அங்கே மண்டேலா! இங்கே குட்டிமணி!

நான் தமிழ்ஈழ தேசத்தின் குடிமகன், என்னை விசாரிக்கின்ற உரிமை இந்தச் சிங்கள நீதிமன்றத்திற்கு; சிங்கள நீதிபதிகளுக்குக் கிடையாது -குட்டிமணியின் இந்த வாக்குமூலம் அதிர வைத்தது.

விடுதலை வீரர்கள் எல்லா இடங்களிலேயும் ஒரே மாதிரி இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் இடம் வேறாக இருக்கலாம்; அவர்கள் சார்ந்த இனம் வேறாக இருக்கலாம்; ஆனால் விடுதலை வீரர்களின் உள்ளம் ஒன்றாகவே இருக்கிறது; எண்ணம் ஒன்றாகவே இருக்கிறது; சொல் ஒன்றாகவே இருக்கிறது; அவர்களின் வாக்குமூலங்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன.

தென்னாப்பிரிக்க போராளி மண்டேலாவின் "‘லாங் வாக் டூ ஃபிரீடம்'’ ’ (LONG WALK TO FREEDOM) என்ற புத்தகத்தைப் பலமுறை படித்தேன். மண்டேலாவும் நீதிமன்றத்தில் நின்று இரண்டுமுறை தன் வாக்குமூலத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

Advertisment

mgr

தம்பி குட்டிமணியின் வாக்குமூலத்தில் இருந்த உணர்வும், மண்டேலாவின் வாக்குமூலத்தில் காணப்படும் உணர்வும் ஒரே மாதிரியானவை. எந்த வேறுபாடும் இல்லாதவை. மண்டேலாவின் வாக்குமூலத்தை நான் படித்தபோது... குட்டிமணியின் முகம்தான் என் கண்ணில் தெரிந்தது.

குட்டிமணியின் வாக்குமூலத்தால் அன்று... தெற்கே பதிந்த என் பார்வை... இன்றும் வேறு திசை நோக்கித் திரும்பவில்லை. மாவீரன் தம்பி குட்டிமணி எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தான்.

மேல்-சபையில் நான் குட்டிமணி விஷயத்தை பேசப்போவது தெரிந்தும் முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., என்னை தடுக்கவில்லை. சபைக்கு, தான் வந்தால் புலவர் பேச்சு தடைபடும் என்பதால் அறையில் இருந்தபடி நான் பேசுவதை ஒலிபெருக்கி மூலம் கேட்டார்.

அன்று நான் மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்தேன். தமிழினம் சாகவில்லை என்பதை குட்டிமணி நிரூபித்திருப்பதாக’’ நான் பேசிக்கொண்டிருந்தபோது என்னையும் அறியாமல் என் முன்பாக இருந்த இரண்டு மைக்குகளையும் வளைத்துவிட்டேன். அந்தளவு நான் உணர்ச்சி மேலிட இருந்தேன்.

"வீரர்கள் விதைக்கப்படுகிறார்கள்... புதைக்கப்படுவதில்லை'’என்று அடிக்கடி சொல்வதில் உள்ள ஆழம் எனக்கு அப்போதுதான் தெரிந்தது. விதைக்கப்படும் ஒரே ஒரு விதையிலிருந்து ஓராயிரம் விருட்சங்கள் உருவாகின்றன.

இலங்கை வெலிக்கடைச் சிறையில் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்டோர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள்.

வழக்கொன்றில் மரணதண்டனை விதிக்கப்பட்டபோது... "நான் இறந்தபிறகு என் கண்களை தானமாகக் கொடுங்கள். தமிழீழம் மலர்வதை என் கண்கள் காணவேண்டும்'’’ என்று சொன்னான் தம்பி குட்டிமணி. அதனாலேயே திட்டமிட்டு, அவனின் கண்களைப் பிடுங்கி நசுக்கி, அவனைக் கொன்றிருக்கிறார்கள்.

அன்று அவர்கள் சிந்திய ரத்தம் செத்துக்கிடந்த தமிழ் இன உணர்வுக்கு புத்துயிர் கொடுத்தது.

இன்று அந்த உணர்வுகள் உலகம் முழுவதும் பரந்து கிடக்கின்றன. அவை தமிழ்ச் சமுதாயத்தில் ஊடுருவிப் பாய்ந்திருப்பதை உணர்கிறேன். அன்றிலிருந்து நான் எந்த நேரமும் ஈழ விடுதலை பற்றியே சிந்திக்கின்ற மனநிலைக்கு வந்துவிட்டேன்.

