"அப்பா எங்கே?'’ -நீட் தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு பதில் எழுதிவிட்டு வெளியே வந்த மாணவர் கஸ்தூரி மகாலிங்கம் கேட்ட ஒரேயொரு கேள்வி இது. அந்தக் கேள்விக்கு நீட்டைத் திணித்த மத்திய அரசாலும், அதை எதிர்த்து முறியடிக்க வக்கில்லாத மாநில அரசாலும் பதில் சொல்ல முடியவில்லை. பையனை கேரள மாநிலம் எர்ணாகுளம் நாளந்தா பள்ளி தேர்வு மையத்தின் பரீட்சை அறைக்குள் அனுப்பிவிட்டு காத்திருந்த அப்பா கிருஷ்ணசாமி, மனஉளைச்சலால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோன தகவல், உள்ளே தேர்வெழுதிய மகனுக்குத் தெரியாது.

neet-student

நீட் எனும் கொடூரக் கத்திக்கு கடந்த ஆண்டு நரபலியானார் மாணவி அனிதா. இந்த முறை அந்தக் கத்திக்கு நரபலி, கிருஷ்ணசாமி. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விளாக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, பெருகவாழ்ந்தான் அரசு நூலகத்தில் நூலகர். மாற்றுத்திறனாளியான அவரது மனைவி பாரதிமகாதேவி, ராயாநல்லூர் அரசு ஆரம்பப்பள்ளி தலைமைஆசிரியர். கலப்புத் திருமணம் செய்த இந்த தம்பதியருக்கு ஒரு மகள், ஒரு மகன். அந்தப் பையன்தான், கஸ்தூரி மகாலிங்கம். சதுரங்க சாம்பியன்.

பல உயிர்களைக் காக்க வேண்டிய மகனின் டாக்டர் கனவை நிறைவேற்ற, நீட் தேர்வால் அலைக்கழிக்கப்பட்ட கிருஷ்ணசாமியின் உயிர் பறிபோய்விட்டது. மாணவன் கேட்காத எர்ணாகுளத்தில் சென்டர் போடப்பட்டபோதே பத்திரமாக அழைத்துச் சென்று தேர்வு எழுத வைக்கவேண்டும் என்ற பதட்டம் அப்பாவுக்கு ஏற்பட்டது. அது கடைசிநேரம் வரை, அரசாங்கத்தின் குளறுபடிகளால் அதிகரித்தது. மே 3-ந் தேதி திருவாரூரிலிருந்து மகனுடன் பஸ் ஏறிய கிருஷ்ணசாமி, 6-ந் தேதி பிணமான தகவல், குடும்பத்தினரை அதிரவைக்க, ஊர்மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

Advertisment

neetexam

neetexam

Advertisment

குடும்பத்தாருக்கு போனில் ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி, கஸ்தூரி மகாலிங்கத்தின் படிப்புச் செலவை அரசாங்கம் ஏற்கும் என அறிவித்தார். அதெல்லாம் துயரத்தையும் கோபத்தையும் தணிக்கவில்லை. நம்மிடம் குமுறிய பாரதிமகாதேவி, "டாக்டராகணும்னு என் மகன் கஷ்டப்பட்டான். அவனுக்காக எம்புருசனும் கஷ்டப்பட்டாரு. இப்ப எங்க எல்லாரையும் அவர் கஷ்டப்பட வச்சதுக்கு காரணம், மத்திய-மாநில அரசுகள்தான். அவங்க பதில் சொல்லியே ஆகணும்'’என்றார் அடக்க முடியாத கண்ணீருடன்.

எர்ணாகுளத்தில் உள்ள சிட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கிருஷ்ணசாமியின் உடல், முறைப்படி ஒப்படைக்கப்பட்டபோது, கஸ்தூரி மகாலிங்கம் கதறி அழுதது அங்கிருந்த அனைவரையும் பாதித்தது. தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதால் பலியானது ஓர் உயிர். மனஉளைச்சலால் பரிதவித்தவர்கள் பலர். ஏராளமான மாணவர்கள் அகதிகள் போல அல்லாடினர்.

