ஸ்ரீமதி மர்ம மரணத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனு, நீதிபதி சாந்தியால் நிராகரிக்கப்பட்டதை, தமிழக பெற்றோர்கள் தங்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே நினைக்கிறார் கள். இது தொடர்பாக ஸ்ரீமதியின் அம்மா செல்வி, அவர்களது சார்பாக வழக்கறிஞர்களாக களம் கண்டவர்களை நக்கீரன் சார்பாக சந்தித்தோம்.
வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி
ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப் படும் என்று எதிர்பார்த்தோம். சி.பி. சி.ஐ.டி.யின் இறுதி அறிக்கை இன்னும் கோர்ட்டில் ஒப்படைக்கப்படவில்லை. உயர்நீதிமன்ற அறிக்கைப்படி இரண்டு உடற்கூறு அறிக்கையையும் ஒப்பாய்வு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தால் தான் அந்த ஆய்வின் அடிப்படையில் உண்மைத்தன்மை என்ன? பாலியல் வல்லுறவில் கொலைசெய்யப்பட்டாரா? இல்லை கொலையா? தற்கொலையா என்ற முழு உண்மை தெரியும். அது வராமல் ஜாமீன் கொடுத்து வெளியில் விட்டால் அவர்கள் தடயங்களை அழித்துவிடும் முயற்சிகளைச் செய்வார்கள்.
வழக்கறிஞர் காசி விஸ்வநாதன்
சி.பி.சி.ஐ.டி. மிக மெதுவாகச் செயல்படுவதாகத் தான் தோன்றுகிறது. அல்லது முழுமையாக விசாரிப்பதில் காலதாமதமாகவும் வாய்ப்புள்ளது. ஸ்ரீமதியுடன் படித்த சில குழந்தைகள், இப்போது பாலாஜி என்ற இன்னொரு ஸ்கூலில் படித்துக் கொண்டுள்ளார்கள். குற்றம்சாட்டப் பட்டு சிறையிலுள்ள ரவிக்குமாரின் அம்மாதான் அந்த ஸ்கூலின் நிர்வாகம். ஸ்ரீமதியுடன் கூடப்படித்த பெண் தோழிகள், அவர்கள் கஸ்டடியில்தான் இருக்கிறார்கள். பயமில்லாமல் எப்படி சாட்சி சொல்லமுடியும்? வேறு பள்ளியில் சேர்த்து அந்தக் குழந்தைகளுக்கு தைரியம், பாதுகாப்பு கொடுத்துதான் சி.பி.சி.ஐ.டி. முழு உண்மைகளையும் பெற முயற்சிக்கவேண்டும்.
குற்றவாளிகள் தரப்பில் மகிளா நீதிமன்றமே மெரிட்ல தீர்மானிக்கணும்னு மனுத் தாக்கல் செய்துள் ளார்கள். ஸ்ரீமதியின் அப்பா ராமலிங்கம் ஏற்கெனவே ஒரு ரிட் போட்டிருக்கிறார். அந்த ரிட் விசாரணை ஆகஸ்ட் 29-ஆம் தேதி இருக்கு. மகிளா கோர்ட் விசயத்தையும் எடுத்துவைத்தோம். ஜிப்மர் அறிக்கை வரவேண்டும். சார்ஜ்ஷீட்தான் பைனல் ரிப்போர்ட். அதிலேயே விட்னஸ் எல்லாரையும் மார்க் பண்ணுவார்கள். அந்த ஹாஸ்டலுக்கு உரிமமே கிடையாது. மாவட்ட ஆட்சியரிடமோ, கல்வித்துறையிடமோ உரிமத்துக்கு மனுகூட தாக்கல் செய்யவில்லை. அது சட்டவிரோதமான ஒரு ஹாஸ்டல்.
வழக்கறிஞர் புஷ்பதேவன்
பாலியல் துன்புறுத்தலுக் கான சீரமைப்பு செக்சன் இணைக்கப்பட வேண்டும். முதல் போஸ்ட்மார்ட்டத்தி லேயே ஸ்ரீமதியின் பிரைவேட் பார்ட்ஸ் ஆய்வு செய்யப்பட வில்லை என்றுதான் நாங்க செகன்ட் போஸ்ட்மார்ட்டம் கேட்கிறோம். பாலியல் வன் கொடுமை செய்துதான் கொலை செய்யப்பட்டுள்ளார். போக்சோ கேஸ் மட்டுமல்ல. கொலைதான் அது. அதற்குண்டான அறிகுறி கள்தான் உள்ளன. செக்சன் 302 சேர்க்கப்படவேண்டும். கொலைக்குண்டான அனைத்து ஆதாரங்களும் சி.பி.சி.ஐ.டி. வசம் உள்ளன.
