திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்ட விவசாயிகளை வாழ வைப்பதற்காக துவங்கப்பட்டது நந்தன் கால்வாய் திட்டம். இது 200 ஆண்டுகால வரலாறு கொண்டது. பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில் திருவண்ணா மலை மாவட்டம் பள்ளிகொண்டாபட்டு அணைக்கட்டிலிருந்து 15 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் நந்தன் கால்வாய் உருவாக்கப்பட்டது. காலப்போக்கில் வாய்க்கால் தூர்ந்து மேடுதட்டிக் காடாகிப்போனது. 15 ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலம் வானம் பார்த்த பூமியாக மாறிப்போனது. நந்தன் கால்வாயை சீர்ப்படுத்துமாறு 1886ஆம் ஆண்டில் விவசாயிகள் கேட்டுக் கொண்டபோதும் செயல்படுத்தவேயில்லை. இதற்காக நில வரியை நாலு ரூபாய் ஆறணாவிலிருந்து ஆறு ரூபாய் ஒன்பது அணாவாக உயர்த்த மட்டுமே செய்தது.

nn

அதன்பிறகு 1939-ல் சென்னை மாகாண பிரதமராக இருந்த ராஜாஜியிடம் விவசாயிகள் மனு கொடுக்க, அந்த மனுவை தென்னார்க்காடு ஜில்லா கலெக்டருக்கு அனுப்பி வைத்தார் ராஜாஜி. அதை ஆய்வு செய்த கலெக்டர், திருக்கோவிலூர் அருகே பெண்ணையாற்றில் அணைகட்டி, அங்கிருந்து கால்வாய் வழியாக பனமலை ஏரி வரை தண்ணீர் கொண்டு வருவதாக புதிய திட்டத்தைத் தீட்டினார். ஆனாலும் திட்டத்தை செயல்படுத்தாமல் 20 வருடங்கள் கடக்க... நாடும் சுதந்திரம் பெற்றது.

1.12.1958-ல் அப்போதைய முதல்வர் காமராஜரிடம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி விவசாயிகளோடு சென்று மனு கொடுக்க, அப்போதைய மராமத்து மந்திரியான கக்கனை அனுப்பிப் பார்வையிடச் செய்தார் காமராஜர். பிறகு 3.9.1960-ல் காமராஜரையே நேரில் அழைத்து வந்து இப்பகுதியை சுற்றிக்காண்பித்தார் கோவிந்தசாமி. அப்போது காமராஜர், "அதற்கென்ன, பணிகளை செய்துவிட லாம்''’என்று நம்பிக்கையூட்டிவிட்டுப் போனார். அதன்பின்பும் பணி நடக்கவில்லை. கோவிந்த சாமி இதுகுறித்து சட்டமன்றத்தில் பலமுறை பேசியதால், அவரை சட்டமன்ற வளாகத்தில் பார்க்கும்போதெல்லாம், "இதோ நந்தன் கால்வாய் வருகிறது!'' எனக் கிண்டலடிக்கு மளவிற்கு நிலைமை ஆகியிருக்கிறது.

Advertisment

dd

1969-ல் ஆட்சி மாற்றத்துக்குப்பின், தி.மு.க. ஆட்சியில் அண்ணாவையும், கலைஞரையும் இப்பகுதிக்கு அழைத்துவந்த கோவிந்தசாமி, நந்தன் கால்வாய் திட்டத்தின் அவசியத்தை விளக்கினார். இதன்பிறகு 29.9.1970-ல், நந்தன் கால்வாய் திட்டத்திற்காக 31 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நந்தன் கால்வாயை சீரமைக்கும் பணி வருடக் கணக்காக நடந்தது. பணி முடிவடையும் தறு வாயில் எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கைப்பற்றினார். அவரது ஆட்சியில் அத்திட்டம் கிடப்பில் போடப்பட, அதன்பின் மீண்டும் 10.1.1990-ல் தி.மு.க. ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுரு கன் பார்வையிட்டு, திட்டத்தை முழுமையாக நிறை வேற்ற முப்பத்தி எட்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக அறிவித்தார். பணி துவங்குவதற்குள் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வர, மீண்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

"ஆங்கிலேயர் ஆட்சிக்குப்பின் இத்திட்டமானது, திருவண்ணா மலை மாவட்டம் துரிஞ்சலாற்றின் குறுக்கே கீரனூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டிலிருந்து நந்தன் கால்வாய் துவங்கி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கலிங்கன், காட்டுமலைய னூர், கொளத்தூர், பாப்பந்தாங்கல் உள்ளிட்ட 14 கிராம ஏரிகளை நிரப்பி, நந்தன் கால்வாய் வழியாக விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மாதாம்பூண்டி உட்பட மொத்தம் 36 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கு வதற்கான திட்டமாக உருவாக்கப் பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 70 கிராமங்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 50 கிராமங்களும் இதனால் பயனடையக்கூடும். ஆனால் தொடர்ச்சியாக செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

Advertisment

நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்தக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தியதன் காரணமாக, 2013-14ம் ஆண்டில் இதற்காக 441 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. திட்டம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதன்பிறகு 4 -2.2.2017-ல், 988 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டது.

