மிழக அரசுப் பள்ளி மாணவன் ஜீவிதகுமார், நீட் தேர்வில் அகில இந்திய அளவில் தேர்வாகிய அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதனால் நீட் ஆதரவாளர்கள் இதோ ஜீவிதகுமாரே தேறிவிட்டார்… பிறகென்ன நீட் எதிர்ப்பைக் கைவிடுங்கள் என கிளம்பிவிட் டார்கள்.

jj

தேனி மாவட்டம் சில்வார் பட்டியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் கூலித்தொழிலாளியான தட்சிணாமூர்த்தி- மகேஸ்வரியின் மூத்த மகனான ஜீவிதகுமார் 10-ஆம் வகுப்பில் 494 மதிப்பெண்களும், 12-ஆம் வகுப்பில் 548 மதிப்பெண்களும் பெற்றவர். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த கையோடு பயிற்சி மையம் எதிலும் சேராமல் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். அவரால் சாதிக்க முடியவில்லை. வெறுமனே 120 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார்.

ஜீவிதகுமாரின் மருத்துவக் கனவை அறிந்த அவரது ஆசிரியர்கள் பணம் திரட்டியும், அனிதாவின் மரணத்துக்கும் நீட் தேர்வுக்கு எதிராகவும் போராடிவரும் அரசுப் பள்ளி ஆசிரியை சபரிமாலாவிடம், ஜீவிதகுமார் குறித்துக் கூறியும் ஆதரவு திரட்டினர். சபரிமாலா தன்னாலான உதவியைச் செய்ததோடு அமெரிக்காவைச் சேர்ந்த காட்வின் என்பவரிடமிருந்தும் நிதியுதவி பெற்று நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு பயிற்சி மையத்தில் ஜீவித குமாரை பயிற்சி பெற வைத்தார்.

Advertisment

லட்சக்கணக்கில் செலவு செய்து, ஓராண்டு பயிற்சிக்குப் பின்பே ஜீவிதகுமாரின் வெற்றி சாத்தியமாகியிருக்கிறது. தற்போது 664 மதிப்பெண்கள் பெற்று நீட்தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களில் இந்திய அளவில் முதலிடம் பெற்றிருப்பதாக கூறுபவர்கள், ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் அவரது இடம் 1823 என்பதைக் குறிப்பிடுவதில்லை. தரவரிசையில் இவருக்கு முன் புள்ள 1822 பேரை தாண்டித்தான் இவருக்கான மருத்துவ இடம் உறுதியாகவேண்டும்.

ஜீவிதகுமாருக்கு அவரது வகுப்பாசிரியரும், ஆசிரியை சபரிமாலாவும், அமெரிக்காவிலிருந்து காட்வினும் துணைவந் தார்கள். அவருக்கு பயிற்சியளித்த பயிற்சிமையமும் கட்டணத்தில் கொஞ்சம் சலுகை தந்தது. நீட் தேர்வு எழுதும் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எத்தனை வகுப்பாசிரியர்கள் துணைவருவார்கள்? பயிற்சிக்கு நிதி உதவி எதிர்பார்த்து எத்தனை காட்வின்களைத் தேடிச்செல்வது? எத்தனை பயிற்சி மையங்கள் எத்தனை ஆயிரம் பேருக்கு சலுகை அளித்துவிடும்?

jj

Advertisment

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்ணே அளவுகோலாக இருந்தால், ஜீவிதகுமாருக்கு சபரிமாலா, காட்வின் உதவியே தேவைப்பட்டிருக்காது. அவரது ஓராண்டுகாலமும் வீணாகியிருக்காது. கடந்த ஆண்டே எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்திருக்கும் என்கிறார்கள் நீட்டை ரத்து செய்ய வலியுறுத்துவோர்.

