சேலம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல் படும் சாயப்பட்டறை களுக்கு மாசுக்கட்டுப் பாட்டு வாரிய அதி காரிகள், பெயரளவுக்கு அபராதம் விதித்துவிட்டு, லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாகக் குற்றச்சாட்டுகள் கிளம்புகின்றன. இந்நிலையில், அமைச்சர் வரை கரன்சியை பாய்ச்ச வேண்டுமெனக்கூறி, லஞ்சம் கேட்ட அதிகாரியின் உரையாடல் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த மணிமாறன், அவரது நண்பருடன் சேர்ந்து, 2023ஆம் ஆண்டு, சேலம் சீலநாயக்கன்பட்டியில் பழைய சாயப்பட்டறையை விலைக்கு வாங்கினர். சாயப்பட்டறை ஆலையில் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தவும், மின் இணைப்பு கேட்டும் சேலம் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்தார். இங்குதான் அவருக்கு அடுத்தடுத்து சிக் கல்கள் தொடங்கின.
இது தொடர் பாக மணிமாறன் நம்மிடம், "சாயப்பட்டறையை நடத்த அனுமதி கேட்டு சேலம் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் செந்தில் விநாயகத்தை அணுகினேன். அவரோ சிவக்குமார் என்பவரை பார்க்கும்படி கூறினார். அவர்தான் லஞ்சம் வசூலிக்கும் புரோக்கர் என்பதும், அவர்மூலம் தான் உரிமம் பெற முடியுமென்பதும் தெரிய வந்தது. அவரோ, ஆலைக்கு மின் இணைப்புக் கட்டணமாக 1.60 லட்சம் ரூபாய் செலுத்தும்படி கூறினார். டி.டி. எடுத்துக் கொடுத்தேன். அதன்பிறகு, சாயப்பட்டறையில் சில மாற்றங்களைச் செய்யும்படி கூறினார். அதற்காக 8 லட்சம் வரை செலவழித்தோம்.
பின்னர், செந்தில்விநாயகத்திடம் பேசியபோது, "எம்' வரை பணம் கொடுக்கணும். 3 லட்சம் கொடுத்தால் சீக்கிரம் அனுமதி கிடைத்து விடும் என்றார். மினிஸ்டர் என்பதைத்தான் 'எம்' என்கிறார்கள். கேட்ட தொகையைக் கொடுக்காததால் சாயப்பட்டறைக்கு அனுமதி தராமல் இழுத்தடித்தார். எனவே, செந்தில் விநாயகம், புரோக்கர் சிவக்குமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை, முதல்வரின் தனிப்பிரிவு, ஆளுநர் ஆகியோருக்கு புகார் அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக் கையும் இல்லை. இதற்கிடையே செந்தில் விநாயகம், இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக பதவி உயர்வு பெற்று, கோவைக்கு மாறுதலாகிச் சென்றுவிட்டார். மந்திரி பெயரைச் சொல்லி அவர் லஞ்சம் கேட்ட ஆடியோ, புரோக்கர் சிவக்குமார் பேசிய ஆடியோ எல்லாவற்றையும் இணைத்து மீண்டும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பினேன். அதற்கும் சரியான ரெஸ்பான்ஸ் இல்லை.
புரோக்கர் சிவக்குமாருக்கு தாசநாயக்கன் பட்டியில் சொகுசு வீடு உள்ளது. சேலம் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளராக யார் வந்தாலும் அவர்களுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்து, கைக்குள் போட்டுக் கொள்கிறார் புரோக்கர் சிவக்குமார். சாயப்பட்டறை ஆலைகள், கல் குவாரி உரிமையாளர்களிடமிருந்து கோடிக்கணக்கில் லஞ்சமாக வசூலிக்கிறார் செந்தில்விநாயகம். சிவக்குமார்தான் வசூல் ஏஜண்ட். சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் மகன் ஏற்காட்டிலுள்ள பள்ளியில் படிக்கிறார். அவருக்கு எடுபிடி வேலைகள் செய்து கொடுத்து வந்ததால் அமைச்சரிடமும் நெருக்கமாகி விட்டார் சிவக்குமார்.
இப்போது செந்தில்விநாயகத்தின் தூண்டுதலின்பேரில் சிவக்குமார் என் மீது, 25 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக சேலம் டவுன் போலீசில் புகாரளித்துள்ளார். போலீசார் என்னிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் ஏப்ரல் 30ஆம் தேதி கைது செய்தனர்'' என்று கொதித்தார் மணிமாறன்.
இதுதொடர்பாக செந்தில்விநாயகத்திடம் பேசினோம். "இப்போதுள்ள தொழில் நுட்பத்தின் மூலம் யார் வேண்டுமானாலும் என் குரலில் பேச முடியும். அதைத்தான் மணிமாற னும் செய்துள்ளார். அவரது சாயப்பட்டறைக்கு ஏற்கெனவே ரூ.1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. அதனால் மீண்டும் அனுமதி கொடுக்காமலிருந்தோம். இதற்காக எங்கள் மீது பொய்ப்புகார் சொல்கிறார்'' எனப் பட்டும்படாமல் சொன்னார்.
சிவக்குமாரிடம் கேட்டபோது, "நான் சாயப்பட்டறை தொடங்குவது, உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை செய்து தரும் கன்சல்டன்ட் மட்டுமின்றி, சொந்தமாக சாயப்பட்டறையும் நடத்தி வருகிறேன். என் மீது ஆர்.டி.ஐ. சட்டத்தின் மூலம் மணிமாறன் அடிக்கடி கேள்விகேட்டு, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மூலம் எனது பட்டறையை சோதனையிடவைத்து மன உளைச்சல் ஏற்படுத்துகிறார். அதோடு, 25 லட்சம் பணம் கொடுக்காவிட்டால் மேலும் மேலும் குடைச் சல் கொடுப்பேனென மணிமாறன் மிரட்டிய தால் அவர்மீது புகாரளித்தேன்'' என்றார்.
ஏப்ரல் 30ஆம் தேதி மணிமாறனை, சேலம் டவுன் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயதேவி தலைமையிலான போலீசார், காவல்நிலையத் திற்கு அழைத்து வந்து, அவரி டம் எந்த விசாரணையும் நடத் தாமலேயே, கொலை மிரட் டல், அச்சுறுத்தி பணம் பறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து, சேலம் ஜே.எம்.லி1 நீதித்துறை நடுவரின் வீட்டில் ஆஜர்படுத்தினர். நீதித்துறை நடுவரிடம், அனைத்து விவரங்களையும் மணிமாறன் எடுத்துக்கூறியதையடுத்து, நீதித்துறை நடுவர், அவரை பிணையில் விடுவித்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஜெயதேவி யிடம் கேட்டபோது, "சிவக்குமாரை மணி மாறன் மிரட்டியது தெரியவந்ததால்தான் எப்.ஐ.ஆர். பதிவு செய்தோம்,'' என்று சுருக்க மாக முடித்துக்கொண்டார். அமைச்சரையும் சேர்த்தே குறிப்பிட்டு லஞ்ச வேட்டையாடும் அதிகாரிகள்மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிறார்கள் சாயப்பட்டறை உரிமையாளர்கள்.