ஜெ. ஆட்சியின்போது எளிதில் வெற்றிபெற்று நெல்லை எம்.பி.யானவர் பிரபாகரன். ஜெ. மறைவுக்கு பின்னர் காற்று திசைமாறி தி.மு.க.வின் பக்கம் பலமாக வீசியதால் நெல்லை எம்.பி.யானார் ஞானதிரவியம். நெல்லை, பாளை, அம்பை, ஆலங் குளம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது நெல்லை எம்.பி. தொகுதி.
சட்டமன்றத் தொகுதிகளின் பூகோளத் தன்மைக்கேற்ப வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்வேன் என்பதையே பிரச்சாரமாக்கி வென்றவர் ஞானதிரவியம். தான் சொன்னதைச் செய்துமுடித்தாரா என்பதைப் பார்ப்போம். இங்குள்ள ஆலங் குளம் தொகுதி முழுக்க கிராமங்களை உள்ளடக்கியது. அடித்தட்டு மக்களை மிகுதியாகக் கொண்டது, விவசாயத் தை அடுத்து பீடி சுற்றும் தொழிலே இந்த மக்களின் ஜீவாதாரம். சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பீடி சுற்றும் தொழிலையே பிரதானமாகக் கொண்டவர்கள். இவர்களுக்கு பீடியின் தாக்கம் காரணமாக, இருமல், சளி எனத்தொடங்கி காச நோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், காசநோய்க் கான மல்ட்டி ஸ்பெசா லிட்டி மருத்துவமனையை எதிர்பார்க்கிறார்கள். இந்த கோரிக் கையை எம்.பி. ஞானதிரவியத்திடமும் வைத்திருக்கிறார்கள்.
தொழிலாளர்கள் நல அமைப் பைச் சேர்ந்த ரவிக்குமார் கூறுகையில், "புகை பிடித்தல் கூடாது என்ற பிரச் சாரம், பொது இடங்களில் புகை பிடித்தால் அபராதம் போன்றவை பீடித் தொழிலின் வளர்ச்சிக்குத் தடையாக இருக் கின்றன. ஆனால் பீடி குடிப்பது பெரும் பாலும் ஏழைகள் என்பதால் தொழில் குறை அவ்வளவாக இல்லை. ஆலங்குளம் இத் தொழிலையே நம்பியுள்ளது. இதில் பெரும் பாலும் ஈடுபடுவது பெண்களே'' என்றார்.
"பீடி சுற்றும் தொழிலால், இருமல், சளி, அதையும் தாண்டிய காசநோய், மூச்சுத் திணறல் என பல்வேறு நோய்களால் அவதிப் படுகிறோம். இத்தொழிலில் வயது வித்தியாச மில்லாமல் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கூட ஈடுபட்டிருப்பதால் நோயின் தாக்கமும் விடுவ தாக இல்லை. பீடித் தொழிலாளர்களின் நலன் பொருட்டு தொகுதியில் அமைக்கப்பட்ட சிறிய மருத் துவமனைகள் டிஸ்பென்ஸரியாகவே செயல்படு கின்றன. போதிய மருத்துவர்கள், மருத்துவ உப கரணங்கள் கிடையாது. அதனால்தான் ஒன்றிய அரசின் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கப்பட்டால் தொகுதி முழுவதிலும் உள்ள பீடித் தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப் படும்னு எம்.பி.யிடம் கோரிக்கை வைத்தோம். ஏற் பாடுகளைச் செய்கிறேன் என்று ஆரம்பத்தில் தெரிவித்த எம்.பி., அதற்கான பணிகளை மேற் கொள்ளவில்லை. ஓட்டு வாங்குன பிறகு இந்தப் பக்கம் வரவுமில்லை. தொழிலாளர்களின் நலனுக் காக நெல்லையில் 2019-ல் அமைக்கப்பட்ட மத்திய தொழிலாளர் நலத்துறை ஆணையத்தை உடனே சென்னைக்கு மாற்றிவிட்டனர். அதைக்கூட எம்.பி. திரும்பக் கொண்டுவர முயற்சிக்கல. அவரது பணிக்காலமும் முடியப்போகிறது'' என வேதனை மண்டிய குரலில் தெரிவித்தனர் தேவி உமா, சேர்மக்கனி ஆகியோர்.