இப்படி நந்தன் கால்வாய் திட்டத்துக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டபோதும் ஆட்சி மாற்றங்களால் திட்டம் முழுமை பெறாமல் இழுத்துக்கொண்டே சென்றதில் தற்போதுவரை இத்திட்டப்பணிகள் மோசமான நிலையிலேயே உள்ளன.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் எழுத்து மூலமாக இத்தகவல்களை அளித்துள்ளனர்'' என்கிறார் கொசப் பாளையத்தை சேர்ந்த ஐ.என்.டி.யு.சி. சங்கத் தலைவர் அய்யனார்.

இதுகுறித்து மேலும் கூறுகையில், "எங்கள் முன்னோர்கள் காலத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் எங்கள் காலத்திலும் நிறைவு பெற வில்லை. எங்கள் பிள்ளைகள் காலத்தி லாவது நிறைவடையுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்தத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்துள்ளேன். இது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இனிமேலாவது தமிழக அரசு நிறைவேற்றுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன'' என்று நம்பிக்கையோடு கூறுகிறார் அய்யனார்.

"திருவண்ணாமலை மாவட்டத் தில் துவங்கி, விக்கிரவாண்டி தொகுதியி லுள்ள எந்த ஏரிக்கும் நந்தன் கால்வாய் திட்டத்தின் மூலம் இதுவரை தண்ணீர் வந்து நிரம்பியது கிடையாது. இந்தத் திட்டத்தின் கதாநாயகனாக இருந்த மறைந்த முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமியின் மார்பளவு சிலை மட்டும் நினைவுச்சின்னமாக பனமலை ஏரிக்கரையில்அமைக்கப்பட்டுள்ளது. கோவிந்தசாமியின் முயற்சி எப்போது தான் நிறைவேறுமோ!'' என்கிறார் கெடார் கிராமத்தைச் சேர்ந்த சேட்டு.

இந்த நிலையில், "துறிஞ்சலாற்று அணைக்கட்டு மூலம் உருவாக்கப்பட்ட நந்தன் கால்வாய் திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்காது. எனவே சாத்தனூர் அணை நிரம்பி பெண்ணையாற்றில் திறந்து விடப்படும் உபரி நீரை துறிஞ்சலாறு வழியாக சமுத்திரம் ஏரியில் நிரப்பி, அங்கிருந்து நந்தன் கால்வாய் வழியாக தண்ணீரைக் கொண்டு வருவதற்கான திட்டத்தையும் அதிகாரிகள் வகுத்துள்ளனர்.

இப்படி நந்தன் கால்வாய் திட்டத்திற்காக ஏகப்பட்ட கோடிகளை ஒதுக்கீடு செய்தனர். ஒவ்வொரு ஆட்சியின் போதும் ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சம் பணிகள் நடந்தன. முழுமையாகப் பணிகள் நிறைவடைந்து பனைமலை ஏரிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. திட்டம் பல கோடிகளை விழுங்கியுள்ளதே தவிர விவசாயிகளான எங்களுக்கு எந்தவிதப் பலனும் கிடைக்கவில்லை'' என்கிறார் என்கிறார் ஆசாரங்குப்பம் பிரபு

எனவே, "இனிவரும் காலங்களில் நதிநீர் இணைப்புத் திட்டங்களின் மூலம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மத்திய மாநில அரசுகளின் நிதி மூலம் நந்தன் கால்வாய் சம்பந்தமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்'' என்கிறார் விஸ்வரெட்டி பாளையம் ஜெகதீஸ்வரன்.

"மேட்டூர் அணை நிரம்பி வெளியேறும் உபரி நீரை துரிஞ்ச லாற்றில் இணைத்து, அங்கிருந்து சமுத்திரம் ஏரிக்கு கொண்டுவந்து, அங்கிருந்து நந்தன் கால்வாய் திட் டத்தை செயல்படுத்துவதற்கு 2004ஆம் ஆண்டு 38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டமும் கிடப்பில் கிடக்கிறது. நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றித் தருவோமென்று ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல்வாதிகள் வாக்குறுதி அளித்துவிட்டு, தேர்தல் முடிந்தபிறகு இதுகுறித்து எந்தவொரு செயலையும் முன்னெடுப்பதில்லை'' என்கிறார் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சுபாஷ்.

சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நந்தன் கால்வாய் திட்டத்தை அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று நிறைவேற்றப்போவதாக இடைத்தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டு தற்போது வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா தேர்தலின்போது கிராம மக்களிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.

எனவே தி.மு.க. ஆட்சி நிறைவு பெறுவதற்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அவர் முழுமுயற்சி எடுப்பாரென்று நம்புகிறோம் என்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.