அ.மு.மு.க.வின் தலைமைக் கழகம் தினகரனால் கோலாகலமாகத் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், அதில் உள்ள வில்லங்கங்களை அடுக்குகிறார், அ.தி.மு.க. பிரமுகர் சினி சரவணன்.
""சென்னை ஆலந்தூர் கக்கன் காலனி, நோபல் தெருவில் (விமான நிலையம் அருகில்) 650 ஆதிதிராவிடர் குழந்தைகளுக்கான சத்துணவு பள்ளிக்கூடத்தையும் ஒரு நூலகத்தையும் 1982-ல் திறந்து வைத்தார் எம்.ஜி.ஆர். அந்த இடத்தையொட்டி, கிரீன் பீஸ் ப்ரைவேட் லிமிடெட் என்கிற கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் எர்ணட்ஸ்பாலுக்கு 28 கிரவுண்ட் காலிநிலம் இருக்கிறது. அந்த இடத்தில் பில்டிங் கட்டி விற்பனை செய்வதற்கு பெரிய நுழைவுவாயில் அவசியம். அதற்கு பள்ளிக்கூடம் இடையூறாக இருந்ததால், சென்னை மாநகராட்சியின் உதவியை நாடினார் எர்ணட்ஸ்பால். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் துணை நின்றனர்.
பள்ளிக்கூடத்தை தரை மட்டமாக்கியது சென்னை மாநகராட்சி. இதனால் 650 குழந்தைகளும் பாதிக்கப்பட்டதால், உள்ளாட்சித்துறை செயலர், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் கிரீன் பீஸ் நிறுவன உரிமையாளர் எர்ணட்ஸ்பால் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளேன். வழக்கு நிலுவையில் உள்ளது.
எர்ணட்ஸ்பாலின் கிரீன்பீஸ் நிறுவனத்தின் அலுவலகம் (6 கிரவுண்ட்) சென்னை- அசோக்நகர், நடேசன் சாலையில் இருக்கிறது. அந்த அலுவலகத்தின் முகவரிதான் வழக்கில் சேர்க்கப்பட்டு, நோட்டீஸும் அனுப்பியிருக்கிறது நீதிமன்றம். அதே முகவரியிலுள்ள பெரிய கட்டடத்தைத்தான் தற்போது தனது கட்சி அலுவலகத்துக்காக வாங்கியிருக்கிறார் தினகரன். அவரிடம் தனக்கு எதிராக இருக்கும் வழக்கு குறித்தும், வழக்கில் இந்த கட்டடத்தின் முகவரி இருப்பது பற்றியும் தெரிவித்திருக்கிறார் எர்ணட்ஸ்பால். "வழக்கை நான் பார்த்துக்கொள்கிறேன்' என சொன்ன தினகரன், அந்த கட்டடத்தை வாங்கும் முடிவுக்கு வந்தார். அதேசமயம், தனது பெயரில் பதிவு செய்தால் சிக்கல் என்பதால்தனது நெருங்கிய உறவினரான முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா பெயரில் வாங்கியிருக்கிறார். எதிர்காலத்தில் இந்த கட்டடம் குறித்து ஏதேனும் வில்லங்கம் உருவானால், தலித் ஸ்கூலுக்கு அருகிலிருக்கும் 28 கிரவுண்ட் நிலத்தை தினகரன் தரப்பிடம் தருவதெனவும் எழுதப்படாத ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. வழக்கில் தொடர்புடைய முகவரியிலுள்ள சொத்தை விற்பதாக இருப்பின் தனது புதிய முகவரியை முறைப்படி நீதிமன்றத்துக்குத் தெரிவித்து, கோர்ட்டின் அனுமதியுடன்தான் எர்ணட்ஸ்பால் விற்கமுடியும். ஆனால், கோர்ட்டுக்கு தெரிவிக்காமலே சொத்து விற்கப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய வில்லங்க சொத்து எனத் தெரிந்தும் உறவினர் பெயரில் வாங்கி கட்சி அலுவலகத்தை திறந்துள்ளார் தினகரன். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரவிருக்கிறேன்!'' என்கிறார் ஆவேசமாக.
இதற்கிடையே, தலைமை அலுவலகம் திறந்த கையோடு அதனை பூட்டியும் வைத்துள்ளனர். தினகரன் வரும்போது மட்டுமே திறந்துவைக்க உத்தரவு போட்டிருக்கிறார்கள். அத்துடன் அவரை யார் யார் சந்திக்க வேண்டும் என உதவியாளர்களே முடிவு செய்கிறார்கள். உதவியாளர்களான ஜனா மற்றும் பிரபுவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார் தினகரன் என்கிறது கட்சியின் உள்வட்டம். இதில் தினகரனின் உறவினரான பிரபுவுக்குத்தான் அதிக அதிகாரம். முன்னாள் அமைச்சர்கள் செந்தமிழன், செந்தில்பாலாஜி, பழனியப்பன் தவிர கட்சியின் சீனியர்கள் தொடங்கி தினகரனை நம்பி வந்த எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் உள்ளிட்ட யாரும் அப்பாயின்ட்மெண்ட் இல்லாமல் தினகரனை சந்திக்க பிரபு அனுமதிப்பதில்லையாம். இத்தகைய அதிருப்தியில்தான் விலகினார் நாஞ்சில் சம்பத். கட்சியின் முக்கியப் பதவிகளில் முக்குலத்தோர்களையே தினகரன் நியமித்து வருவதாலும், பெரும்பான்மை சமூகங்களைப் புறக்கணிப்பதாலும், கட்சிப் பெயரை அம்மா முக்குலத்தோர் முன்னேற்றக் கழகமாக மாற்றிவிடலாம் என்கிற அளவுக்கு சீனியர்களிடம் மனக்கசப்பு அதிகரித்து வருகிறது.
இதனையறிந்த இ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சும் அ.ம.மு.க.வை உடைக்கும் வேலையில் ரகசியமாக இறங்கியுள்ளனர். தினகரனோ இதுபற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், தனக்கான பேனர்களிலும் போஸ்டர்களிலும், "இரண்டாம் புரட்சித் தலைவரே' என அழைக்குமாறு உதவியாளர்கள் வழியாக உத்தரவு போட்டிருக்கிறார் என குமுறுகின்றனர் சீனியர்கள்.
-இரா.இளையசெல்வன்