தி.மு.க. சார்பில் கட்சி நிகழ்ச்சிகள் நடைபெற் றால், அந்தந்த பகுதி கிளை அல்லது வட்டச் செயலாளரை மேடையில் அமர வைக்க வேண்டும் என்பது விதி. சட்டதிட்ட விதிகளைக் கடுமை யாகக் கடைப்பிடிக்கும் கட்சியில் இப்போது விதிகளை மீறிச் செயல்படுவதாகக்கூறி கட்சியின் தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளனர் திருவண்ணாமலை பகுதி உ.பி.க்கள்!
இதுபற்றி நம்மிடம் பேசிய திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் சிலர், "கட்சி சார்பில் எந்த நிகழ்ச்சி நடைபெற்றாலும் அதற்கான நோட்டீஸில் மாவட்ட கமிட்டியில் உள்ளவர்கள் பெயர், அதன்பின் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அடுத்து மாநகர, நகர, ஒன்றியச் செயலாளர்களின் பெயர்கள் போடப்பட வேண்டும். அதன் பின்பே கழகத்திலுள்ள துணை அமைப்புகளின் நிர்வாகிகள் பெயர்களைப் போடவேண்டும். சிறப்பு அழைப்பாளர்கள், மாநில நிர்வாகிகளின் பெயர்களை மாவட்ட கமிட்டி நிர்வாகிகளின் பெயர்களுக்கு அடுத்து போட வேண்டும். ஆனால் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் அது முற்றிலும் மீறப்படுகிறது. இதோ இந்த நோட்டீஸை பாருங்கள். "உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்' பொதுக்கூட்டம் திருவண்ணா மலையில் நடைபெற்றது. திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கான நோட்டீஸில், மாவட்ட கமிட்டி நிர்வாகிகளுக்கு அடுத்தபடியாக ஒன்றிய, நகர செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் பெயர்கள் வரவேண்டும். அதன்பின்பே கட்சியின் சார்பு அணிகளான இளைஞரணி, மகளிரணி, மாணவரணி அமைப்பாளர்களின் பெயர்கள் வரவேண்டும். ஆனால் அதற்கு மாறாக அணிகளின் மாவட்ட அமைப் பாளர்களின் பெயர்களை மேலே போட்டிருக்கிறார்கள். கட்சிக்கான விதிமுறையை மீறுவது எந்தவிதத்தில் நியாயம்?. எங்களுக்கான மரியாதையை நோட்டீஸில் கூட தர மறுப்பது ஏன்? திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் தான் இப்படி கட்சி நிர்வாகிகளை மதிக்காத போக்கு நிலவுகிறது. அமைச்ச ருக்கும், தலைமைக்கும் இதுகுறித்து புகார் அனுப்பியுள்ளோம்'' என்றார்கள்.
இதுபற்றி மா.செ. அமைச்சர் எ.வ.வேலு தரப்பில் விசாரித்தபோது, "கட்சியின் விதிகளை சரியாகக் கடைப்பிடிப்பவர் அமைச்சர். அவர் ஊரிலில்லாத சமயங்களில் கட்சிப் பணிகளைக் கவனிக்கும் பொறுப்பைத் தனது மகன் எ.வ.வே.கம்பனிடம் ஒப்படைத்துள்ளார். அவருக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறிக்கொண்டு சிலர் இப்படி கட்சி விதிமுறைகளைக் கண்டு கொள்ளாமல் இஷ்டத்துக்கு நடந்துகொள்கிறார்கள். அவர்களை அமைச்சர் விரை வில் கட்டுப்படுத்துவார்'' என் றார்கள்.