கடந்த மே 01-03 இதழில் "நக்கீரன் அம்பலப்படுத்திய பாலியல் கொடுமை! சூத்ரதாரி நிர்மலாதேவிக்கு தண்டனை'!’ என்னும் தலைப்பில், அருப்புக் கோட்டை கல்லூரி மாணவிகள் மீது நடத்தவிருந்த பாலியல் சுரண்டல், முதன்முதலில் எவ்வாறு நக்கீரனால் வெளிச்சத்துக்கு வந்தது என்பது குறித்து விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக, நிர்மலாதேவி வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும், தண்டனை குறித்த விபரங்களையும், இவ்வழக்கு சம்பந்தப் பட்ட சில புலனாய்வுத் தகவல்களையும் இக்கட்டுரையில் தொகுத்து அளித்திருக்கிறோம்.
தீர்ப்பும் தண்டனையும்!
"நிர்மலாதேவி படித்தவர். பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இரண்டு மகள்கள் உள்ளனர். கல்லூரி மாணவிகள் யாரும் நிர்மலாதேவியால் பாதிக்கப்படவில்லை. அரசுத் தரப்பில் பாதிக்கப்பட்டவர்களாகக் காட்டப்பட்டவர்களில் சிலர் தற்போது திருமணம் செய்து நல்ல வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மேற்படிப்பு படிக்கிறார்கள். சிலர் நல்ல வேலைக்குச் சென்றுவிட்டார்கள். எனவே, குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்காமல், தண்டனைக் காலத்தைக் குறைத்து வழங்கவேண்டும்''’என்று தீர்ப்புநாளில் அவருடைய வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன் கேட்டுக்கொண்டபோது, சி.பி.சி.ஐ.டி. தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகரன் “இதுபோன்ற வழக்குகளில் இரக்கம் காட்டக்கூடாது. இந்தியாவை பாதிக்கும் புற்றுநோய் போன்ற இத்தகைய குற்றங்களை நீதிமன்றத் தீர்ப்புகளின் வாயிலாகவே சரிசெய்ய முடியும். பிற மாநிலங்களில் இதுபோன்ற வழக்குகளில், வழக்கின் தன்மையை ஆராய்ந்தும், சமூகப் பிரச்சனையையும், பாதிப்பையும் கருத்தில்கொண்டு உச்சபட்ச தண்டனைகளை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது''’ என்று ஆட்சேபனை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, நீதிபதி பகவதி அம்மாள் அளித்த தீர்ப்பின் 318வது பக்கத்தில் ‘"1வது எதிரிக்கு (நிர்மலாதேவி) வழங்கவிருக்கும் தண்டனையைப் பற்றி பரிசீலனை செய்யும்போது, அவர் ஒரு பேராசிரியை. தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் இதுபோன்று நடந்துகொண்டதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. மாணவிகள் இளைய தலைமுறையினர். அவர்களது வாழ்க்கையுடன் விளையாடுவதை நிச்சயமாக அனுமதிக்க முடியாது. மாணவிகளை இதுபோன்ற விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்துவதால், அவர்களின் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படும் என்பது இரண்டு பெண் குழந்தைகளின் தாயாக இருக்கும் நிர்மலாதேவிக்கு தெரியாமலா இருக்கும்? அவரது பண ஆசை மற்றும் பதவி ஆசைதான் அவரை குற்றச்செயலைச் செய்யவைத்துள்ளது. மாணவிகள், 1வது எதிரியின் நடவடிக்கையை வெளியில் சொல்லாமல் இருந்திருந்தால், பிற மாணவிகளிடம், இதுபோன்று செய்து, அவர்களைத் தன் வலையில் சிக்கவைத்து, இதுபோன்று மாணவிகளின் வாழ்க்கையைச் சீரழிப்பதை, எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே 1வது எதிரிக்கு மேலே குறிப்பிட்ட வாதங்களின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு தண்டனை அளிக்கப்படுகிறது'’ என்று குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளி என்று முடிவுசெய்யப்பட்ட நிர்மலாதேவிக்கு 5 பிரிவுகளின் கீழ் 35 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2,42,000 அபராதமும் விதித்து, சிறைத் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டுள்ளார். இத்தீர்ப்பின் மூலம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவேண்டிய நிலை நிர்மலாதேவிக்கு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவிகள்!