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கேசவன்
இவர்கள் ஐந்து பேரின் பிணைமனு விசாரணையை மூன்று வகைகளில் எதிர்கொண் டோம். பிரேதப் பரிசோதனை யில் மொத்தம் பதினாறு காயங்கள். அதில் முதல் காய மாக மூக்கின் வேர்ப்பகுதியில் ஏற்பட்டிருந்த காயம். வாயைப்பொத்திக் கொலைசெய்ய முயற்சித்தபோது மட்டும்தான் அந்தக் காயம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. மூக்கை அழுத்திப் பொத்தும்போது உயிருக்கான ஜீவ மரணப் போராட்டத்தின்போது மட்டும்தான் அந்த மூக்கின் வேர்ப்பகுதி நொறுங்கும். ஜீவ மரணப் போராட்டத்தின் விளைவாகத்தான் ஸ்ரீமதியின் உடலிலிருந்து மலமானது கசிந்துள்ளது. மாடியிலிருந்து குதிப்பதாலோ, இல்லை தூக்கிப் போட்டு இருந்தாலோ மூக்கின் வேர்த்தண்டுப் பகுதி காயம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை, மலம் வெளியாகாது என்பதை மருத்துவர்களைக் கலந்தாலோசித்த பின் வாதமாக வைத்தோம்.
கொலையாளிகள் கதை ஜோடிக்கிறார்கள். அந்தக் கதை ஜோடிப்புக்கும் இந்த மரணத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. உடலின் இதயப் பகுதியிலுள்ள இரத்தம் ஸ்ரீமதிக்கு உறையாமல் இருந்துள்ளது. அது எந்தச் சூழலில் உறையாமல் இருக்குமென்றால் மூச்சுத்திணற கொலை செய்யப்படும்போதுதான். மிகக் கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கி கொலைசெய்திருக்கிறார்கள். இது முதல் சம்பவம் அல்ல, இதற்கு முன்னால் பல மாணவர்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள் என்று இதே வழக்கில் ஆ-1 ஆக உள்ள கிருத்திகாவின் தந்தை நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அந்த அபிடவிட்டில் அவர், இது கொலைதான் என்று உறுதியாகச் சொல்கிறார்.
நக்கீரன்: குழந்தையின் ‘ரிப்’ அதாவது... விலா எலும்புகள் எப்படி உடைந்தன?
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கேசவன்
குழந்தை முழுமையான உடை அணிந்திருக்கிறது. கோட், ஓவர் கோட் இன்சைட் பனியன் இத்தனையும் அணிந்துள்ளது. மாடியில் இருந்து குதித்திருந்தால் ஸ்ரீமதி உடலின் உள்பகுதியில் இதுபோன்ற காயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இரண்டு மூன்று பேருக்கு மேல் சேர்ந்து ஒருவர் மூக்கைப் பொத்தி கை, காலை முறுக்கி, விலா எலும்புகள் உள்ளே நொறுங்கும் அளவுக்கு நசுக்கப்பட்டிருக்கிறாள். நகக் கீறல்கள் அந்தக் குழந்தையின் உடம்பு முழுக்க இருப்பதால், நிர்வாணப்படுத்தி மானபங்கம் செய்துள்ளார்கள். முதல் காயமே கீழே தள்ளிவிடப்பட்டதால் ஏற்பட்ட மண்டைக் காயம்தான். மாடியிலிருந்து கீழே விழும்போது இவ்வளவு விலா எலும்புகளும் உடையாது. இரண்டு மூன்று பேர் சேர்ந்து மிகக் கடுமையான மூர்க்கத்தனமான போர்ஸ் கொடுத்துதான் விலா எலும்புகள் அனைத்தும் நொறுக்கப்பட்டுள்ளன. ரொம்பத் தேர்ந்த கொலையாளிகள்தான் இதைப்போல் எல்லாம் செய்யமுடியும்.
ஆயிரக்கணக்கான உடற்கூறு ஆய்வுகளைச் செய்த எக்ஸ்பர்ட்டுகளிடம் ரிப்போர்ட்டுகளைக் காண்பித்ததில், பாலியல் சித்ரவதைக் கொலைதான் என்பதை நாற்பதாண்டு அனுபவமிக்க மருத்துவர் கள் போஸ்ட்மார்ட்டம் சம்பந்தமான அறிவியல் பூர்வமான புத்தகங்களின் அடிப்படையிலும் ஆய்வு செய்து சொன்னார்கள். ஸ்ரீமதியின் உடலில் ஒன்றரை சென்டிமீட்டர் ஆழம் கொண்ட நகக்காயம், ரெண்டு சென்டி மீட்டர் ஆழ பல்லின் காயம் உள்ளன. இது ஆணித்தர மாகக் கற்பழிப்புக் கொலை. எங்கள் மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு சார் இதை நிறுவ கடுமையான முயற்சிகள் எடுத்தார்.