ஆலங்குளம் கதி இப்படி என் றால், நாங்குநேரி தொகுதியை உள் ளடக்கிய பகுதிகளின் விவசாய வேளாண் மக்களின் நிலையும் ஆரோக்கியமானதாக இல் லையே என்கிறார் மாநில விவசாய சங்கத்தின் துணைத் தலைவரான திருக்குறுங்குடி பெரும்படையார். மேலும், "நாங்குநேரி தொகுதி உட்பட நெல்லை மாவட்ட ஏரியாவே 70% சதவிகிதம் விவசாயத்தையும் அதை நம்பிய விவ சாயத் தொழிலாளர்களையும் கொண்டது. இப்ப பருவமழை ஏமாத்திட்டதால வழக்கமாகப் பயிரிடு கிற கார் பருவச் சாகுபடி பண்ணமுடியல. அதை நம்பியிருக்கிற விவசாயிகளும், விவசாய கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களும் கூலிக்கு வழியில்லாம திண்டாடுறாங்க. விவசாயிகளின் நிலத்தின் தன்மையைப் பொறுத்து ஏக்கருக்கு முப்பதாயிரம் ரூபாய்வரை நிவாரணம் தரக்கூடிய வகையில் ஒன்றிய அரசு செய்ய முடியும். குறைந்தபட்சம் விவசாயி ஒருவருக்கு பத்தாயிரம் வரை நிவாரணம் பெற்றுத்தர வாய்ப்பிருந்தும், எம்.பி. அதற்கான முயற்சியெடுக்கவில்லை.
பார்லிமென்ட்டிலும் அதற்காகக் குரல் கொடுக்கவில்லை. விவசாய மற்றும் தொழிலாளர் குடும்பங்களில், நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி மத்திய அரசு குடுக்குது. இப்ப வறட்சியினால வேலையிழப்பு. இதனால அந்த அரிசியும் தொழி லாளர்களுக்கு போதுமானதாயில்ல. சூழ்நிலையின் தீவிரத்துக்கேற்ப அரிசியை 10 கிலோவாகத் தரணும்னு பார்லிமெண்ட்ல குரல் குடுத்தா நிச்சயம் முடியும். இதையும் எம்.பி. பேசவில்லை. களக்காடு பகுதியில தரமான எக்ஸ்போர்ட் குவா லிட்டி வாழைத்தார் பயிரி டப்படுது. அதைப் பதப்படுத்தி விற்றால் விவசாயிகளுக்கு ஆதாயம்னு, குளிர்பதன மையம் அமைக்க ஏற்பாடு பண்ணுங்கன்னு கோரிக்கை வச்சும் கவனிக்கல. ரெண் டொரு இடத்தில் பஸ் ஸ்டாப்ப மட்டும் கட் டிக்குடுத்திட்டு தன் கட மையை முடிச்சுக்கிட் டார்'' என்றார் உடைந்த குரலில். ராதாபுரம் சட்டமன்ற எம்.எல்.ஏ.வும் சபா நாயகருமான அப்பாவு, அன்றாடம் தொகுதியி லுள்ள மக்களைப் போய்ச் சந்திக்கிறார் என்ற வள்ளியூரைச் சேர்ந்த ஜோசப் பெல்சி, "தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அந்தப் பகுதி யின் திட்டப்பணிகளை அப்பாவு செய்து கொடுக் கிறார். அண்மையில் 605 கோடி மதிப்பீட்டில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமாக குடி தண்ணீர் கொண்டு வருவதற்கான பணிகளைத் தொ டங்கி வைத்திருக்கிறார். ஒரு எம்.பி. செய்யவேண் டிய பணியை, சபாநாயகர் அப்பாவு செய்திருக் கிறார். ஆனால் எம்.பி.யோ தன்னுடைய மேம்பாட்டு நிதியிலிருந்து இரண்டொரு ரேசன் கடைகளை மட் டுமே கட்டிக் கொடுத்திருககிறார்'' என்றார் விரிவாக.
