மிழகத்தில் எடப்பாடி ஆட்சி நடக்கிறதா? இல்லவே இல்லை... பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. தமிழகத்தின் உண்மையான முதல்வர் யார் தெரியுமா? மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன்தான்'' என தமிழக அரசியலின் உண்மையான பக்கத்தை எடுத்துச் சொல்கிறார்கள் தலைமைச் செயலகத்தைச் சேர்ந்தவர்கள்.

கடந்தவாரம் தமிழகம் வந்த நிர்மலா சீதாராமனுக்கு கறுப்புக்கொடி காட்டின தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். பிரதமர் மோடிக்கும் கவர்னர் புரோகித்துக்கும் கறுப்புக்கொடி காட்டியபோது கூட டென்ஷன் ஆகாத தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கறுப்புக்கொடி காட்டப்பட்டதும் ரொம்பவே டென்ஷனாகிவிட்டார். உடனே உள்துறை செயலாளர், டி.ஜி.பி. என அனைவருக்கும் போன்போட்டு எகிறினார். அதனால் கறுப்புக்கொடி காட்டிய தி.மு.க.வினர் ரிமாண்ட் செய்யப்பட்டனர்.

அதேபோல் பெண் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய விவகாரத்தில் ஜாமீன் கிடைக்காமல் தலைமறைவாகியிருக்கும் எஸ்.வீ.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு அவரது அண்ணியான கிரிஜா வைத்தியநாதன்தான் காரணம் என பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டினர். எஸ்.வீ.சேகர் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய 33 பத்திரிகையாளர்களை கைது செய்த சென்னை மாநகர போலீஸ், எஸ்.வீ.சேகர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரோ திருப்பதி, ஹைதராபாத் என ஜாலியாக சுற்றித்திரிகிறார். எஸ்.வீ.சேகரை காப்பாற்றுவது கிரிஜா மட்டுமல்ல, நிர்மலா சீதாராமனும்தான். "எஸ்.வீ.சேகரை கைது செய்ய வேண்டுமென்றால் எஸ்.வீ.சேகர் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய 33 பத்திரிகையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என முதல்வர் எடப்பாடியிடம் நிர்மலா சீதாராமன் தெளிவாகச் சொல்லிவிட்டார் என நிர்மலாவும் கிரிஜாவும் இணைந்து தமிழகத்தில் நடத்தும் ஆட்சி பற்றி பயத்துடன் சொல்கிறார்கள் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் கிரிஜாவை எப்படி மாற்றுவது எனத் தெரியாமல் விழிக்கிறார். டெல்லி மேலிடத்தின் செல்வாக்கு கிரிஜாவுக்கு உள்ளது. எடப்பாடியின் ஒவ்வொரு அசைவையும் மத்திய அரசுக்குச் சொல்லும் கிரிஜா அதற்காக ஆடிட்டர் குருமுர்த்தியை உபயோகப்படுத்திக்கொள்கிறார். ஆடிட்டர் குருமூர்த்தி, தலைமைச் செயலாளர் கிரிஜா, மத்திய அமைச்சர் நிர்மலா என மூவரும் தமிழக அரசுக்கு பெரிய தலைவலியாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் என கவலைப்படும் எடப்பாடி, அடிக்கடி அவர்களுடன் மோதவும் தவறுவதில்லை.

Advertisment

தமிழக அரசில் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் செய்யும் ஊழலை தட்டிக்கேட்டுவருவதாகக் காட்டிக்கொள்ளும் கிரிஜாவைத்தியநாதன், அதேசமயத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் நிர்மலா ஆகியோர் சொல்பவற்றை அட்சரம் பிசகாமல் கேட்கிறார். அதற்கு உதாரணமாக இரண்டு சம்பவங்களைச் சொல்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.

திருச்சி, தஞ்சாவூர் சாலையில் வல்லம் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது சாஸ்திரா பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகம் அரசுக்கு சொந்தமான 42.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. அரசின் வருவாய்த்துறையினரோ, "அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள சாஸ்திரா, உடனே அதை காலி செய்ய வேண்டும்' என நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சாஸ்திரா பல்கலைக்கழகம் அரசிடம் ஒரு காம்ப்ரமைஸ் திட்டத்தை முன்வைத்துள்ளது. "பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள 42.5 ஏக்கர் அரசு நிலத்திற்குப் பதிலாக வேறு 42 ஏக்கர் நிலத்தை தருகிறோம்' எனச் சொல்கிறது.

"சங்கரமடத்திற்கு மிக நெருக்கமானவர்களால் நடத்தப்படும் சாஸ்திரா பல்கலைக்கழகத்திற்கு உதவுங்கள்' என காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் கேட்டுக்கொண்டதன்பேரில் ஆடிட்டர் குருமூர்த்தி களத்தில் குதித்ததோடு இதுபற்றி கிரிஜாவிடம் பேசினார். குருமூர்த்தி சொன்னதை வேதவாக்காக எடுத்துக்கொண்ட கிரிஜா, பல்கலைக்கழகம் அமைந்துள்ள வல்லம் தாசில்தாரிடம் தலைமைச் செயலாளர் என்ற அந்தஸ்தைக் கூடப் பார்க்காமல் நேரடியாகவே பேசியுள்ளார். இந்த நிலப் பிரச்சினையில் சாஸ்திரா பல்கலைக்கழகத்திற்கு சாதகமாக நடந்துகொள்ளும்படி தாசில்தாரை அறிவுறுத்தியுள்ளார். கிரிஜாவின் இந்த முயற்சிக்கு வருவாய்த்துறை செயலாளராக இருக்கும் அதுல்யமிஸ்ரா ஐ.ஏ.எஸ். ஒத்துழைத்து அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார். ஆனால் நில நிர்வாகத்துறை கமிஷனராக இருக்கும் ஜெயக்கொடி ஐ.ஏ.எஸ். கிரிஜாவின் முயற்சிகளை எதிர்த்துள்ளார்.

