டந்த நான்காண்டுகளாக தங்கள் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வுசெய்யவும் புதிய திட்டங்கள் அறிவிப்பதற்குமாக மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்துவரும் தமிழக முதல்வர் ஸ்டாலின், கடலூர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 21, 22, ஆகிய இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

cm

21-ஆம் தேதி காலை சென்னையிலிருந்து புறப்பட்ட முதல்வர், மதியம் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்டமான கூட்டத்தில் கலந்துகொண்டார். விழாவில் வருவாய்த்துறை பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 11,716 பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின்கீழ் பட்டா வழங்கினார். 44,690 பயனாளிகளுக்கு 387 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் அசத்தினார்.

மேலும் 10 புதிய திட்டங்களையும். அறிவித்தார். அதில் திட்டக்குடி, விருத்தாசலம் பகுதிகளில் வாழும் விவசாய மக்கள் பயன் பெறும் வகையில் திட்டக்குடி கீழ்ச்செருவாய் பகுதியில் அமைந்துள்ள வெலிங்டன் நீர்த்தேக்க கரைகளைப் பலப்படுத்தவும் வாய்க்கால்களை புனரமைக்கும் பணிகளுக்குமாக 130 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். (நமது நக்கீரன் இதழில் பலமுறை இதனைச் சுட்டிக்காட்டி எழுதியிருந்தோம். அதன் எதிரொலியாகத்தான் முதல்வர் 130 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.) இதனால் விவசாயிகள் நக்கீரனுக்கு நன்றி தெரிவித்தனர்.

Advertisment

அதேபோல் வீராணம் ஏரி புனரமைப் புக்காக 63 கோடியே 50 லட்சம், கடலூர் மாவட்டத்தில் பருவமழைக் காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளைத் தடுக்க தென்பெண்ணை ஆற்றில் தடுப்புச்சுவர் கட்ட 57 கோடி, சிதம்பரம், புவனகிரி, முட்லூர் வழியாக சேத்தியாத்தோப்பு வரை செல்லும் சாலையை விரிவாக்கம்செய்ய 50 கோடி, எனப் பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

cm

முதல்வர் வருகையை முன்னிட்டு கட்சியினர், பொதுமக்கள் ஏராளமாக திரண்டுவந்து வரவேற்க முதல்வர் காரி லிருந்து இறங்கி நடந்துசென்று பொது மக்களிடம் கைகுலுக்கினார். மக்களிடமிருந்து செல்போனை வாங்கி செல்ஃபி படம் எடுத்துக்கொடுத்து மகிழ்ச்சியடைந்தார்.

மாலையில் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகில் மாற்றுக் கட்சியினர், தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார் சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன். இந்த பிரமாண்டமான நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளிலிருந்து 2000-க்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் முதல்வர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்,

மறுநாள் காலை அன்பில் மகேஷ் கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்திருந்த “பெற்றோர்களைக் கொண்டாடுவோம்’’ மாநாட்டு மேடைக்கு முதல்வர் வரும்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வரை வரவேற்றார். பள்ளிப் பிள்ளைகளுக்குத் தேவையான உபகரணங்களை சீர்வரிசையாக முதல்வர் கையில் கொடுத்து மேடைக்கு அழைத்துச்சென்றார் மகேஷ். மேடையில் பள்ளிப் பிள்ளைகளுடன் அமர்ந்து மகிழ்ந்தார் முதல்வர். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி. கணேசன், எஸ்.எஸ்.சிவசங்கர், கடலூர் எம்.பி. விஷ்ணுபிரசாத், சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். பள்ளி கல்வித்துறை சார்பில் "அப்பா' என்ற செயலியை முதல்வர் வெளியிட்டார். இந்த செயலி மூலம் பெற்றோர் ஆசிரியர்களுக்கான அன்றாட கல்வி சம்பந்தப்பட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளமுடியும். கல்வித் துறை செயல்படுத்தும் திட்டங்களையும் தெரிந்துகொள்ள முடியும். இதன் மூலம் 46,000 அரசுப் பள்ளிகள், 12,000 தனியார் பள்ளிகள் பயனடையலாம்’’ என்று தெரிவித்தார் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.

மாநாட்டில் மலர் ஒன்றையும் வெளியிட்டனர். மேடையில் அமைச்சர் கணேசன் திருவள்ளுவர் சிலையை நினைவுப் பரிசாக முதல்வருக்கு வழங்கினார். மாநாட்டில் பேசிய முதல்வர் ""நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி'' என்ற திரைப்பட பாடலைப் பாடி தனது பேச்சைத் துவக்கினார்.

""பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழக முழு வதுமுள்ள 38 மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து பள்ளிகளை ஆய்வுசெய்து அதன் தரத்தையும் பிள்ளைகளின் கல்வித் தரத்தையும் உயர்த்தியுள்ளார். கல்வித்துறையில் பல்வேறு புதுமையான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன''’என்ற முதல்வர், “தரமான கல்வி வழங்கு வதில் இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது என்பதை ஒன்றிய அரசின் நிதித்துறை சார்பில் நடத்தியுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

ஆனால் தமிழ்நாட்டுக்கு கல்வித்துறை தரவேண்டிய 2,052 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது. 43 லட்சம் பள்ளிக் குழந்தைகளின் நலனுக்காக செலவு செய்யவேண்டிய தொகை அது. தேசியக் கல்விக்கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் அந்த நிதியை தர மறுக்கிறது ஒன்றிய அரசு. தேசிய கல்விக்கொள்கை சமூக நீதிக்கும், தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் வைக்கின்ற வேட்டாகும். எந்த மொழிக்கும் நாம் தனிப்பட்ட முறையில் எதிரிகள் இல்லை. ஆனால் எந்த மொழியையும் திணிக்க முயற்சித்தால் அந்தத் திணிப்பை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம், எதிர்ப் போம்''’’ என்று ஆவேசமாகக் கூறினார்.

-எஸ்.பி.எஸ்.