தங்களின் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் கொரோனாவினால் பாதிக்கப் பட்ட மக்களின் உயிரைப் பாதுகாக்க போராடி வரும் அரசு டாக்டர்கள், தங்களின் சம்பளத்துக்காக தமிழகம் தழுவிய போராட்டத்தை மீண்டும் முன்னெடுக்கத் தயாராகி வருகின்றனர். நீதிமன்றத்தின் உத்தரவும், சாய்பாபா மீது செய்த சத்தியமும் என்னாச்சு? என போர்க்குரல் உயர்த்து கிறார்கள் அரசு டாக்டர்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகி டாக்டர் பெருமாள்பிள்ளை, ""கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் மக்களைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் போராடி வருகிறோம். ஆனால், எங்களின் சம்பள விசயத்தில் அரசு பாராமுகம் காட்டுவது வேதனை தருகிறது. மன உளைச்சல்களுக்குள் தள்ளப்பட்டுள் ளார்கள் அரசு டாக்டர்கள்.
மத்திய அரசு டாக்டர்களும், மாநில அரசு டாக்டர்களும் 56,100 ரூபாய் என்கிற ஒரே அடிப்படைச் சம்பளத்தில்தான் பணியில் சேர்கிறோம். ஆனால், ஊதிய உயர்வில் மாநில அரசு டாக்டர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. 4, 9, 13, 20 ஆண்டுகள் முடிந்ததும் மத்திய அரசு டாக்டர்கள் காலம் சார்ந்த சம்பள உயர்வும், பதவி உயர்வும் பெறுகின்றனர். இதனால், 7-வது ஊதிய குழுவில் 13 ஆண்டுகள் முடித்து 14-வது ஆண்டில் 1,23,000 ரூபாய் ஊதியமும், கூடுதலாக 20 சதவீத அடிப்படை சம்பளமும் அவர்களுக்குக் கிடைக்கும் நிலையில், மாநில அரசு டாக்டர்களோ வெறும் 86,000 ரூபாய்தான் பெறுகின்றனர். இதனால் பணி ஓய்வு பெறும் நாள் வரை மாதந்தோறும் 45,000 ரூபாயை இழந்து கொண்டிருக்கிறோம்.
இதனால், 2018-லிருந்து போராடி வருகிறோம். சுகாதாரத்துறையின் கூடுதல் செயலர் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி, அரசாணை 354-ன் படி அரசு டாக்டர்களின் காலம் சார்ந்த ஊதிய கோரிக்கையை நிறைவேற்றப் பரிந்துரைத்தது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையும் சாதகமான முடிவை எடுக்குமாறு உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ந்தேதி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்திய போது, லண்டனுக்கு முதல்வருடன் புறப்பட தயாரான அமைச்சர் விஜய பாஸ்கர், எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 6 வாரத்திற்குள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக சாய்பாபா மீது சத்தியம்செய்து உறுதியளித்தார். ஆனால், எத்த னையோ 6 வாரங்கள் கழிந்து போனது. எங்களின் கோரிக்கை மட்டும் நிறைவேற்றவில்லை. இதனால் கடந்த அக்டோபரில் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தையும், சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்தினோம். அரசாங்கமோ, 118 டாக்டர் களை 500 கி.மீ. அப்பால் தூக்கி யடித்துப் பழிவாங்கியது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் சங்கத்தின் தலைவர் லட்சுமி நரசிம்மன் உயிரிழந்தார்.
போராட்டம் தொடர் பான வழக்கில் கடந்த பிப்ரவரி 28-ல் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், டாக்டர்களின் இடமாற்றத்தையும் 17பி குற்றவியல் ஆணையையும் ரத்து செய்ததுடன் கோரிக்கையை நிறைவேற்றவும் வலியுறுத்தியது. இது தொடர்பான ஒரு வழக்கில், கொரோனா போரில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்கு உரிய ஊதியத்தை உடனடி தராவிடில் கிரிமினல் குற்றமாகக் கருதப்படும் என தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம்.
