அரசியல் என்பது நாற்காலி யுத்தம். ஒற்றை நாற்காலி காலியானால் அதற்கு மொத்தமாக மல்லுக்கட்டுவது வழக்கம். கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் மறைவின் ஈரம் காயும் முன்னே, இடைத்தேர்தல் களத்திற்கு வரிந்துகட்டுகின்றன கட்சிகள்.
பா.ஜ.க.வில் மீண்டும் பொன்ராதாகிருஷ்ணன் களம் இறக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதுவரை நடந்த பொதுத்தேர்தலில் பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் 9 முறை போட்டியிட்டு 2 முறை மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறார். அந்த 9 முறையும் பொன்னாரை எதிர்த்து கட்சியில் யாரும் சீட் கேட்க முன்வந்ததில்லை. ஆனால், இடைத்தேர்தல் களத்தில் அவரை எதிர்த்து வரிந்து கட்டுகிறார் நயினார் நாகேந்திரன்.
பா.ஜ.க. மாநில துணை தலைவரும் தென் மண்டல பொறுப்பாளருமான நயினார் நாகேந்திரன் தலைமையில் நெல்லையில் கன்னியாகுமரி மண்டல பாஜக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது, இடைத்தேர்தல் களத்தில் போட்டி யிடுவதற்கான தனது விருப்பம் குறித்து இலைமறை காய் மறையாக வெளிப்படுத்தியுள்ளார் நயினார். குமரி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் மட்டு மின்றி பொன்னாருக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்சிக்குள் கலகத்தை ஏற்படுத்துகிறார் நயினார் நாகேந்திரன் என்கிற பொன். ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள், பொன்னார்தான் நயினாரின் செல்வாக்கைப் பார்த்து அ.தி.மு.க.விலிருந்து பா.ஜ.க. வுக்கு கொண்டு வந்தார். நயினார் வந்தாரே தவிர அவ ரது ஆதரவாளர்கள் எங்கள் கட்சிக்கு வரவில்லை. நயினார் நாகேந்திரனுக் காக தலைமையிடம் பேசி, ஆந்திராவில் கல்குவாரி ஒன்றை எடுத்துத் தந்தவரும் பொன்னார்தான். தேசிய சுரங்கத்துறை வாரிய உறுப்பினராக நயினார் ஆசைப்பட்ட போதும் பொன்னார் ரெக மண்ட் செய்தார். ஆனால், அது ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவருக்கு போய்விட்டது.
அத்துடன், ராமநாதபுரம் எம்.பி. தொகுதி தேர்தல் தோல்வி, மாநிலத் தலைமைப் பதவி கிடைக்காத ஏமாற்றம் இவற்றால் கட்சி மாறத் தயா ராகிவிட்ட நயினாரிடம் புதிய தலைவர் முருகன் சமாதானம் பேசி, கன்னியாகுமரி உள்பட 4 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்திற்கு பொறுப்பாளராக்கினார். நயினார் நாகேந்திரனோ கன்னியாகுமரி தொகுதியை குறி வைத்து, தன்னை ஆளாக்கிய பொன்னாருக்கே குழி பறிக்க நினைக்கிறார் என்றனர் வேதனையுடன்.
நயினார் நாகேந்திரன் தரப்பில் நாம் பேசிய போது... ""ராஜ்யசபா எம்.பி. பதவி தருவதாகத்தான் நயினாரை பாஜகவுக்கு அழைத்தனர். ஆனால் கொடுக்கவில்லை. அதன்பிறகு மாநில தலைவர் பதவியை ஆசை காட்டி அதுவும் கொடுக்கவில்லை. நயினார் அ.தி.மு.க.வில் முக்கிய வலுவான பொறுப்பில் இருந்தவர். அவருக்கு குமரி மாவட்டத்திலும் ஆதரவாளர் கள் இருக்கிறார்கள். தமிழக அமைச்சராக இருந்த காலங்களில் நாகர்கோவிலில்தான் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அதனால் இந்த மாவட்ட மக்களிடம் நெருங்கிய தொடர்பு உண்டு. கன்னியாகுமரி இடைத்தேர்தலில் போட்டியிட கண்டிப்பாக சீட் கேட்பார். பொன்ராதாகிருஷ்ணன்தான் அங்கு போட்டியிட வேண்டுமென்ற கட்டாயமும் இல்லை'' என்றனர்.
பொன்னாருக்கு எதிராக நயினார் மட்டுமின்றி, பா.ஜ.க. வில் மேலும் சிலரும் நெருக்கடி கொடுக்க நினைக்கிறார்கள். பாஜக மகிளா மோர்சா தேசிய பொதுச்செயலாளர் வழக்கறிஞர் விக்டோரியா கௌரி, மோடியிடம் நன்கு அறிமுகம் உள்ளவர் என்பதால் இடைத்தேர்தலில் சீட் வாங்கும் முனைப்பில் உள் ளார். அதுபோல் பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தியும் சீட் கேட்க இருப்பதாக அவரின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க தலைமைமீது ஏக அதிருப்தியில் இருக்கும் அ.தி.மு.க. மேல்சபை எம்.பி. நாகர்கோவில் விஜயகுமார் விரைவில் பா.ஜ.க.வில் இணைந்து இடைத்தேர்தலில் சீட் வாங்கிவிட வேண்டும் என டெல்லியில் காய்களை நகர்த்தி வருகிறாராம். இதெல்லாம் பொன்னாருக்கு நெருக்கடியை கொடுக்கும் என்கின்றனர் குமரி பா.ஜ.க.வினர்.
இது குறித்து பொன்ராதாகிருஷ்ணனிடம் நாம் பேசிய போது... இடைத்தேர்தலில் கட்சிநயினார் நாகேந்திரனுக்கு சீட் கொடுத்தால் அவர் போட்டியிடுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. அவர் மட்டுமல்ல கட்சியில் யாருக்கு சீட் கிடைக்கிறதோ அவர்கள் போட்டியிடுவார்கள் என்றார் ரொம்பவும் இயல்பாக.
காங்கிரஸ் பக்கமோ... வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த்தை நிறுத்தி வசந்த குமாருக்கான நற்பெயர்- அவர் இறந்ததால் ஏற்பட்ட அனு தாபம் இரண்டையும் பயன் படுத்தி வெற்றிபெறலாம் என கணக்கிடப்படுகிறது. இதற்காக அகஸ்தீஸ்வரத்தில் உள்ள வசந்த குமாரின் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் முகாம் போட்டுள்ளனர். வசந்தகுமாரின் மனைவிக்கு தன் மகனை தேர்தல் களத்தில் தள்ள விருப்பம் இல்லையாம். இந்த நிலையில் கடந்த எம்.பி. தேர்தலில் கடைசி நொடியில் வசந்தகுமாரிடம் சீட்டை பறிகொடுத்த ரூபி மனோகரன், மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், மாநில பொதுக்குழு ராபர்ட் புரூஸ், எக்ஸ் இளைஞர் காங்கிரஸ் தலைவர் லாரன்ஸ் போன்றோரும் கோதாவில் இருக்கிறார்கள்.
-மணிகண்டன்