நிர்மலாதேவி விவகாரத்தை விசாரிப்பதற்காக அன்றைய கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் புகாரளித்த 4 மாணவிகள் குறித்த செய்திகளை வெளியிட வேண்டாம்’ என்று அப்போது கேட்டுக்கொண்டது விமர் சனத்துக்கு ஆளானது.
ஏற்கனவே 4 மாணவிகள் நிர்மலாதேவி குறித்து புகாரளித்ததைத் தொடர்ந்து, மேலும் 2 மாணவிகள் அவர் மீது குற்றம்சாட்டினர். அந்த ஆறு மாணவிகளின் பெயரையோ, முகவரியையோ கசியவிடாமல் பார்த்துக்கொண்டனர், சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர்.
தங்களை வலையில் வீழ்த்த நிர்மலாதேவி என்னென்ன செய்தார் என்பதை அறிந்தவர்கள் அந்த மாணவிகள் மட்டுமே. அவர்களைச் சந்தித்தால்தானே, உண்மையை வெளிக்கொண்டு வரமுடியும்? அதேநேரத்தில், மாணவிகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும். இப்படியொரு நெருக்கடியான சூழ்நிலையில், கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல், முகவரிகூட தெரியாமல், அருப்புக்கோட்டை நகரத்தின் மூலை முடுக்குகளில் மாணவிகளைத் தேடி நாள் கணக்கில் அலைந்தது நக்கீரன் டீம். இத்தேடுதலுக்குத் துணை நின்றது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம். யாருமே மேற் கொள்ளாத தொடர் முயற்சியால், சம்பந்தப்பட்ட மாணவிகளையும், பெற்றோரையும் அவர்களின் வீட்டிலேயே சந்தித்தோம்.
இந்த வழக்கில் அன்றைய சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ராஜேஸ்வரியால் வலிந்து திணிக்கப்பட்ட உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் தீர்ப்பின்போது விடுதலை கிடைத்து விடும் என்பதை அப்போதே நம்மால் அறிய முடிந்தது. ஏனென்றால், நாம் சந்தித்த மாணவிகள் அத்தனைபேரும், முருகனையும் கருப்பசாமியையும் எங்களுக்குத் தெரியவே தெரியாது என்று அடித்துச்சொன்னார்கள். மாணவிகளின் இந்த வாக்குமூலத்தை 2018 நவம்பர் 03-06 நக்கீரன் இதழில் "‘சொல்வதெல்லாம் பொய்! மாணவிகள் சாட்சியம்!'’ என்னும் தலைப்பில் அட்டைப்படக் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம்.
ஆறு வருடங்களுக்குமுன் நம்மிடம் அளித்த சாட்சியத்தில் மாணவி ஒருவரது அம்மா “"ஏதாவது ஒண்ணுன்னா தாங்குற சக்தி எங்களுக்கு இல்ல. இப்பக்கூட எனக்கு பயமாத்தான் இருக்கு. அந்த நாலுபேரோட இவளையும் இன்னொருத்தியையும் நிர்மலாதேவி மேடம் சேர்த்துச் சொன்னாங் களாம்''’என்று அச்சத்தை வெளிப் படுத்தியபோது, அவருடைய மகள் "வாட்ஸப்ல என்னோட ஃப்ரண்ட்ஸுக்கு, கவர்னர் பக்கத்துல நிர்மலா மேடம் இருந்த வீடியோவ அனுப்பிருந்தாங்க. என் ஃப்ரண்ட்ஸும் அதைப் பார்த்திருக்காங்க. கவர்னர் பக்கத்துல அவங்க இருந்தத மேடம் கெத்தா சொல்லிருக்காங்க. நிர்மலா மேடம் மார்க்ல கை வச்சிருவாங்கங்கிற பயத்துல கம்ப்ளைண்ட் பண்ணோம். எழுதிக் கொடுக்கச் சொன்னதுனால எழுதிக் கொடுத்தோம்''” என்றார்.
