neet

நாடு முழுக்க பாராளுமன்றத் தேர்தல் திருவிழாவின் முடிவுகளைப் பரபரப்பாகப் பார்த்துக்கொண்டிருந்த ஜூன் 4ஆம் தேதியன்று தான் மருத்துவப் படிப்புக்காக எழுதிய நீட் தேர்வு முடிவுகளும் வெளியாகின. தேர்தல் முடிவுகளுக்கான பரபரப்பில், நீட் தேர்வு முடிவுகள் குறித்த பேச்சே எழாத நிலையில், அடுத்தடுத்த நாட்களில், இம்முறை நீட் தேர்வெழுதிய மாணவர்களில் 67 பேர், அதிகபட்ச மதிப்பெண்ணான 720 மதிப்பெண்களைப் பெற்ற தகவலைக் கேட்டு 'எப்புட்றா!' என அதிசயித்தனர். அதேபோல், நீட் தேர்வுக்கான பயிற்சி நிறுவனங்கள் நாளிதழ்களில் முழுப்பக்க அளவில் வெளியிட்ட விளம்பரங்களில், சில மாணவர்கள் 719, 718, 717 என்றெல்லாம் மதிப்பெண்கள் பெற்றிருப்பதைப் பார்த்த பின்னர்தான், நீட் தேர்வு முடிவுகளில் மோசடி நடந்திருப்பதான சந்தேகம் மாணவர்கள் மத்தியில் வலுத்தது.

Advertisment

மாநிலப் பாடத்திட்டத்தில் நடக்கும் தேர்வு மதிப்பெண்களைப் புறந்தள்ளுவதாலும், நீட்டுக்கான பயிற்சி எனக்கூறிக்கொண்டு கொள்ளையடிப்பதாலும், சமத்துவமில்லாத சூழல் இருப்பதாலும், மாணவர்கள் மன உளைச்சலால் தற்கொலை செய்வதாலும் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நீட்டுக்கு எதிரான குரல்கள் ஒலித்தபடியே இருக்கும் நிலையில், இவ்வாண்டில் புதிய விவகாரங்கள் நீட் தேர்வு குறித்து எழுந்துள்ளன. அதில் ஒன்று தான் கருணை மதிப்பெண். நீட் தேர்வில், ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தப்பான பதிலுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். எனவே, 180 கேள்விகளுக்கு சரியான பதில் எழுதிய மாணவருக்கு 720 மதிப்பெண்கள் கிடைக்கும். ஒரு கேள்வி தவறானாலும் 5 மதிப்பெண் குறையும். ஒரு கேள்வியைத் தவிர்த்தாலோ 4 மதிப்பெண்கள் குறையும். அப்படியான சூழலில், 720 மதிப்பெண்களுக்கு அடுத்து, 716 அல்லது 715 மதிப்பெண்கள் மட்டுமே பெற இயலும். ஆனால் இவ்வாண்டு தேர்வு முடிவுகளில் சில மாணவர்கள் 719, 718, 717 மதிப்பெண்களும் பெற்றிருப்பது தெரியவந்து பலரும் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த தேசிய தேர்வு முகமை, “கடந்த மே 5ஆம் தேதி நீட் தேர்வெழுதியபோது தேர்வு நேரம் முழுமையாக ஒதுக்கப்படவில்லையென்று தேர்வெழுதிய மாணவர்களிடமிருந்து புகார்கள் வந்தன. எனவே அந்த புகார்களைப் பரிசீலித்து, தேர்வு நேர இழப்பை உறுதிசெய்து, கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன'' என தெரிவித்துள்ளது.

ஆனால் கருணை மதிப்பெண்கள் வழங்கப்படுவது குறித்தோ, அதை எப்படி வரையறுக்கிறார்கள் என்பது குறித்தோ இதுவரை பொதுவில் எவ்வித விளக்கத்தையும் நீட் தேர்வு முகமை வெளியிடவேயில்லை. நீட் தேர்வில் ஒவ்வொரு மதிப்பெண்ணும் மிகமுக்கியமானது. இப்படியான தேர்வில் கருணை மதிப்பெண் என்ற பெயரில் கூடுதல் மதிப்பெண்களை வழங்குவதால், பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவக்கனவு சிதைகிறது. இதன் பின்னணியில் மோசடி நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது. நீட் பயிற்சி மையங்கள் கோடிக்கணக்கில் லாபமீட்டும் பிசினஸôக இருக்கும் சூழலில், ஏற்கெனவே கேள்வித்தாள்கள் கசிய விடப்படுவது நடக்கிறது. தற்போது கருணை மதிப்பெண்கள் என்ற பெயரில் கூடுதல் மதிப்பெண்களைப் பெற லாபிகள் நடக்குமென்பதை மறுக்க இயலாது.

Advertisment

கடந்த ஆண்டுகளில் முதல் மதிப்பெண்ணான 720 மதிப்பெண்களை ஓரிரு மாணவர்கள் மட்டுமே பெற்றிருந்த சூழலில், இவ்வாண்டு மொத்தமாக 67 மாணவர்கள் முதல் மதிப்பெண்களைப் பெற்றிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக, ஹரியானாவிலுள்ள ஜஜ்ஜார் தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 8 மாணவர்கள் முதல் மதிப்பெண்களைப் பெற்றிருப்பதும் மோசடி குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது. அதேபோல், நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், பத்து நாட்கள் முன்பாக, தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் வெளிவந்ததன் காரணமும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

வட மாநிலங்களிலுள்ள சில பள்ளிகளில், நீட் தேர்வைக் குறிவைத்து, நன்றாகப் படிக்கும் மாணவர்களை பள்ளிக்கே வரத் தேவையில்லையெனக் கூறி, வருகைப்பதிவேட்டில் பொய்யாக டிக் அடித்துவிட்டு, அம்மாணவர்களை நீட் பயிற்சி மையங்களுக்கு அனுப்பக்கூடிய மோசடிகளும் நடப்பதாகப் புகார்கள் எழுகின்றன. இப்படியெல்லாம் தீவிரமாகப் படிக்கவைத்து மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதால் தான் இந்த ஆண்டும் நீட் தேர்வு முடிவுகள் வெளியான மறுநாளில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த பகிஷா திவாரி என்ற 18 வயது மாணவி தற்கொலை செய்துள்ளார். நீட் பயிற்சி மையங்களுக்கு புகழ்பெற்ற ராஜஸ்தானின் கோட்டா நகரிலுள்ள பயிற்சி மையத்தில் படித்துவந்த இம்மாணவி, நீட் தேர்வில் 320 மதிப்பெண்களே பெற்ற நிலையில் ஒன்பதாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். நீட் தேர்வு காரணமாக இவ்வாண்டில் மட்டும் கோட்டா நகரில் 10 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இவ்வளவு மோசடிகளுடன் கூடிய நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் உதயநிதி, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டோரும் மோசடியான நீட் தேர்வுக்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

கூட்டணி ஆட்சியில் மாற்றம் வருமா?