இது ஒருபுறமிருக்க தேசிய தேர்வு முகமை அக்டோபர் 17-ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. அதில் சில அதிர்ச்சிகரமான அதிசயங்கள் நடந்தேறின. மொத்தம் 3,536 பேரே நீட் தேர்வு எழுதிய திரிபுரா மாநிலத்தில் 88,889 பேரும், 12,047 பேர் தேர்வெழுதிய உத்தரகாண்டில் 37,301 பேரும் தேர்ச்சி பெற்றதாக தேர்வுமுடிவுகள் அறிவித்தன. இந்த அதிசயம் தேர்வு முகமை யின் காதுகளைச் சென்றடைந்ததையடுத்து அவசர அவசரமாக அந்த முடிவுகள் நீக்கப்பட்டன. சில மணி நேரங்களுக்குப் பின் அதிசயம் ஏதுமில்லாத புதிய முடிவுகள் வெளியிடப்பட்டன.

தேர்வுமுடிவுகள் குழப்பம் ஒருபுறமிருக்க, தேர்வெழுதிய ஓ.எம்.ஆர். தாளை வைத்து தங்கள் மதிப்பெண்களைச் சோதித்த மாணவர்கள் ஏராளமான பேர் தாங்கள் பெறவேண்டிய மதிப்பெண்களைவிட குறை வாக வந்திருப்பதாக மின்னஞ்சலின் வழியாக புகாரளித்துவருகிறார்கள். தமிழகத்திலும் கோவை, அரியலூர் உள்ளிட்ட பல மாவட் டங்களிலிருந்தும் குறைவான மதிப்பெண்கள் வந்துள்ளதாகக் கூறி புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் தேர்வெழுதிய 99,610 பேரில் 57,215 பேர் மட்டுமே வெற்றிபெற்றுள்ளனர், கடந்த ஆண்டை 2,570 பேர் குறைவாக வெற்றிபெற்றுள்ளனர். உண்மை அப்படியிருக்க கடந்த ஆண்டைவிட ஒன்பது சதவிகித பேர் கூடுதலாக வெற்றிபெற்றுள்ளனர் என்ற கணக்கீடு எங்கிருந்து வந்ததெனத் தெரியவில்லை.

இன்னொருபுறம் நீட் தேர்வு நடைபெற்று முடிந்ததும், தேர்வில் மாநில பாடத்திட்டத்திலிருந்தே 90% கேள்விகள் கேட்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டை யன் கூறினார். அப்படியெனில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விகிதம் கடந்த ஆண்டைவிட அதிகரித்திருக்கவேண்டும். அப்படி நடக்காமல் போனது ஏன்?

தமிழகத்தில் நீட் தேர்வெழுதி வெற்றிபெற்ற 57,215 பேரில் எத்தனை பேருக்கு மருத்துவக்கல்வியில் இடம்கிடைக்கப் போகிறது என்கிற வினாவும் முக்கியமானதாகும்.

இதற்கிடையில் மருத்துவப் படிப்பில், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 50 சத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அளிக்கமுடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இந்தியாவில் தேர்வுகளுக்குப் பயிற்சியளிக்கும் மையங்கள் மிகப்பெரும் வருவாய் கேந்திரங்களாக உருவாகிவருகின்றன. 2021-ல் பயிற்சி மையங்களின் வருவாய் 81,704 கோடி ரூபாயாக இருக்கும் என ஒரு ஆய்வு சொல்கிறது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த ஒரு மாணவன், தங்களின் பயிற்சி மையத்தில் படித்ததாக பல கோச்சிங் சென்டர்கள் விளம்பரம் செய்திருப்பது இது எவ்வளவு பெரிய வியாபாரம் என்பதைக் காட்டுகிறது.

நீட் தேர்வால் தமிழகத்தில் ஏற்கெனவே 18 மாணவ ரத்தினங்களைத் தொலைத்துவிட்டோம். இன்னும் எத்தனை ரத்தினங்களைத் தொலைக்கவேண்டுமென மத்திய அரசு எதிர் பார்க்கிறது?

-க.சுப்பிரமணியன்