கிருஷ்ணசாமியின் விளாக்குடி வீட்டுக்கு தமீமுன் அன்சாரி, திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. ஆடலரசன் உள்ளிட்டோர் சென்று ஆறுதல் கூறினர். அதேநேரத்தில் தி.மு.க., கம்யூனிஸ்ட், வி.சி.க. உள்ளிட்ட கட்சியினர் மறியலில் இறங்கினர். உடனே, மாவட்ட அமைச்சர் காமராஜ் சாதிரீதியாக கிருஷ்ணசாமியின் உறவினர்களை அணுகி, ""பிரச்சினையெல்லாம் வேணாம்'' என தூதுவிட்டும் பொதுமக்களின் கொந்தளிப்பு அடங்கவில்லை.

neetexam

நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நொந்து சாகிறார்கள். சென்னையில் 49 நீட் தேர்வு மையங்கள் ஏற்பாடாகியிருந்தன. சென்னையைச் சுற்றியுள்ள மாணவர்கள், நீட் தேர்வு தினமான மே.06-ஆம் தேதி அதிகாலையிலிருந்தே தேர்வு மையங்களுக்கு வரத் தொடங்கினர். சென்னை, சேத்துப்பட்டில் உள்ள மஹரிஷி வித்தியாமந்திர் பள்ளியில் தேர்வு எழுத, பொழுது விடிவதற்கு முன்பே வந்துவிட்ட ஒரு மாணவி, காலைக் கடனைக் கழிப்பதற்காக பள்ளிக்குள் செல்ல அனுமதி கேட்க, மறுத்துவிட்டனர் சி.பி.எஸ்.இ.அதிகாரிகள். அருகில் இருந்த பல அபார்ட்மெண்ட் வாசிகளிடம் கெஞ்சிப்பார்த்து, கடைசியில் ஒரு அபார்ட்மெண்ட்வாசி மனமிரங்கினார்.

அதற்கடுத்து, தேர்வு அறைக்குச் செல்லும் முன்பு, மாணவிகள் அணிந்திருந்த தோடு, மூக்குத்தி, செயின், மோதிரம் இவற்றை வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்து அனுப்பியது போலீஸ். மாணவிகளின் துப்பட்டாவைக்கூட விட்டுவைக்கவில்லை. இதைவிடக் கேவலத்தின் உச்சம், தங்கள் பிள்ளைகளை தேர்வு எழுத அனுப்பிவிட்டு, பள்ளிக்கு எதிரே சாலையில் அமர்ந்திருந்த பெற்றோர்களை சகட்டுமேனிக்கு ஒருமையில் பேசிக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் மோகனவள்ளி. நாம் அவரை போட்டோ எடுத்ததைப் பார்த்துவிட்டுப் பாய்ந்து வந்து நமது கேமராவைப் பறிக்க முயற்சி செய்து, எடுத்த போட்டோவை டெலிட் செய்யுமாறு ரொம்பவே ராவடி பண்ணினார். உயர் போலீஸ் அதிகாரிகள் வந்து நம்மை சமாதானப்படுத்திவிட்டு, மோகன வள்ளியை பள்ளிக்குள் அனுப்பிவிட்டனர்.

வெளிமாநிலங்களில் இருந்து வந்த தமிழக மாணவ-மாணவிகளும் ரொம்பவே சிரமப்பட்டனர். சென்னைக்கு 4:40-க்கு வரவேண்டிய ரயில் 9:40-க்கு வந்ததால், ஆஹியா என்ற கேரள மாணவி, தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல், கவலையுடன் திரும்பினார்.

arulmozhi

தமிழக மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் பெற்றுவந்த மருத்துவ இடங்களை கண்முன்னே பறித்தது "நீட்' தேர்வு. +2வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் நீட் கொடுமையால் டாக்டர் சீட் கிடைக்காத விரக்தியில் அரியலூர் மாணவி அனிதாவின் உயிரும் பறிபோனது.

நீட் தேர்வை ரத்து செய்ய முயற்சி எடுக்க வேண்டிய தமிழக அரசு, நீட் தேர்வுக்கு பயிற்சி கொடுக்க சிறப்பு மையங்களும் வழிகாட்டி நூல்களும் ஏற்பாடு செய்யத் தொடங்கியது. நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் கல்வித் திட்டத்தையும் மாற்றி அமைக்க முடிவு செய்தது. மாணவர்களும் தங்கள் எதிர்காலம் கருதி நீட் பயிற்சியில் கவனம் செலுத்தத் தொடங்கினர். இதற்காக 50 ஆயிரம், 1 லட்சம் என செலவழித்து தனியார் பயிற்சி நிறுவனங்களுக்குச் சென்றனர்.