குற்றவாளிகள், சாட்சி யங்களை அழித்து இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சிகள் செய்வதுடன் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவே நடக்கிறார்கள். இவர்கள் பிணையில் வெளிவந்தால் மேலும் விசாரிக்கப்படவேண்டிய மற்ற மாணவ- மாணவிகளின் உயிருக்கு யார் பொறுப்பு? பள்ளி நிர்வாகம் குற்றவாளியின் அம்மா கையில். அவர்கள் சிறையில் இருந்துமே இவ்வளவு செய்கிறார்கள் என்றால் இவர்களை வெளியில் விட்டால்?
நீதியரசர் சதீஷ்குமார் உத்தரவில், பத்தி எட்டில் எந்தச் சூழ்நிலையில் இரண்டாவது போஸ்ட்மார் டத்துக்குப் பின்னரும், மூன்றாவதாக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட விசயத்தில் முதல் இரண்டு போஸ்ட்மார்ட்டம் அடிப்படை யில் இவர்கள் கூறக்கூடிய குற்றச்சாட்டுகளை நீங்கள் கண்டுபிடிக்கமுடியுமா என்று திறந்த நீதிமன்றத்திலேயே செல்வகுமாரிடம் கேள்வியாகக் கேட்டார். ஆம் முடியும் என்ற பதிலிலேயே இது கொலைதான் என்ற முடிவுக்கு உயர்நீதிமன்றம் வந்துவிட்டது. பாலியல் வன்முறை போன்ற வழக் கின் பிரிவுகளை மாற்ற மட்டுமேதான் ஜிப்மர் பரி சோதனை முடிவும் வரவேண்டும். இன்றைக்கு அரசுத் தரப்பின் வழக்கறிஞரும் அதைச் சொன்னார். அந்த அடிப்படையில் பிணை மறுக்கப்பட்டது.
வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி
கெமிக்கல் ரிப்போர்ட் விஸ்ரா எல்லாம் ஒரு பதினைந்து நாட்களுக்குள் வந்திருக்க வேண்டும். ஆனா, ஒரு மாசமாகியும் இன்னும் வரலை. அதுவே எங்களுக்கு வேற மாதிரி ஏதாவது நடக்குதான்னு யோசனையா இருக்கு. ஒருவேளை சி.பி.சி.ஐ.டி.க்கு வந்துட்டு இன்னும் நமக்கு சொல்லாம இருக்காங்களா? அல்லது கோர்ட்டுல எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து ஒப்படைக்கப் போறாங்களா? தெரியலை.
வழக்கறிஞர் புஷ்பதேவன்
வழக்கு விசாரணை யில் இருக்கும்போதே பிரிவு மாற்றம் அப்படின்னு நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய லாம். குற்றவாளிகளும் மாறுவார்கள். இப்ப அஞ்சு பேருதான் இருக்காங்க. இன்னும் எத்தனை பேரு இருந்தாலும் சேர்க்கலாம். குற்றத்தின் தன்மையும் மாறும். அதற்கேற்றபடி பிரிவுகளில் தாளாளர் ரவிக்குமாரின் மகன்கள் உட்பட செக்சன்கள் மாற்றப்படும். சி.பி.சி.ஐ.டி. ரகசியமா சில விசயங்களை செய்றாங்க. பகிரங்கமாகவும் செய்றாங்க. இவங்க ரகசியமா செய்றதை வெளியில உள்ளவங்க சோர்ஸ் ஏற்படுத்துடுறாங்க. இந்த வழக்கில் குற்றவாளிகள் எண்ணிக்கை கூடும்.
வழக்கறிஞர் கேசவன்
குற்றவாளிகள் சமூகத்தில் பலம் மிக்கவர் களாக இருப்பதனால் இவர்களை முழுக்க சிறையி லேயே வைத்து இந்த வழக்கை நடத்தி முடிக்க வேண்டும். போன வாரம் கிருத்திகா அப்பா கொடுத்த ஸ்டேட்மெண்ட் இந்த வாரத்தில் மாறுது. அரசு காவல்துறை சாட்சிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும். சி.பி.சி.ஐ.டி. அதைச் சரியாகச் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
தொகுப்பு: சுந்தர் சிவலிங்கம்
__________________
ஸ்ரீமதியின் மரணத்தை மறைத்த ரவிக்குமாருக்கு ஒரு முன்அனுபவம் இருக்கின்றது. "2004-ஆம் ஆண்டு இதே பள்ளியில் நாக்குப்பம் என்கிற ஊரைச் சேர்ந்த ரவி செட்டியார் என்பவரது பதினான்கு வயது மகன் கழுத்தில் காயமடைந்து மரணமடைந்தார். இந்த வழக்கில் ரவிக்குமார் கைது செய்யப்பட்டு கொலைக் குற்றச்சாட்டின் அடிப்படையில் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 2011-ஆம் ஆண்டில்தான் அவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்த தைரியமும் முன்அனுபவமும்தான் ஸ்ரீமதியின் மரணத்தை, தற்கொலையாக மாற்றுவதற்கு இரவிக்குமாருக்கு உதவுகிறது' என்கிறார்கள் போலீசார்.