(39) தமிழச் சாதியை என்செய நினைத்தாய்?

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்துபோனது. உலகம் முழுதும் உள்ள தமிழர்கள் அந்தநாளில் விளக்கேற்றி, மறைந்த தமிழர்களிடம் தங்களுக்குள்ள போற்றுதலை வெளிப்படுத்தி நின்றனர்.

நான்காம் ஈழப்போரின் கடைசிக் களம் அது. அப்போரில் களத்தில் நின்ற விடுதலைப்புலி இயக்கத்தின் வீரர்கள் கொல்லப்பட்டார்கள். அதன் தலைவர், வரலாறு காணாத வெங்களச் சிங்கம் பிரபாகரன் மாவீரன் ஆனார்.

ஆனால் அங்கு வாழ்ந்த பல்லாயிரம் தமிழர்கள், அப்பாவிகள், ஆண் பெண், சிறார், முதியோர் என்னும் வேறுபாடின்றி அட்டூழியமாகக் கொல்லப்பட்டனர். போருக்குத் தொடர்பில்லாத கயமைச் செயல் இது.

Advertisment

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை பணிய வைப்பதற்காக, அமெரிக்க நாடு, இரோசிமா, நாகசாகி என்னும் ஊர்களின் மீது காட்டுமிராண்டித்தனமாக அணுகுண்டுகளை வீசி, பல்லாயிரம் மக்களைக் கொன்றதற்கு அடுத்ததாக, அணுகுண்டு வீசவில்லையே ஒழிய மற்றபடி முள்ளிவாய்க்காலில் அப்பாவித் தமிழ்மக்களை எல்லாம் கொன்றழித்துப் போரை ஒரு முடிவுக்கு கொண்டுவந்தார்கள்.

இவ்வளவு அட்டூழியங்களையும் சிங்கள இராணுவம் இராசபக்சே என்னும் கசாப்புக்கடைக்காரனின் தலைமையில் செய்து முடித்தது. கொடுமையிலெல்லாம் கொடுமை இதற்கு இந்திய அரசு பக்கபலமாக நின்று, எல்லா வகையாலும் சிங்களவர்களுக்கு உதவியதுதான்.

இந்தியா இந்த வஞ்சகத்திற்குத் துணை போயிருக்காவிட்டால், ஈழம் அழிந்திருக்காது.

Advertisment

இரண்டு பங்கு சிங்களவர்கள், ஒரு பங்கு தமிழர்கள்... இதுதான் இலங்கை.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை இந்துக்களின் நாடு என்று சொல்வதற்கு இங்கே ஒரு கூட்டம் இருப்பதுபோல், இலங்கையைச் சிங்களவர்களின் நாடு என்று கருதுகின்றவர்களாக சிங்களவர்கள் இருக்கின்றனர்.

அவர்கள் அப்படி நினைத்தாலும் எப்படி நினைத்தாலும் தமிழர்களை வெல்லும் திறன் சிங்களவர்க்கு இருக்கவில்லை.

முப்பதாண்டு காலம் ஈழம் விடுதலை பெற்ற நாடாக அறிவிக்கப்படவில்லையே ஒழிய, விடுதலைப்புலிகள் தங்கள் போக்கில் அங்கு ஆட்சி நடத்திக்கொண்டுதான் இருந்தனர்.

அவர்கள் தனி நீதிமன்றம், தனி காவல்துறை, தனி ஆட்சி நிர்வாகம், தனி வரி வசூல்கள் என்று அரசே நடத்தினர். பிரபாகரன் எதையும் வெற்றிகரமாகவே நடத்தினார்.

ஒரு தனி மனிதனாகச் சிங்களக் காடையர்களுக்கு எதிராக வீறுகொண்டு எழுந்து, மெல்ல மெல்ல இளைஞர்களை ஈர்த்து, ஒரு பெருங்கூட்டமாகித் தானும் போர்ப் பயிற்சி பெற்று, தன் இயக்கத்தினரையும் போர்ப்பயிற்சி பெறச் செய்து, ஈழத்தை அறிவிக்கப்படாத விடுதலைநாடாக ஆக்குவது என்பது நினைத்துப் பார்க்கக்கூடிய எளிய செயலா?

உலகத் தமிழினமும் -குறிப்பாக தமிழ்நாடும் பிரபாகரனுக்கு இசைவாக வரிந்து கட்டிக்கொண்டு நின்றன.