இந்நிலையில்தான், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மார்ச் 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி சி.பி.எஸ்.இ. அறிவித்தது. விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஏப்ரல் 17 ஆம் தேதியிலிருந்து ஹால்டிக்கெட்டுகள் கிடைக்கத் தொடங்கின. ஆன்லைனில் தரவிறக்கம் செய்து பார்த்தபோதுதான் பல மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாங்கள் கேட்ட தேர்வு மையங்களை ஒதுக்காமல், கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநில மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதை அறிந்து அவர்கள் குழம்பினர்.

இந்தியா முழுவதும் நீட் தேர்வு எழுத 2 ஆயிரத்து 255 மையங்களை சி.பி.எஸ்.இ. ஏற்பாடு செய்திருந்தது. இதில் தமிழகத்தில் மட்டும் 170 மையங்கள் இருந்தன. தமிழகத்திலிருந்து தேர்வு எழுத 1 லட்சத்து 7 ஆயிரத்து 288 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் சுமார் ஆயிரத்து 500 மாணவர்களுக்கு வெளிமாநில தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. பொருளாதார நிலை, போக்குவரத்து வசதி ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் தங்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. தங்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களுடைய கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம் தமிழகத்திலேயே மையங்களை ஏற்படுத்தும்படி சி.பி.எஸ்.இ. தரப்புக்கு உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து சி.பி.எஸ்.இ. தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

inspectorஅப்போது, ""தமிழகத்தில் கடந்த ஆண்டைக்காட்டிலும் 10 சதவீதம் மாணவர்கள் கூடுதலாகி சுமார் 90 ஆயிரம் பேர் தேர்வு எழுத விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம் என்றும், அதற்காக மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்தோம் என்றும் சி.பி.எஸ்.இ. தரப்பில் கூறப்பட்டது. அந்த அடிப்படையில் கடந்த ஆண்டைக்காட்டிலும் 25 ஆயிரத்து 206 மாணவர்கள் தேர்வு எழுத மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன'' என்றும் அவர்கள் கூறினர். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தமிழக மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திடீரென எந்த முன்னேற்பாடும் இல்லாமல் வெளிமாநிலத்துக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டதால், பலர் தேர்வு எழுதும் திட்டத்தையே கைவிடும் நிலை உருவானது. சி.பி.எஸ்.இ.யும், மத்திய அரசும் தமிழக மாணவர்களை வஞ்சிப்பதாக ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் கடுமையாக விவாதத்தை கிளப்பின.

இதையடுத்து, ஏராளமான தன்னார்வலர்கள் மாணவர்களுக்கு உதவ முன்வந்தனர். மாணவர்கள் வெளிமாநிலம் சென்று தேர்வெழுத தமிழக அரசு உதவ வேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்தார். இதையடுத்து சுகாதாரத்துறை பரிசீலனைக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் பழனிச்சாமி, மாணவர்களின் பயணத்துக்கு ஆயிரம் ரூபாய் உதவி அளிப்பதாக அறிவித்தார். தேர்வுக்கு இரண்டு நாட்களே இருந்த நிலையில் அ.ம.மு.க. துணைப்பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்ட வேறு சிலரும் மாணவர்களின் பயணத்துக்கு உதவ முன்வந்தனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக மாணவர்களுக்கு உதவ சிறப்பு மையங்களை ஏற்படுத்த உத்தரவிட்டார்.

தமிழக மாணவர்களை கடைசி நிமிடத்தில் கடுமையான மன உளைச்சலுக்கும், அலைச்சலுக்கும் ஆளாக்கிய இந்த குழப்பம் குறித்து டெல்லியில் உள்ள சி.பி.எஸ்.இ. துறைச் செயலர் சத்தியநாராயணன், இணை அமைச்சர் சத்யபால் சிங் ஆகியோரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ""இந்தக் குழப்பத்தை முன்கூட்டியே தீர்ப்பதற்கான வாய்ப்பு இருந்தும், மாணவர்களும் தமிழக அரசும் கவனிக்கத் தவறிவிட்டனர். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கடைசி நிமிடத்தில் பிரச்சனை உருவாக்க முயற்சிக்கிறார்கள். மாணவர்களின் தேர்வு மையத்தை அதிகாரிகள் முடிவு செய்வது இல்லை. கம்ப்யூட்டர் சிஸ்டம்தான் முடிவெடுக்கிறது''’என்றனர் சர்வசாதாரணமாக.

நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தில் முனைப்பு காட்டும் மருத்துவர் எழிலனிடம் இந்தக் குளறுபடிகள் குறித்து கேட்டோம். ""தமிழ்நாட்டில்“நுழைவுத்தேர்வை ரத்துசெய்து, +2 மார்க் அடிப்படையிலேயே எம்.பி.பி.எஸ். சீட் என்பதற்கு தி.மு.க. அரசுதான் சட்டம் கொண்டுவந்தது. ஆனாலும், நுழைவுத் தேர்வை ரத்து செய்தது நான்தான் என்று ஜெயலலிதா சொல்லிக்கொண்டார். அப்படி இருக்கும்போது, நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு இயற்றிய சட்டத்தை குறிப்பிட்டு இப்போதைய அ.தி.மு.க. அரசு ஏன் வாதாடவில்லை? மேலும் நீட் தேர்வுக்கு முழுமையாக விலக்கு கோரவுமில்லை. சமூக நீதி அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களுக்கு மட்டுமே நீட் தேர்விலிருந்து விலக்கு கோருகிறோம்''’என்றார் ஆதங்கத்துடன்.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நீட் தேர்வை நடத்தியுள்ள நிலையில், இனி எப்போதும் நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய முடியாதா என்ற சந்தேகம் நிலவுகிறது. இதுகுறித்து வழக்கறிஞர் அருள்மொழியிடம் கேட்டோம்…""கடந்த ஆண்டு நீட் தேர்வு விலக்கிற்காக தமிழக அரசு தயாரித்த அவசரச்சட்ட மசோதா குடியரசுத் தலைவரிடம் சென்றதா என்பதே உறுதிசெய்யப்படவில்லை. அந்தச் சட்டமசோதாவுக்கு மீண்டும் உயிர்கொடுக்க முடியும். அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டால் நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும்''’என்று அவர் உறுதியாக கூறுகிறார்.

மத்திய அரசின் திட்டமிட்ட பழிவாங்கலான நீட் தேர்வை, சட்டரீதியாக எதிர்த்து நின்று, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டிய எடப்பாடி அரசு, எதன் மீதோ பெய்த மழை போல அசைந்து கொடுக்காமல் இருப்பதால் இன்னும் எத்தனை நரபலி கேட்கப்போகிறதோ நீட் கொடூரம்.

-சி.ஜீவாபாரதி

உதவிக்கரம் நீட்டிய கேரளா!

keralacmநெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டத்திலிருந்து கேரளாவின் எர்ணாகுளம் உள்ளிட்ட பல சென்டர்களில் நீட் தேர்வு எழுதுவதற்கு சென்ற தமிழக மாணவர்களுக்கு 5 பேருந்துகளை ஏற்பாடு செய்ததுடன் தன் கடமையை முடித்துக்கொண்டார். நெல்லை மாவட்ட ஆட்சியரான சந்தீப் நந்தூரி. இவர்கள் தவிர. மேற்படி மூன்று மாவட்டங்களிலிருந்து தனித்தனியாகவும் வேன் மூலமாகவும் கேரளாவில் நீட் தேர்வுக்கு சென்ற மாணவர்கள் எண்ணிக்கை 2,300-ஐ தாண்டுகிறது.

தன் பிள்ளை நல்லபடியாக நீட் தேர்வு எழுத வேண்டுமென்பதற்காக ஒவ்வொரு மாணவனின் தாய்-தந்தையரும் சுமார் 370 கி.மீ பயணப்படவேண்டியிருந்தது. புதிய இடம்- தெரியாத மொழி இவற்றால் மனஉளைச்சல் ஏற்படும் என கல்வியாளர்கள் தரப்பில் சொன்னதைக்கூட தமிழக ஆட்சியாளர்கள் காதில் வாங்கவில்லை. அதே நேரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரளா வரும் வெளி மாநில மாணவர்களுக்கான தங்குமிடம் உள்ளிட்ட உதவிகளைச் செய்யுமாறு ஐந்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.களுக்கு உத்தரவிட்டார்.

students-in-kerala

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பான எஸ்.எப்.ஐ. குறிப்பிட்ட அந்த ஐந்து மாவட்ட சென்டர்களிலும் ரெயில்வே ஸ்டேசன், பேருந்து நிலையங்கள்தோறும் ஒவ்வொரு குழுவாக நின்றுகொண்டு தேர்வுக்கு வரும் பிறமாநில மாணவர்கள் தாமதமில்லாமல் செல்லவேண்டிய சென்டரில் சேர்க்க நடவடிக்கை எடுத்தது. கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் ஒப்படைத்து தமிழகத்துக்கு அனுப்பி வைப்பதிலும் கேரள அரசு ஒத்துழைப்பாக செயல்பட்டது.

-பரமசிவன்

படம்: ப.இராம்குமார்