புகார் கொடுத்த மாணவிகள் தங்களது அடையாளத்தை மறைத்து, தேர்வு எழுதுவதற்கு பர்தா அணிந்து சென்றதும் நடந்தது. இன்னொரு மாணவியின் அம்மா "அப்ப நாங்க சாப்பிடாம கொள்ளாம எத்தனைநாள் கஷ்டப்பட்டோம் தெரியுமா? காலேஜுக்கே நீ போக வேணாம். வீட்ல இருன்னு சொன்னோம். மேடம் உங்ககிட்ட தப்புத் தப்பா பேசிருக்காங்க. அதை ஏன் என்கிட்ட சொல்லலைன்னு சத்தம் போட்டேன். டி.வி.ல போட்டதுக் கப்புறம்தான் எனக்கே விஷயம் தெரிஞ்சது. பொம்பள புள்ளைய வீட்ல வச்சிக்கிட்டு பயந்துபோய் கிடக்கோம்''’என்று பதைபதைத்தார்.
மற்றொரு மாணவி, "நான் இப்ப பி.எட். படிக்கிறேன். அந்த வீடியோவுல, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு காரில் வந்து இறங்கிய கவர்னர் ரிப்பன் கட் பண்ணுறாரு. அந்த வீடியோவ நிர்மலா மேடம்தான் ஷூட் பண்ணுறாங்க. செல்போன்ல எடுத்த அந்த வீடியோவுல மேடத்தோட வாய்ஸ் கேட்குது. பக்கத்துல உள்ளவங்ககிட்ட பேசுறாங்க. அந்த வாய்ஸ் நல்லா கேட்குது. அவங்க வீடியோ எடுக்கும்போது யாரோ மறைக்கிறாங்க. அவங்கள தள்ளி நில்லுங்கன்னு இவங்க சொல்லுறாங்க. அது மேடத்தோட வாய்ஸ்தான். அப்புறம், அதே ஃபங்ஷன்ல அவங்க ஸ்பீச் கொடுக்கிற மாதிரி ஒரு வீடியோ அனுப்பிருந்தாங்க. அப்புறம் எங்ககிட்ட கவர்னர் ஃபங்ஷன்ல நான்தான் வீடியோ ஷூட் பண்ணுனேன்னாங்க. ஃபங்ஷன் ஸ்டேஜ்ல அந்தப் பக்கம், இந்தப் பக்கம் மேடம் போனாங்க. எனக்கு மெசேஜ் நிறைய அனுப்புனாங்க. அது புரியலைங்கிறது னாலதான் கால்பண்ணி பேசினோம். அப்ப எங்க நாலு பேர்ல ஒருத்தி, மேடம் பேச்சு ஒரு மாதிரியா இருந்ததும் அழ ஆரம்பிச் சிட்டா. அதுக்கப்புறமும் மெசேஜ் அனுப்பிக்கிட்டே இருந்தாங்க. எதுக்காக இப்படி மாறி, மாறி மெசேஜ் அனுப்புறாங்கன்னு குழப்பமா இருந்துச்சு. அந்த மாதிரி விஷயத்துக்காகத்தான் பேசினாங்கன்னு தெளிவா தெரிஞ்சதுக்கப்புறம்தான் கம்ப்ளைன்ட் பண்ணுனோம். கவர்னர் வீடியோவை நாங்க நாலு பேருமே பார்த்திருக்கோம். சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.ராஜேஸ்வரியும் சந்தானமும் வீடியோவை பார்த்தீங்களான்னு திரும்பத் திரும்பக் கேட்டாங்க. சொன்னோம். எங்க போனை வாங்கி வச்சிக்கிட்டாங்க. இப்ப வரைக்கும் திருப்பிக் கொடுக்கல''’என்றார்.
தொடர் விசாரணையாலும், பயத்தாலும் அப்போது மாணவிகளும் பெற்றோரும் அடைந்த மனவலி கொடுமை யானவை. வெளியிடும் நோக்கம் துளியும் இல்லையென்றாலும், அந்த ஆபரேசனை ரகசிய கேமராவால் பதிவு செய்யத் தவறவில்லை. 2018ல் மாணவிகளின் சாட்சியத்தை, பெயர் குறிப்பிடாமல் விரிவாக நக்கீரனில் வெளியிட்டிருந்தோம்.
நீதிமன்றத்தில் அரசு ஆவணமாக நக்கீரன் இதழ்!