Advertisment

கிரிஜாவும் அதுல்யமிஸ்ராவும் சாஸ்திரா பல்கலைக்கழகத்திற்கு ஆதரவாக எடுக்கும் முயற்சிகளை ஜெயக்கொடி எதிர்த்து கோப்புகளில் குறிப்பு எழுதியுள்ளார். அந்தக் குறிப்புகளை எதிர்த்து சாஸ்திரா பல்கலைக்கழகத்திற்கு ஆதரவாக அதுல்ய மிஸ்ராவால் செயல்பட முடியவில்லை. அதனால் கிரிஜாவும் அதுல்யமிஸ்ராவும் ஜெயக்கொடியிடம் "சாஸ்திரா பல்கலைக்கழகத்திற்கு ஆதரவாக செயல்படுங்கள்' என கேட்டுள்ளனர்.

தஞ்சையில் சிறை கட்டுவதற்காக அரசு ஒதுக்கிய 42.5 ஏக்கர் நிலத்தை சாஸ்திரா ஆக்கிரமித்துள்ளது. இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து தஞ்சை மாவட்ட கலெக்டர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார். (இந்த சாஸ்திரா பல்கலைக்கழக நிலமோசடி, அங்கு நடந்த ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பற்றி 2017, மே-28 நக்கீரன் இதழில் விரிவாக வெளியிட்டுள்ளோம்.)

அதேபோல் "தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன், சேப்பாக்கம் ஸ்டேடியம்' என்கிற அரசுக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்துள்ள ஸ்டேடியத்திற்கு 2081 கோடி ரூபாய் வாடகையாகத் தரவேண்டும். அதனால் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனுக்கு சேப்பாக்கம் ஸ்டேடியத்தை உபயோகப்படுத்துவதற்கான உரிமம் இன்றுவரை புதுப்பிக்கப்படாமல் உள்ளது. நிர்மலா உதவியுடன் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், சேப்பாக்கம் ஸ்டேடியத்தை பெற விரும்பினார். தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் 2081 கோடி ரூபாய் பாக்கியை கொடுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை... அவர்கள் சேப்பாக்கம் ஸ்டேடியத்தை உபயோகிக்கும் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்பது கிரிஜாவின் உத்தரவு. அதையும் ஜெயக்கொடி எதிர்த்துள்ளார். அதனால் ஜெயக்கொடியை மாற்றிவிட்டு, கிரிஜாவின் சமூகத்தைச் சேர்ந்தவரும் கர்நாடக இசையை சபைகளில் பாடுபவருமான டி.கே.இராமச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.ஸை வருவாய் நிர்வாக ஆணையராக கொண்டுவர கிரிஜா, எடப்பாடியிடம் நெருக்கடி கொடுத்து வருகிறார்.

தலைமைச் செயலகத்தை குருமூர்த்தி மற்றும் நிர்மலா சீதாராமன் உதவியுடன் ஒரு "குட்டி அக்ரஹார'மாக மாற்ற முயற்சி செய்கிறார் கிரிஜா. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக கிரிஜாவின் சமூகத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீயை முதல்வர் அலுவலகத்தில் அமர வைத்துள்ளார். பான்பராக், குட்கா ஊழலில் ஆவணங்களை மறைத்தார் என மதுரை கோர்ட்டில் குற்றம்சாட்டப்பட்ட கிரிஜா, அந்த விஷயத்தை விசாரிக்க அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஜெயக்கொடியை ஏற்கனவே அதிலிருந்து மாற்றினார். கவர்னர் புரோகித்தை காப்பாற்ற அவரது சமுதாயத்தைச் சேர்ந்த அம்ரேஷ் பூஜாரியை சி.பி.சி.ஐ.டி.க்கு பொறுப்பு அதிகாரியாக மாற்றியதோடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியான மஞ்சுநாதாவையும் மாற்றியுள்ளார்.

டெல்லி செல்வாக்குள்ள கிரிஜாவுக்கு எதிராக ஜெயக்கொடி துணிச்சலாக செயல்படுவதற்குப் பின்னால் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என்கிறது கோட்டை வட்டாரம்.

இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி கிரிஜா வைத்தியநாதனை தொடர்புகொண்டு கேட்டோம். பதிலளிக்க மறுத்துவிட்டார். சாஸ்திரா பல்கலைக்கழகம், "இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்' என பதில் சொல்லியது. குருமூர்த்தி, இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் ஆகியோர் நமது அழைப்புகளுக்குப் பதிலளிக்கவில்லை. ஜெயக்கொடி, அதுல்யமிஸ்ரா ஆகியோரும் பதிலளிக்கத் தயாராக இல்லை.

தமிழ்நாட்டை மொத்தமாக ஆட்டிப்படைக்கிறது நிர்மலா சீதாராமன் + கிரிஜா வைத்தியநாதன் + ஆடிட்டர் குருமூர்த்தி கூட்டணி.

-தாமோதரன் பிரகாஷ்

படங்கள் : ஸ்டாலின்