தமிழர்களுக்கு ஒரு தனிநாடு வாய்ப்பதை எண்ணி தமிழ்நாட்டுத் தமிழர்கள் இறும்பூதெய்தினர்.

ஈழப்போருக்கும் ஈழத்தமிழர்களுக்கும் தேவையான அனைத்துப் பொருள்களும் தமிழ்நாட்டின் வேதாரணியம், கோடிக்கரை போன்ற கடற்கரை ஊர்களின் வழியாக ஈழம் சென்றடைந்தன.

தமிழ்நாட்டு அரசுகள் எதையும் கண்டுகொள்ளாமல், எல்லாவற்றிற்கும் துணையாக நின்றன.

p

இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் வீறுகொண்டு எழுந்து, ஆசியாவின் பேராற்றலாக விளங்கியபோது, அது அமெரிக்காவின் முத்துத் துறைமுகத்தில் (டங்ஹழ்ப் ஐஹழ்க்ஷர்ன்ழ்) தேவையில்லாமல் குண்டு வீசி, அமெரிக்காவைப் போருக்கு இழுத்துவிட்டதுபோல இந்திய நாட்டின் தலைமையமைச்சராக விளங்கிய இராசீவ்காந்தியைக் கொன்று, இந்திய அரசை நேரடியாக பகைமையாக்கிக்கொண்டது ஈழ விடுதலைப் போருக்கு மிகப்பெரிய பின்னடைவாக ஆகிவிட்டது.

என்ன செய்வது? இந்திய அயல் விவகாரத்துறையில் கடைந்தெடுத்த முட்டாள்கள் தலைமைப் பொறுப்பில் இருந்தனர். அன்றும் அப்படித்தான்; இன்றும் அப்படித்தான்.

உரிமைகள் பறிக்கப்பட்ட இனத்திற்குப் பரிவு கொள்வதை விட்டுவிட்டு, உரிமைப் பறிப்புச் செய்த காடையர்களுடன் கைகோத்துக்கொண்டு, அதற்கான எந்தக் கட்டாயமும் இந்தியாவுக்கு இல்லாத நிலையிலும், இராணுவ உதவிகள் அனைத்தும் செய்து, சிங்களப் படைகளைப் பின்னால் இருந்து இயக்கி, ஈழத்தமிழினம் அழிவதற்குக் காரணமானது காங்கிரசு ஆட்சி.

இவற்றையெல்லாம் எப்போது நினைத்தாலும் நினைத்த நெஞ்சைச் சுடுகிறது.

ஆலமரமாக விழுதுகள் விட்டுப் பரந்து விரிந்திருந்த காங்கிரசுக் கட்சி, தமிழ்நாட்டை 1937-ல் இருந்து 1967 வரை ஆண்ட காங்கிரசுக் கட்சி, இன்று யாருடைய நிழலிலாவது ஒண்டி, ஓரமாக வாழவேண்டிய இரங்கத்தக்க நிலை ஏற்பட்டதற்கு, அது விதைத்த வினைகள்தாமே காரணம்.

குருக்களைக் கடித்த நாய் நரகத்திற்குப் போவது இருக்கட்டும்; குருக்கள் படுகிற பாடு கொஞ்சமா?

இலங்கையில் வாழ முடியாமல் ஓடிய தமிழர்கள் உலகம் முழுதும் விரவிக் கிடக்கிறார்கள். ஐரோப்பாவிலும், கனடாவிலும் இன்ன பிற நாடுகளிலும் தங்கிவிட்ட ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் உகுக்கின்ற கண்ணீரும், விடுகின்ற பெருமூச்சும் தொடர்புடையவர்களை எல்லாம் சுடாமலா போகும்?

ஒருகட்டத்தில் பாக்கிஸ்தானில் வாழ்ந்த வங்காளிகள் உரிமை பறிக்கப்பட்டு, இராணுவ ஏவலுக்கு உள்ளான நிலையில், இலட்சக்கணக்கான வங்காளிகள் வேறு போக்கற்று, அண்டை நாடான இந்தியாவைத் தஞ்சமடைந்தனர்.

