லங்கார கிரீடம் முள்கிரீடமாக மாறிய கதை இது. ராஜபார்ட் கெட்டப்பில் பள்ளியை ஆய்வுசெய்த பள்ளிக்கல்வி அதிகாரி, மேலதிகாரிகளின் விசாரணை, நடவடிக்கைகளை வேதனையோடு சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

தென்காசி மாவட்டக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வு பெற்று வந்திருப்பவர் சுடலை. ஆரம்பத்தில் கல்வி அதிகாரியாகப் பணிபுரிந்த சுடலை, கடந்த 2019-ஆம் ஆண்டு மாவட்டக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வு பெற்று சேரன்மகாதேவி மற்றும் திருநெல்வேலி கல்வி மாவட்டங்களில் பணிபுரிந்திருக்கிறார். அதன்பின் பணி மாறுதலாகி 2 மாதம் முன்பு தென்காசி மாவட்டக் கல்வி அலுவலராகப் பொறுப்பேற்றார். கல்வி மாவட்டத்தின் சுமார் 150-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அதிகாரி சுடலையின் ஆய்வுக்கு உட்பட்டவை.

dd

Advertisment

இந்நிலையில் மாவட்டக் கல்வி அதிகாரி சுடலை பணிமாறுதலாகி வந்த பின்பு, முதன்முதலாக கடந்த 14-ஆம் தேதி கடையம் நகரிலுள்ள அரசு உதவிபெறும் சத்திரம் பாரதி மகளிர் தனியார் உயர் நிலைப்பள்ளி ஆய்வுக்குச் சென்றுள்ளார். பொறுப்பேற்ற மாவட்டக் கல்வி அதிகாரி முதன்முதலாகத் தங்கள் பள்ளிக்கு ஆய்வின் பொருட்டு வருவதால், அவரைச் சிறப்பாக வரவேற்க எண்ணிய நிர்வாகத்தின் பொறுப்பாளரான மணி, பள்ளியின் ஆசிரியர்கள் சகிதம் அதிகாரி சுடலைக்கு மாலையும் சால்வையும் அணிவித்தார். மன்னர் ரேஞ்சுக்குப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மலர்க் கிரீடத்தையும் அவரது தலையில் அணிவித்து ஏறத்தாழ ராஜாவைப் போன்று வரவேற்பு அளித்துள்ளனர்.

பள்ளி நிர்வாகம் குளிரக் குளிர வரவேற்பளித்ததை ஏற்றுக்கொண்டவர், அணிந்த மறுகணமே மாலை இத்யாதிகளை அகற்றியிருக்க வேண்டும். ஆனால் ராஜ அம்ச வரவேற்போடு போர்த்திய சால்வையுடன் மாவட்டக் கல்வி அதிகாரி ஆய்வு செய்ததுடன் ஆய்வுப் பதிவேட்டில் கையெழுத்தும் இட்டிருக்கிறார். அந்த கெட்டப் நிகழ்வுகளைப் புகைப்படமாகவும் அதிகாரி எடுத்து வைத்துக்கொண்டாராம்.

மாவட்டத்திற்குப் பணி மாறிவந்த விளம்பரப் பிரியரான அதிகாரி சுடலை, எந்த மாவட்டத்தில் பணிபுரிந்தாலும் தனது பணியின் விசேஷமான நிகழ்வுகளையும், படங்களையும் தன்னுடைய துறையின் வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்துகொள்வது இயல்பாம். அரிதிலும் அரிதான, தான் எடுத்த ராஜபார்ட் கெட்டப் ஆய்வின் புகைப்படத்தைத் தன்னுடைய துறையின் குரூப்பில் வெளியிட்டிருக்கிறார். அவரது நேரம், வாட்ஸ்அப்பில் பகிரப்பட்ட அதிகாரியின் இந்த அரிதார அவதாரப் படத்தை கல்வித்துறையில் யாரோ ஒரு புண்ணியவான் வேறு குரூப்பில் பகிர, அதிகாரியின் ராஜதர்பார் ஆய்வு வைரலாகிவிட்டது. நெட்டிசன்கள் பல மாதிரியான கமெண்ட்களைப் பதிவுசெய்து தள்ளிவிட்டனர்.

விவகாரம் அரசுத்துறையின் உயரதிகாரி வரை போக, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், நடந்தவற்றை விசாரிக்க தென்காசி மாவட்ட முன்மைக் கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கபீர் விரிவாக விசாரணை செய்து மேலிடத்திற்கு அறிக்கை அனுப்பியிருக்கிறார்.

இதுகுறித்து நாம் மாவட்டக் கல்வி அதிகாரி சுடலையைத் தொடர்பு கொண்டபோது, “"பள்ளிக்கு நான் ஆய்வின் பொருட்டு சென்றபோது அவர்கள் மகிழ்ச்சியில் விநோதமான வரவேற்பளித்தார்கள். நான் வேண்டாம் என்று சொன்னேன். பள்ளி நிர்வாகத்தினர் வற்புறுத்தியதால் ஏற்றுக்கொண்டேன். ஆசிரியர் பதிவேட்டில் கையெழுத்திட்டேன். அது இவ்வளவு தூரம் போகும்னு நினைக்கலை. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியின் விசாரணையில் நடந்ததைச் சொல்லியுள்ளேன்''’ என்கிறார்.

விசாரணைக்குப் பின்னர் அதிகாரி சுடலை கூடலூர் மாற்றப்பட்டிருக்கிறாராம். என்ன கொடுமை, ராஜாவையே நாடு கடத்தியிருக்கிறார்கள்!

-செய்தி, படங்கள்: ப.இராம்குமார்