முன்பெல்லாம் நமது செல்போனுக்கோ, தொலைபேசிக்கோ அழைத்து துல்லியமான வடஇந்திய சாயலுடனான தமிழில், "உங்க ஏ.டி.எம். கார்டுமேல இருக்கும் பதினாறு நம்பர் சொல்லுங்கோ' என ஆரம்பிப்பார்கள். இதற்கே ஆயிரக்கணக்கான பேர் ஏமாந்தபோதும், பலரும் சுதாரித்துக்கொண்டு இவர்களிடமிருந்து நழுவிவிடுவோம்.
தற்போதை சைபர் க்ரைம் குற்றவாளிகள் ரொம்பவே முன்னேறிவிட்டார்கள். அவர்கள் ஆர்.பி.ஐ., சி.பி.ஐ., அமலாக்கத்துறை, போதை ஒழிப்புத் துறை அலுவலர்கள் எனக் கூறிக்கொண்டு நுனிநாக்கு ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். உங்களது ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு முடக்கப்பட்டது என்றோ, உங்கள் பெயரில் அனுப்பிய பார்சலில் போதைப் பொருட்கள் பிடிபட்டிருக்கின்றன என்றோ, மிகப்பெரிய பண மோசடியில் உங்கள் செல்போன் எண், ஆதார் கார்டு எண்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. நீதிமன்றம் உங்களுக்கு அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்திருக்கிறது என்றோ, துளியும் சந்தேகம் வராத அளவுக்குப் பேச்சைத் தொடங்குகின்றனர்.
இந்தியாவின் மாபெரும் வியாபாரிகள்கூட இந்த மோசடிக்குப் பலியாகி கோடிக்கணக்கில் ஏமாறும் போது சாமானியர்களைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. இந்தியாவில் கடந்த வருடம் நாளொன்றுக்கு 2,264 பேர் சைபர் மோசடியாளர்களிடம் ஏமாந்துபோனதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஒவ்வொரு 20 நொடிக்கும் இந்தியாவில் ஒருவர், சைபர் குற்றவாளிகளிடம் ஏமாந்துபோவதாக மற்றொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
பெரும்பாலும் செல்போனைக் குறிவைத்து வரும் அழைப்புகள் மூலமே இந்த மோசடிகள் நடந்தாலும், சமயங்களில் எஸ்.எம்.எஸ். மின்னஞ்சலையும் பயன்படுத்தத் தவறுவதில்லை. காவல்துறைக்கு வந்த புகார்களின்படி, இன்னும் முடிவுக்கு வராத 2024-ஆம் வருடத்தில் இத்தகைய சைபர் மோசடியாளர்களிடம் 177 கோடி ரூபாயை இந்தியர்கள் ஏமாந்திருக் கிறார்களாம். காவல்துறைக்குச் செல்ல தயங்கிக்கொண்டும், வெட்கப்பட்டுக் கொண்டும் இருப்பவர்கள் இழந்த தொகையும் சேர்த்தால் இது எத்தனை கோடியாகுமோ?
இந்தியாவின் டெக்ஸ்டைல் வணிகத்தில் கொடிகட்டிப் பறக்கும் வர்த்த மானன் குழுமத்தைச் சேர்ந்த எஸ்.பி. ஓஸ்வால், சைபர் மோசடியாளர்களிடம் கடந்த மாதம் 7 கோடி ரூபாய் அளவில் ஏமாந்திருக் கிறார். வணிகர் என்றால் விவரமாக இருப்பார்களே, அவர் எப்படி ஏமாந்தார் என்கிறீர்களா?
எஸ்.பி. ஓஸ்வாலுக்கு சி.பி.ஐ. அதிகாரி எனச் சொல்லிக்கொண்ட ஒருவரிடமிருந்து அழைப்புவந்திருக்கிறது. உங்களுடைய ஆதார் கார்டு, போலி பாஸ்போர்ட், பொருளாதார மோசடிக் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என தோரணையான ஆங்கிலத்தில் ஒருவர் பேசியிருக்கிறார்.