இந்திராகாந்தி ஊக்கமும், துணிவும் மிக்கவர். விரைந்து செயல்பட்டார். வங்காளிகள் மீது கொண்ட பரிவு என்பதை விட, இடையறாமல் தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கிற பாக்கிஸ்தானை இரண்டாகப் பிளந்து, அதில் ஒன்றை ஒரு புதிய நாடாக உருவாக்கி, அதைத் தோழமை நாடாக வைத்துக்கொள்ள எண்ணினார். எண்ணியவாறு செயல்பட்டார். வங்கதேசம் உருவானது. பாக்கிஸ்தான் பாதியாக உருக்குலைந்தது.

அதே அடிப்படைதான். 1983-ல் சிங்களவர்களின் கொடுமை பொறுக்க முடியாமல், பெருங்கூட்டமாக ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டை தஞ்சமடைந்தார்கள்.

இங்கே இந்தியாவில் ஏழுகோடி தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உணர்வுபூர்வமாக ஈழத்தோடு இணைந்து நிற்பவர்கள்.

அதைச் செய்து கொடுத்திருந்தால், ஈழத்திலே கொண்டுபோய் தோழமையோடு நம்முடைய கப்பற்படையைக் கூட நிறுத்திக்கொள்ளலாம்.

தமிழ்நாடு, காங்கிரசின் அசைக்க முடியாத கோட்டையாக மாறியிருக்கும். திராவிட இயக்கங்களுக்கான தேவையைக் காங்கிரசே நிறைவு செய்து விடுவதால், அவற்றிற்கான தேவை அற்றுப் போய், இன்னும் முப்பதாண்டுகளுக்கு தமிழ்நாட்டைக் காங்கிரஸ் ஆளும் நிலை தோன்றியிருக்கும்.

அதற்கு மாறாக, ஈழத்தை அழித்துச் சிங்களவர்களின் கையில் காங்கிரசு அதிகாரச் சவுக்கைக் கொடுத்ததின் விளைவு, கசாப்புக் கடைக்காரன் இராசபக்சே இந்தியாவுக்கு எதிரான சீனாவுடன் நட்புப் பூண்டு அம்பன்தோட்டாவில் சீனக் கப்பற்படையை நிறுத்திக் கொள்ளும் உரிமையை அளித்தார்.

தமிழ்நாட்டுக்குள் எந்த எதிரியும் எளிதில் நுழைய முடியாது. அது முப்புறமும் கடலால் சூழப்பட்ட இயற்கை அரணைப் பெற்றிருக்கின்ற நாடு.

இந்தியாவுக்குள் நுழைந்த முகலாயர்கள், கிரேக்கர்கள் என்று பலவகையினரும், வடக்கேதான் நுழைந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் முற்றிலும் அயலார்கள்.

தமிழ்நாட்டின் மீது படையெடுத்து வந்த களப்பிரர்கள், தெலுங்கர்கள், மராத்தியர்கள், நவாபுகள் யாருமே கடல் வழியாக வந்தவர்களில்லை. நம்முடைய பக்கத்து மண்ணைச் சேர்ந்தவர்கள்.

இப்போது இலங்கை யாழ் பகுதியில் அம்பன்தோட்டாவில் நிறுத்தப்பட்டுள்ள சீனக் கடற்படை ஓர் உராய்வு இந்தியாவோடு ஏற்படுமானால், தமிழ்நாட்டின் கூடங்குளம்தான் அதற்கு முதல் இரையாகும். விளைவு தென்மாவட்டங்கள் சுடுகாடாகும். சீனா என்ன இந்தியாவுக்கு உறவுநாடா?

அல்லது மோடி பொழுது போகாத போதெல்லாம், பாக்கிஸ்தானை மிரட்டுவதுபோல, சீனாவை மிரட்ட முடியுமா?

உரிமை பறிக்கப்பட்ட ஈழ மக்களுக்கு எதிராக, உரிமையைப் பறித்த சிங்கள அற்பர்களுக்கு உதவப் போன இந்தியாவுக்கு இலங்கை செய்த கைம்மாறு எத்தகையது என்று பார்த்தீர்களா?

இந்திய அயல் விவகாரத்துறை செயல்படும் விதம் உங்களுக்குப் புரியவில்லையா? அந்தத் துறையில் இருப்பவர்கள் அறிவுக் கொழுந்துகள் என்பது புலப்படவில்லையா?

விதியே விதியே

தமிழச் சாதியை என்செய நினைத்தாய்?

(தொடரும்)