாரி, “""சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை அறிக்கை எஸ்.பி. ராஜேஸ்வரி மூலம் ஏ.டி.ஜி.பி.க்கு போகும். அதை தீவிரமாக மானிட்டர் செய்து, எடிட் செய்து, ராஜ்பவனுக்கு அனுப்பி வைப்பார்கள். அந்த அறிக்கை அப்படியே சந்தானத்திடம் போய்ச் சேரும். அதற்கேற்றவாறு விசாரிப்பார் சந்தானம். கவர்னர் அலுவலகத்திலிருந்து அறிக்கை வருவதற்கு தாமதம் ஆகும்போதெல்லாம், விசாரணையில் இடைவெளி விடுவார் சந்தானம். ஒருவழியாக விசாரணையை இப்போது முடித்து விட்டார். இனி பாருங்களேன்... சி.பி.சி.ஐ.டி. விசாரணையும், சந்தானத்தின் அறிக்கையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்''’என்று கணிக்கிறார்.
நடந்தது; இனி நடக்கப்போவது!
முருகன், கருப்பசாமி ஆகிய இருவரின் தேவைகளைப் பூர்த்தி செய்ததோடு, மாணவிகளையும் அவர்களுக்காகவே அழைத்தார் நிர்மலாதேவி. அந்த நான்கு மாணவிகளை மூளைச்சலவை செய்ய அவரால் முடியவில்லை. முதல் முயற்சியே தோல்வியில் ‘முடிந்தது. வேறொன்றும் யாமறியோம் பராபரமே!’ என்னும் விதத்தில், விசாரணையை விரிவுபடுத்தாமல், கமுக்கமாக முடித்திருக்கிறார்கள்.
பன்வாரிலால் புரோகித் தமிழக கவர்னராக நீடித்தால், நாடாளுமன்ற -சட்டமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆதரவு வாக்குகளைக்கூட இழக்க நேரிடும் என்று டெல்லிக்கு ஐ.பி. ரிப்போர்ட் போயிருக்கிறது. புத்தாக்க பயிற்சி இயக்குநர் கலைச்செல்வனை சாட்சியாக்கும் வேலைகள் ஜரூராக நடக்கின்றன. மூன்று மாதங்களுக்குள், கவர்னர் குற்றமற்றவர் என்பதை ‘கண்துடைப்பு’ விசாரணைகள் வாயிலாக உறுதிப்படுத்திவிட்டு, தமிழகத்திலிருந்து கவர்னரை விடுவித்து விடுவார்கள் என்கிறது ராஜ்பவன் தரப்பு.