மும்பையைச் சேர்ந்த சி.பி.ஐ. அதிகாரி என தன்னை அறிமுகம் செய்து கொண்டி ருக்கிறார் அழைத்தவர். வீடியோ கால் அழைப்பில் வந்த அந்த அதிகாரிக்குப் பின்னால் சி.பி.ஐ. அலுவலக முத்திரை காணப்பட்டிருக்கிறது. எப்படி இந்தக் குற்றத் தில் ஓஸ்வால் சம்பந்தப்பட்டிருக்கிறார் என விவரித்த அந்த அதிகாரி, பின்பு உச்சநீதி மன்றத்தில் விசாரணை நடக்கும் குரல் பதிவுகளையும், வழக்கறிஞர் ஒருவர் ஓஸ்வா லின் பெயரைக் குறிப்பிட்டு, இதில் ஓஸ்வாலுக்கு தொடர்பிருப்பதால் தக்க தண்டனை தரவேண்டுமென வாதிடுவதையும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான சந்திரசூட் கைது ஆணை பிறப்பிப்பதையும் குரல் பதிவாக அனுப்பியிருக்கிறார்.
தொடர்ந்து, உச்சநீதிமன்ற முத்திரையுடனான கைது ஆணையையும் வாட்ஸ் அப்பில் ஓஸ்வாலுக்கு அனுப்பியிருக்கின்றார். வர்த்தமானன் குரூப்பின் தலைமைச் செயல் அலுவலரான ஓஸ்வால், அடுக்கடுக்கான விவரங்களைப் பார்த்து பயந்துபோயிருக் கிறார்.
ஓஸ்வால் திகிலில் இருப் பதை உறுதிசெய்துகொண்ட அந்த அதிகாரி, ஓஸ்வாலை கைதுசெய்வதிலிருந்து தன்னால் தப்பிக்கவைக்க முடியுமென வும் அதற்குக் கொஞ்சம் செலவாகுமெனவும் வலை விரித்திருக்கிறார். அந்த மும்பை சி.பி.ஐ. அதிகாரி கேட்டுக்கொண்டதுபோல் பல்வேறு வங்கிக் கிளைகளுக்கு 7 கோடி அனுப்பியிருக்கிறார் ஓஸ்வால்.
பின்பு தன் அலுவலகத்திலுள்ள மூத்த மேனேஜர் ஒருவரிடம் இதுகுறித்துப் பேசிய பின்பே, சைபர் கிரிமினல்கள் தன்னை ஏமாற்றியதை அறியவந்திருக்கிறார் ஓஸ்வால். காவல்துறையில் புகார் செய்து முதல் தகவல் அறிக்கை பெறப்பட்ட நிலையில், அஸ்ஸாமைச் சேர்ந்த அட்டானு சௌத்ரி, ஆனந்த்குமார் சௌத்ரி என்ற இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், காவல்துறை இந்த மோசடியாளர்களிட மிருந்து 5.25 கோடியையும் மீட்டுத் தந்திருக்கிறது. இதில் தொடர்புடைய இன்னும் 7 பேரைக் கைதுசெய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்துவருகின்றன. இந்தக் குழுவினர் மேற்குவங்காளம், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இப்படி சைபர் குற்றவாளிகளிடம் ஏமாறும் இரண்டாவது தொழிலதிபர் எஸ்.பி. ஓஸ்வால். இதற்கு முன்பு மற்றொரு தொழிலதிபதிரான ரஜ்னீஷ் அவுஜாவை, அவரது வங்கிக் கணக்கில், குற்றச்செயலில் தொடர்புடைய பிணையத் தொகை வரவு வைக்கப்பட்டு எடுக்கப்பட்டிருக்கிறது என்றுகூறி, இந்த விவகாரம் பொதுவெளியில் வராமலிருக்கவும், அவரைக் கைது செய்யாமல் இருக்கவும், அவரிடமிருந்து 1 கோடியே 10 லட்ச ரூபாயை சைபர் குற்றவாளிகள் பறித்திருக்கின்றனர்.
தொழிலதிபர்களைத் தாண்டி மலையாள நடிகை மாலா பார்வதியிடம், அவரது செல்போன் எண்ணையும், ஆதார் கார்டு நகலையும் கொடுத்து, போதைப் பொருள் பார்சல் தைவானுக்கு அனுப்பப்பட்டதை பிடித்திருக் கிறோம் எனக் கூறி மும்பை போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் பேசியிருக்கிறார். நடிகை மாலா பார்வதி, இதுதொடர் பாக சில கேரள போலீசாரைத் தொடர்புகொண்டதால் ஏமா றாமல் தப்பியிருக்கிறார்.