நிர்மலாதேவிக்கு தண்டனை அறிவித்த நாளில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகரனிடம் செய்தியாளர்கள் "யாருக்காக இந்தக் குற்றத்தில் நிர்மலாதேவி ஈடுபட்டார்? அப்போது ஹையர் அஃபிசியல், வி.வி.ஐ.பி. என்று கவர்னர் மாளிகைவரை பேசப்பட்டதே?''’என்று கேள்வி எழுப்பியபோது... "நக்கீரன் இதழில் இதுசம்பந்தமாக பிரசுரமாகியிருந்தது. அந்த நக்கீரன் இதழை ஆவணப்படுத்தினோம். ஒளிவுமறைவு இல்லாமல் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. நடத்தவேண்டும் என்பதால், வழக்கில் எல்லா சாட்சிகளும் என்ன சொன்னார்களோ, அவருக்கு சாதகமான சாட்சியங்களையும்கூட பதிவு செய்திருக்கிறோம். பத்திரிக்கைச் செய்தி நீதிமன்றத்தின் முன்னால் ஒரு பொருள் ஆவணமாக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. ஆனால்.. நக்கீரன் வார இதழும்கூட அரசுத் தரப்பு ஆவணமாகத் தாக்கல் செய்யப்பட்டு, குறியீடு செய்யப்பட்டிருக்கிறது''’என்றார்.
விசாரணையில் நேர்மையில்லை!
விடுதலை செய்யப்பட்ட உதவி பேராசிரியர் முருகன் நம்மிடம், "என்னுடைய இரண்டு மொபைல் போன்களையும் சி.பி.சி.ஐ.டி.காரங்க கேட்டதும் அப்படியே கொடுத்துட்டேன். சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ராஜேஸ்வரியிடம் எனக்கும் நிர்மலாதேவிக்கும் அந்தமாதிரி எந்தத் தொடர்பும் இல்லைன்னு திரும்பத் திரும்பச் சொன்னேன். உண்மையிலேயே யாருக்காக மாணவிகள்கிட்ட அந்தமாதிரி பேசினார்னு நிர்மலாதேவிகிட்ட கேளுங்கன்னு சொன்னேன். எனக்கு எதிரா எந்த ஆதாரமும் இல்லைங்கிறது ராஜேஸ்வரி எஸ்.பி.க்கு நல்லாவே தெரியும். ஆனாலும், இந்த வழக்குல வேணும்னே என்னைச் சிக்கவச்சிட்டாங்க. அப்ப என்கிட்ட ராஜேஸ்வரி என்ன சொன்னாங்கன்னா... "நீ என்ன புலம்புனாலும், நான் காதுல வாங்கமாட்டேன். கோர்ட்ல போயி நீ நிரபராதின்னு நிரூபிச்சிக்கோ'ன்னு ஒரேயடியா சாதிச்சிட்டாங்க. 11 மாசம் ஜெயில்ல இருந்துட்டு பெயில்ல வெளிய வந்ததுக்கு அப்புறம், எனக்கு எப்பல்லாம் கோபம் வருதோ, அப்பல்லாம் ராஜேஸ்வரி மேடத்துக்கு போன் போட்டுத் திட்டுவேன். என் வாழ்க்கைய நாசமாக்கிட்டீங்கன்னு கத்துவேன். இப்ப கோர்ட்டே, எனக்கெதிரா எந்த சாட்சியமும் இல்லைன்னு ரிலீஸ் பண்ணிருச்சு. உண்மையிலேயே தப்பு பண்ணுனது யார், யாரு? யாருக்காக நிர்மலாதேவி மாணவிகள்கிட்ட பேசினாங்க? அதைக் கண்டுபிடிக்கணும்கிற சிந்தனையோ, செயல்பாடோ சி.பி.சி.ஐ.டி.க்கு இல்லவே இல்ல. ராஜேஸ்வரியால என்னோட ஆறு வருஷ வாழ்க்கை நரகமாயிருச்சு''’ என்றார் பரிதாபமாக.
நிர்மலாதேவி வெறும் அம்புதான்!