நீதிமன்றங்களின் உத்தரவுகள், கமிட்டியின் பரிந்துரைகள், கொடுக்கப்பட்ட உறுதிமொழிகள், செய்யப்பட்ட சத்தியம் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் தமிழக அரசும் சுகாதாரத் துறையும் எங்களை வஞ்சித்து வருகிறது. மீண்டும் வேலை நிறுத்தப்போராட்டத்தை துவக்குவது தவிர வேறுவழி தெரியவில்லை'' என ஆவேசப்படுகிறார்.
இதுகுறித்து கருத்தறிய அமைச்சர் விஜயபாஸ்கரை பலமுறை தொடர்புகொண்டும், அவரது ஃபோன் பிஸியாகவே இருந்தது. சில சமயத்தில் ரிங் ஆனது. ஆனாலும் நமது அழைப்பை அவர் அட்டெண்ட் பண்ண வில்லை.
சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு டாக்டர்களின் நிலை இப்படியிருக்க, "அம்மா(ஜெ.) ஆட்சியில் நியமிக்கப்பட்ட நாங்கள் எடப்பாடி ஆட்சியில் அனாதைகளா கிறோம்'’என பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிநேர ஆசிரியர்களிடம் ஆவேசம் தெறிக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர் கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் நம்மிடம்,’""மத்திய அரசின் சர்வசிக்சாஅபியான் திட்டத்தின் கீழ் தமிழக அரசு பள்ளிகளில் உடற்கல்வி, கணினி அறிவியல், தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட பாடங்களுக்கு 5,000 ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் 16,549 பகுதிநேர ஆசிரியர்களை கடந்த 2011-12 கல்வியாண்டில் நியமித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.
அதன்பிறகு 2014-ல் 40 சதவீத ஊதிய உயர்வையளித்து எங்களது சம்பளத்தில் 2000 ரூபாயை அதிகப்படுத்திக் கொடுத்ததுடன் ஏப்ரல் மாதத்தோடு கணக்கிட்டு நிலுவைத் தொகையையும் கொடுத்தார் ஜெயலலிதா. தற்போதைய முதல்வர் எடப்பாடி ஆட்சியில் 10 சதவீதம் மட்டுமே உயர்த்தி கடந்த 2017-ல் வெறும் 700 ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது. இந்த 10 சதவீத உயர்வையும் ஏப்ரல் மாதத்தை கணக்கிட்டு கொடுக்கவில்லை. ஆக, பல வருடங்களாக 7,700 ரூபாய் சம்பளத்தில் மட்டுமே பகுதிநேர ஆசிரியர்கள் வேலை செய்து வருகின்றனர். கொரோனாவை காட்டி மே மாதம் சம்பளமும் கொடுக்கவில்லை.
7-வது ஊதிய குழுவின் அரசாணையின்படி தொகுப் பூதியம் பெறுபவர்கள் 30 சதவீதம் ஊதியஉயர்வு பெற தகுதியானவர்கள். ஆனால், அத்தகைய ஊதிய உயர்வை கொடுக்க மறுக்கிறது பள்ளிக்கல்வித்துறை. எங்களது அவலநிலையை சுட்டிக்காட்டி முதல்வர் எடப்பாடியையும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனையும் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினோம். ஆனாலும், எங்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. எங்களுக்குப் பிறகு நியமனம் பெற்ற பல துறை யினரும் பணி நிரந்தரமான நிலையில், எங்களைப் பணி நிரந்தரம் செய்யவும் மறுக்கின்றனர். பணி நிரந்தரமில்லாமலும், போதிய சம்பளமுமில்லாமலும் கால்வயிற்று கஞ்சிக்காகப் போராடி வருகிறோம். ஆனா, அரசுக்கு இரக்கமே வரவில்லை. அம்மா ஆட்சியில் நியமிக்கப்பட்ட நாங்கள், அம்மா பெயரில் ஆட்சி நடத்துவதாக சொல்லப்படும் இந்த ஆட்சியில் அனாதைகளாக இருக்கிறோம். இனியாவது முதல்வர் மனசு வைக்க வேண்டும்''’என்கிறார் மிக ஆதங்கமாக.
எடப்பாடி அரசோ டெண்டர் விவகாரங்களில் மட்டும் அதீத கவனம் செலுத்துகிறது.
-இரா. இளையசெல்வன்