அழகியபாண்டியபுரம் சங்கரபாண்டியன், "எங்க விவசாய மக்களின் 1,500 குடும்பங்களும் குற்றால மலையிலிருந்து வருகிற சிற்றாறு தண்ணிய நம்பித்தானிருந்துச்சி. சுற்று வட்டாரத்தில் சுமார் 5,280 ஏக்கர் நிலங்களில் மூணு போகம் விளைச்சல் எடுப்போம். ஆனா அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அக்கட்சியிலிருந்த சில பவர் புள்ளிக, சிற்றாற மறிச்சி தாயார்தோப்புல அவுக வசதிக்காக தடுப் பணை கட்டுனதால எங்க பகுதிக்கு வரவேண்டிய தண்ணி அடைபட்டுப்போய் நாங்க விவசாயம் பண்ணமுடியல. தடுப்பணைய அகற்ற அப்ப கலெக்டர், எம்.பி.ன்னு முறையிட்டோம். எம்.பி. கண்டுக்கவேயில்ல'' என்றார் வயிற்றெரிச்சலாய்.
நெல்லை ராமையன்பட்டி பேச்சியம்மாள், சொக்கலிங்கம் கூறுகையில், "நெல்லை மாநகராட்சி யின் மொத்தக் குப்பையையும் அன்றாடம் லோடு கணக்குல மலைபோல இங்க தான் கொண்டுவந்து கொட்டுறாங்க. திடீர்னு குப்பை மேடு தீப்பிடிச்சி எரியும். புகைமூட்டத்தால ராமையன்பட்டி ஊரே மூச்சுத் திணறும். அதிகாரிங்ககிட்ட முறையிட்டும் ஒண்ணும் நடக்கல. வோட்டு வாங்குன எம்.பி.யும், இது தெரிஞ்சே இந்தப் பக்கம் எட்டிப்பாக்கல. ஆனா தேர்தல் வந்தா மட்டும் தேடி வந்துடுறாங்க'' என்றார்கள் வேதனையோடு.
பாளை. ஆட்டோ டிரைவர் கனி, "பாளை யின் மெயின் பகுதியான குலவணிகர்புரம் ரயில்வே கேட் சாலை பரபரப்பான எமர்ஜென்ஸி பகுதி. ஆனா தொடர் ரயில் போக்குவரத்து காரணமா ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுறதால நூற்றுக் கணக்கான வாகனங்கள் ரெண்டு பக்கமும் ரொம்ப நேரம் ஜாம் ஆகி போக்குவரத்து சிரமமாயிடும். பத்து வருஷமா இந்த இம்சையத்தான் நெல்லை, பாளை மக்கள் அனுபவிச்சிட்டு வர்றோம். தன்னோட ஊர்லயிருந்து நெல்லை வர்ற எம்.பி. ஞானதிரவிய மும் இந்த சிரமத்த அனு பவிக்கத்தான் செய்யுறார். எம்.பி. நெனைச்சா ரயில்வே துறையில பேசி மேம்பாலம் கொண்டு வரலாம். ஆனா அவர் மனசு வைக்கல'' என்றார் நொந்துபோய்.
எம்.பி. ஞானதிரவியத் திடம் இத்தொகுதியில் அவரது செயல்பாடுகள் குறித்து கேட்டபோது... "இடமாற்றம் செய்யப்பட்ட மத்திய தொழிலாளர் நலத்துறை ஆணையத்தை திரும்ப கொண்டுவர சம்பந்தப்பட்ட துறையிடம் பலமுறை மனு கொடுத் தேன். ஒரு எம்.பி. என்றுகூட அவர்கள் பொருட் படுத்தவில்லை. பாளை. ரயில்வே கேட் மேம்பாலம் மற்றும் ஆலங்குளம் பீடித் தொழிலாளர்களுக்கான மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனைக்காக பார்லிமெண்டிலும் பேசினேன். மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. பல தடவை ரயில்வே துறையில் அழுத்தம் கொடுத்த பிறகே ரயில்வே மேம்பாலத்திற்கான நிதி ஒதுக்குகிறோம் என் றார்கள். மத்திய பா.ஜ.க. அரசு, தமிழக எம்.பி.க் களின் மக்கள் பணிக்கான கோரிக்கைகளையும், திட்டங்களையும் புறக்கணிக்கிறார்கள். ஏதோ ஒரு முடிவுடன் செயல்படுகிறார்கள். தமிழக எம்.பி.க்களின் நிலை இப்படித்தானிருக்கிறது. மக்களிடம் நாங்கள் என்ன பதிலைச் சொல்வது?'' என அனைத்துக்கும் ஒன்றிய அரசைக் கைகாட்டி முடித்துக்கொண்டார். தொகுதி மக்கள் திரும்பவும் இவருக்கு ஓ.கே. சொல்வார்களா என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்.
-பி.சிவன்
படங்கள்: ப.இராம்குமார்