அரசு சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகரன், சி.பி.சி.ஐ.டி. போலீசார் அடித்தெல்லாம் விசாரிக்கமாட் டாங்க. குற்றவாளிகளோ, சாட்சி களோ சொல்வதை அப்படியே பதிவு பண்ணிருவாங்க. முருகனும் கருப்பசாமியும் நிரபராதியில்ல. அரசுத் தரப்பிலே இருந்து குற்ற வாளிகளுக்கு எதிரா கொண்டு வரப்பட்ட சாட்சிகள் பிறழ் சாட்சிகளாயிட்டாங்க. இந்தம்மா அம்புதான். அதுல ஒரு மாற்றமும் இல்ல. எய்தவர்கள் அவர்கள்தான். மேல்முறையீடு செய்வது துறையைச் சார்ந்தது''’என்றார்.
"முக்கிய புள்ளி யார்?''
இரா.முத்தரசன் -இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறாக வழி நடத்தியதற்காக நீதிமன்றம் தண்டனை விதித்ததை வரவேற்கிறோம். அதேநேரம், அவர் யாருக்காக மாணவிகளை தவறாக வழிநடத்தினார், யார் சுகம் காண்பதற்காக மாணவியரை வழிநடத்தினார் என்ப தையும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. அந்த முக்கியப் புள்ளி குறித்த விபரத்தை வெளிப்படுத்த வேண்டும்'' என கூறினார்.
எய்தவர்கள் யார் யார்?
மதுரை காமராஜர் பல்கலை வட்டாரத்தில் "ஏ' கிரேடு மற்றும் தன்னாட்சி அந்தஸ்து கிடைப்பதற்காக தனியார் கல்லூரிகள் பலவும் மெனக்கெடும். விளம்பரமே செய்யாமல், நேர்காணலே நடத்தாமல், விதிமீறலாக காலிப் பணியிடங்களை நிரப்பும்போது தனியார் கல்லூரிகள் (மைனாரிட்டி) பலவும் கோடிகளில் கல்லா கட்டும். பேராசிரியர்களின் கல்வித் தகுதிக்கான ஒப்புதலை பல்கலைக்கழகம் தரவேண்டும். பணி நியமன ஒப்புதலை தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்ககம் தரும். பல்கலைக்கழகக் கல்வியினை ஒருங்கிணைத்து, மேற்பார்வையிட்டு தரக்கட்டுப்பாடு செய்வதற்கு பல்கலைக் கழக மானியக்குழு எனப்படும் யு.ஜி.சி. என்ற அமைப்பு உண்டு. தேசிய அங்கீகார மற்றும் மதிப்பீட்டுக் குழு எனப்படும் நாக் கமிட்டியானது, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆய்வு நடத்தி தகுதிச் சான்றிதழைத் தரும். பல்கலைக்கழகத் துணைவேந்தர் போன்ற பதவி பேரங்களுக்காக ராஜ்பவன் வரையிலும் சகலமும் நடக்கும். பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாநில கவர்னர் இருப்பார்.
இவை அனைத்திலும் கோலோச்சும் அதிகார வர்க்கத்தினரில் 75 சதவீதம் பேர் நேர்மையானவர்கள். மீதி 25 சதவீதத்தினரின் எல்லாத் தேவைகளும் ஒவ்வொரு மட்டத்திலிருந்தும் நிறைவேற்றப்படும். இங்கே பணம் கொடுப்பதும் பெறுவதும் சாதாரண விஷயம். இதைத்தாண்டி, சப்ளை & சர்வீஸ் நடப்பதுதான் கொடுமையானது. நிர்மலாதேவி போன்றவர்களை இந்தமாதிரி காரியங் களுக்குப் பயன்படுத்துகிறார்கள். ஒருகட்டத்தில் ‘இளசுதான் வேண்டும்’ என்று வற்புறுத்தும்போது, மாணவிகளுக்கு வலை வீசுகிறார்கள். ஒரு நிர்மலாதேவி தான் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.
ஒரே நேரத்தில் 6 மாணவிகளை நிர்மலாதேவி பாலியல் தொழிலுக்கு இழுக்கப் பார்த்திருக்கிறார் என்றால், இதன் பின்னணியில் சதைப்பசி கொண்ட மனித மிருகங்கள் எத்தனை இருந்திருக்கும்? நிர்மலாதேவியிடம் தனிப்பட்ட முறையில் தொடர்பு வைத்திருந்தவர்களை மேலோட்டமாக விசாரித்துவிட்டு, இவ்வழக்கின் உண்மைக் குற்றவாளிகளின் பக்கமே போகாமல், அன்றைய ஆட்சியாளர்களின் கட்டளையை நிறைவேற்றியிருக்கிறார், அப்போது சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.யாக இருந்த ராஜேஸ்வரி''’என்று குமுறலாகச் சொன்னார்கள்.