த்தியாயம் 33-ல் நான் சொல்லியிருந்தபடி....

என் கார் முரசொலி அலுவலக வாசலில் நிற்பதைப் பார்த்துவிட்டு புரட்சித்தலைவரிடம் யாரோ எதுவோ சொல்ல... நள்ளிரவில் தலைவர் என்னை அழைத்துப் பேசியபோது...

""விடுதலைப்புலிகளுக்கு என்னைவிட கலைஞர் உதவி செய்துவிட்டாரா?''’’எனக் கேட்க... ""அவரும் செய்யவில்லை... நீங்களும் இதுவரை செய்யவில்லை''’’ என நான் சொல்ல... ""நான் அவர்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன். ஜெயவர்த்தனே டெல்லிக்கு வருகிறார்...’வந்துவிட்டுச் செல்லட்டும்; நானே அவர்களை (விடுதலைப் புலிகளை) அழைத்து என்ன உதவி தேவைப்பட் டாலும் செய்கிறேன். அது மாத்திரம் அல்ல, நான் உங்களை அரசவை கவிஞராக நியமிப்பதாகவும் முடிவு செய்திருக் கிறேன்'' ’எனச் சொன்னார்.

சொன்னபடியே செய்தார் புரட்சித்தலைவர்.

தம்பி பிரபாகரனை அழைத்துச் பேசினார். ஏராளமான பண உதவிகள் செய்தார்.

தீவிர விடுதலைப் புலிகளின் ஆதர வாளராகவே புரட்சித்தலைவர் மாறிப்போனார்.

ஈழ விடுதலை மீது எனக்கு இப் படி பேரார்வம் ஏற் படக் காரணம்.... ஈழப் போராளிகளுடனான என் பிரியம்தான். அந்த விஷயத்தில் நான் மன்னன் வரகுண பாண்டியன் போன்றவன். அப்படியென்ன அந்த மன்னனின் விசேஷம்? என்பதைச்...

(சொல்கிறேன்)

படம் உதவி: ஞானம்

__________

Advertisment

பூவுக்குத் தாலி கட்டிய தென்றல்!

சத்யஜோதி தியாகராஜன் தயாரிப்பில், கே.ரங்கராஜ் இயக்கத்தில், தம்பி இளையராஜா இசையில், சிவகுமார்-ராதா நடித்த படம் ‘"மனிதனின் மறுபக்கம்'. எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், எஸ்.ஜானகி யும் பாடிய அருமையான பாடல் ஒன்று... நான் எழுதியது.

பல்லவி: பெண்

கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன..

நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன..

நீயென்ன மாயம் செய்தாய்

mgr

நீருக்குள் தீயை வைத்தாய்

நீ தந்த காதல் சொந்தம்

வாழட்டும் கண்ணா என்றென்றும்

சரணம்-1: ஆண்:

வானத்தில் ஊஞ்சல்கட்டி ஆடும் அந்த மேகம்

பூமிக்கு நீரைச்சிந்தும் சொந்தம் என்னம்மா

நீயந்த வானம் இந்த பூமி இங்கு நானே

நெஞ்சத்தின் தாகம் என்று தீரும்

சொல்லம்மா

பெண்:

காலங்கள் செல்லச் செல்ல

ஆயுள் நின்று போகும்

ஆனாலும் காதல் என்னும்

சொந்தம் என்றும் வாழும்

நீலம்பூத்த கண்கள் ரெண்டும்

உன்னை வைத்து கொள்ளட்டும்

நீயும் நானும் மாலை சூடும்

காலம் எந்த காலம்- இந்த

சரணம்-2: பெண்:

பூவுக்கு தாலி கட்ட போகும் தென்றல் காற்று

போகட்டும் நீயும் நின்று வாழ்த்துச் சொல்லி போ

காதுக்குள் நாளை அந்த மேளச்சத்தம் கேட்கும்

கையோடு நீயும் கொஞ்சம் மாலை கட்டித்தா

ஆண்:

தாளத்தை தள்ளி வைத்து

ராகம் எங்கு போகும்

பாசத்தை தள்ளி வைத்து

ஜீவன் எங்கு வாழும்

பொன்னில் பாதி பூவில் பாதி

பெண்ணின் வண்ணம் நான் கண்டேன்

காதல் வேதம் கண்ணில் ஓதும் கண்ணே

கட்டிப்பொன்னே இந்த

(பாட்டுக் கச்சேரி தொடரும்)