தீர்ப்பில் எந்தவொரு இடத்திலும் கவர்னர் பெயரே இல்லை. ஆறு வருடங்களாக வழக்கு, விசாரணை என்ற பெயரில் ‘நாடகம்’ நடந்திருக்கிறது.
_______________________________
"மறு விசாரணை நடத்தவேண்டும்!'' -நிர்மலாதேவி வழக்கறிஞர்
"ஒவ்வொரு நாளையும் உயிர் பயத்துடன் கழித்து வந்ததாலோ என்னவோ, பத்தாண்டுகள் தண்டனை பெறும் அளவுக்கு வழக்கு வளையம் இறுக்கியும், ஹையர் அஃபிசியல் யாரையும் நிர்மலாதேவி காட்டிக்கொடுக்கவில்லை. பல ரகசியங்களை உள்ளுக்குள் புதைத்துவிட்டார். நாங்கள் எவ்வளவோ கேட்டும் வாய் திறக்கவில்லை''’என்றார், அவருக்காக வாதாடிய அந்த முன்னாள் வழக்கறிஞர். நிர்மலாதேவிக்கு விடுதலை பெற்றுத் தரமுடியும்’ என்ற நம்பிக்கையுடன், தீர்ப்பின் இறுதி நிமிடம்வரை போராடிய வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன் நம்மிடம், "உலகத்துக்கு உண்மையை உரைப்பதற்கு சி.பி.சி.ஐ.டி. மட்டுமல்ல, நீதிமன்றமும் தவறிவிட்டது. நல்ல தீர்ப்பு என்றால், முருகன், கருப்பசாமியோடு, நிர்மலாதேவியையும் விடுதலை செய்துவிட்டு, உண்மைக் குற்றவாளிகளை நீதிமன்றத்தின்முன் நிறுத்த, மறுவிசாரணை நடத்தும்படி சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டிருக்கவேண்டும். வழக்கறி ஞராக நான் பார்த்தவரையில், நிர்மலாதேவி ஒரு பாவப்பட்ட ஜென்மம். பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. நிர்மலாதேவி சம்பந்தப்பட்ட நீண்ட எல்லைக்குள் போகாமல், மதுரை வரையில் போதும் என்ற குறுகிய எல்லைக்குள் சி.பி.சி.ஐ.டி. விசாரணை முடிந்துவிட்டது. மொத்தத்தில் ஏமாளி நிர்மலாதேவியை பலிகடா ஆக்கிவிட்டார்கள்''’என்று உணர்ச்சிவசப்பட்டார்.
___________________
"கவர்னரை ஏன் விசாரிக்கவில்லை?''’ -வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன்
வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், "நிர்மலாதேவிக்கு ஜாமின் எடுத்த வழக்கறிஞர் என்ற அடிப்படையில் நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், நிர்மலாதேவியை முழுமையாக விசாரிக்காமல், அ.தி.மு.க. ஆட்சியில் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுப்படி, அன்றைக்கு இருந்த கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தப்பிப்பதற்காக, சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ராஜேஸ்வரி நடத்தியது கண்துடைப்பு விசாரணை. மேடையில் கவர்னரும் நிர்மலாதேவியும் இருந்த வீடியோ எரித்து அழிக்கப்பட்டது. மாணவியின் செல்போனிலிருந்த கவர்னர் சம்பந்தப்பட்ட வீடியோவை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டெலிட் பண்ணிருச்சு. சம்பிரதாய அளவில்கூட கவர்னர் விசாரிக்கப்படவில்லை. காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தரோ, அதிமுக அமைச்சர்களோ விசாரிக்கப்படவில்லை. வழக்கு நிர்மலாதேவியோடு முடியவில்லை. மாணவிகளை அழைத்த கருவி நிர்மலாதேவி என்றால், கருவியை இயக்கிய குற்றவாளி யார்? நீதியரசர் வெங்கடேசன் போன்றவர்கள் இந்த வழக்கைக் கையில் எடுத்து, மறு புலன்விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்''’என்று சந்தேகங்களை அடுக்கினார்.